வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!
சினிமாவில் பிசியாக இருந்தவரை வீட்டில் உட்கார வைத்துவிட்டு, வீட்டில் இருந்தவர்களை சினிமாவில் பிசியாக மாற்றி விட்டது முந்தைய தேர்தல்.
சரி, அவுங்கதான் கை விட்டுட்டாங்க. இவுங்களாவது அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கக் கூடாதா?
‘அது முடியாது. அதிக செலவாகும்’ என்றால்.. இவர்கள் நடிக்கிற படத்துல அவருக்கு வாய்ப்பாவது கொடுத்திருக்கலாம்.
தேர்தல் அரசியலை விட திரை அரசியல் மோசமா இருக்கு. நகைச்சுவை நடிப்பில் புதிய பரிமாணங்களை கொண்டு வந்த, வடிவேலு என்கிற கலைஞன் இல்லாத தமிழ் சினிமாவால் நஷ்டம் பார்வையாளர்களுக்குத்தான்.
அது எப்படியோ போகட்டும். வர இருக்கிற வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’ படம் வெற்றியடைய வாழ்த்துகள்.
சரி. தேர்தல் பிரசச்சாரத்தில் அதிமுகவிலும் நடிகர்கள், நடிகைகள் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
திமுக விற்காக அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை நடிகர் குமரிமுத்து, சந்திரசேகர் போன்றவர்கள் எதிர்பார்ப்பில்லாமல் கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். அதனாலேயே அவர்கள் பல பட வாய்ப்புகளை இழந்தும் இருக்கிறார்கள். கலைஞர் மீதும் கட்சி மீதும் ஆழ்ந்த பற்று இருப்பதால் அந்த நஷ்டத்தை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.
இவர்களுக்குப் பின் திமுக விற்கு வந்த சரத்குமார், நெப்போலியன் போன்றவர்கள் பெரிய அளவில் கட்சியால் கொண்டாடப்பட்டார்கள். இப்போது குஷ்பு. சரத்குமார், நெப்போலியன், குஷ்பு இவர்களுக்கு திராவிட இயக்க அரசியல் வரலாறோ, மொழி உணர்வோ அவ்வளவு ஏன் கலைஞரின் எழுத்துக்கள் பற்றி கூட தெரியாது.
ஆனால் குமரிமுத்துவிற்கும் சந்திரசேகருக்கும் திராவிட இயக்க வரலாறும் தெரியும். மொழி உணர்வும் உண்டு. தனித் தமிழில் சிறப்பாக பேசக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். கலைஞரின் வசனங்கள் எழுத்துக்கள் இவர்களுக்கு மனப்பாடம்.
ஆனால் இவர்கள் இருவரும் அப்போதும் இப்போதும் தாங்கள் புறக்கணிப்படுவதாக உணர்ததில்லை. முன்பை விட தீவிரமாக கட்சி பணி செய்தார்கள். செய்கிறார்கள். கட்சியை பயன்படுத்தி தன்னை முன்னேற்றிக் கொள்ளும் திட்டம் இல்லாதவர்கள். அதனால் தொடர்ந்து திமுக வில் பயணிக்கிறார்கள்.
இப்போது நடிகர்கள் சந்திரசேகர், குமரிமுத்து இவர்களைவிட அதிக பிரபலமாக இருக்கிற நடிகர்கள் உதயநிதி ஸ்டாலினும் அருள்நிதியும்.
திமுகவிற்கான தேர்தல் பிரச்சாரத்தில் இவர்கள் இருவரும் ஏன் கலந்து கொள்ளவில்லை?
*
4.04.2014 அன்று facebook ல் எழுதியது
5 thoughts on “வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!”