மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

நேர்காணல்; வே. மதிமாறன்

mathi.jpg

மெல்லிசை மன்னருடன், வே. மதிமாறன்

சொல்லத்தான் நினைக்கிறேன்

மெல்லிசை மன்னர் உங்களின் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
உண்மை அதுதான்.

சிக்கலான நேரங்களில், உங்களின் தனிமை அவரோடு கழிந்து இருக்கும்.

‘மனசே சரியில்லை’ என்று நீங்கள் சோர்ந்த நேரங்களில், “மயக்கமா…. கலக்கமா… மனதிலே குழப்பமா…” என்று உங்களை ஆறுதல் படித்தியிருப்பார்.

“இல்லை, இந்தப் பிரச்சினைக்கு அழுதே தீரவேண்டும்” என்றால், “கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு” என்று உருக்கும் மெட்டோடு உங்களோடு சேர்ந்து அழுதிருப்பார்.

உற்சாகமான நேரங்களில், உங்களை இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக்க, “மதன மாளிகையில்… மன்மத லீலைகளாம்…’ என்கிற வித்தியாசமான காம்போஸிஸனோடு இனிமையான மெட்டில் உங்களை மயக்கி இருப்பார்.

ஆம், அந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனோடுதான் இந்த சந்திப்பு.

யானை தன்னைவிட பலவீனமான பாகனுக்கு கட்டுப்பட்டு இருப்பதுபோல், இந்த நுட்பமான இசையமைப்பாளர் தன்னிடம் உள்ள அற்புதமான திறமையை நடிகருக்கும், கவிஞருக்கும், இயக்குநருக்குமே காணிக்கையாக்குகிறார்.

‘என் திறமையே அவர்களால் வந்ததுதான்’ என்று உறுதியாக நம்புகிறார்.

‘இசை வார்த்தைகளை விட நுட்பமானது’ என்கிற கருத்தை முற்றிலுமாக தள்ளிவிடுகிறார்.

சிறந்த கலைஞனின் மனநிலை, ‘ஒளிவு மறைவின்றி, கள்ளம் கபடமின்றி இருக்கும்’ என்பார்கள். ஆம், அதற்கு ஓர் உதாரணம் போல் இருக்கிறார் மெல்லிசை மன்னர்.

ஒரு கோடை மழைபோல் பாட்டும், பேச்சுமாக கொட்டியது அவர் பேட்டி,

* வறுமையான குடும்பத்தில் பிறந்த நீங்க, ஏகலைவன்-துரோணரை தூரமா இருந்து பார்த்து, வில்வித்தைக் கத்துகிட்டா மாதிரி, உங்க சொந்த முயற்சியிலே இசையை கத்துக்கிட்டு மிகப் பெரிய இசையமைப்பாளரா உருவானீங்க. இன்றைய உங்களின் நிறைவான வாழ்க்கையில் இருந்து, உங்களின் கடந்த கால வாழ்க்கைக்கு போயிட்டு உடனே திரும்பி வாங்களேன்…

எனக்கு அப்பா கிடையாது. அம்மாதான். கேரளாவில் கண்ணணூரில் ஜெயிலரா இருந்த என் தாத்தாதான் என்னை வளர்த்தார். எனக்கு பள்ளிக்கூடம் போறதுக்கு விரும்பம் கிடையாது.
ஏன்ன, ‘புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே’ அப்படிங்கறா மாதிரி எனக்கு இசையிலேதான் நாட்டம்.

எங்க ஊர்ல நீலகண்ட பாகவதர்ன்னு ஒரு இசை அறிஞர், சின்ன பசங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தார். அத தூரமா இருந்து நான் கவனிப்பேன்.

இப்படி ஒரு வருடம் போன பிறகு என்னை கவனித்த பாகவதர், ‘கூலிக்கு மாரடிக்கிறேன். ஒரு பயலுக்கும் இசை வரல. உனக்கு காசு வாங்காம சொல்லிக் கொடுக்கிறேன்’ ன்னு, 13 வயசிலேயே என்னை அரங்கேற்றம் பண்ண வச்சார்.

பிறகு ஜெயிலரான எங்க தர்ததாவும் பாகவதரும் நண்பர்களா இருந்ததாலே ஜெயில்ல ஒரு நாடகம் போட பாகவதருக்கு வாய்ப்பு கிடைச்சது.

அந்த நாடகத்துல நான் லோகிதாசனா நடிச்சேன். நாடகம் பார்க்க வந்த உயர் அதிகாரிகள் என் நடிப்பை பாத்திட்டு என்னை நடிகனா வர உற்சாகப்படுத்தினது மட்டுமல்லாம, திருப்பூர்ல இருந்த ஜுபிடர் பிக்சர்ஸல என்னை சேர்த்து விட்டாங்க.

ஜுபிடர் பிக்ஸர்ல அப்போ கண்ணமாவை வைச்சு ‘கண்ணகி’ படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அதலு எனக்கு பால கோவலன் வேசம்.
எனக்கு ஜோடியா நடிச்ச பொண்ணு என்னை விட பெரிய பொண்ணா இருந்தது. அவள படத்துல இருந்து தூக்காம, என்ன தூக்கிட்டாங்க. அதனால அதே கம்பனியிலே ஆபிஸ்பாயா ஆனேன்.

அங்கே எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். பாப்பா போன்ற இசையமைப்பாளரெல்லாம் என்னோட இசை அறிவைப் பார்த்துட்டு  என்னை அவுங்க கூட சேர்த்துக்கிட்டாங்க.

* அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா?

-தொடரும்

5 thoughts on “மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

  1. தமிழ்த் திரையுலகில் இவரது இசையின் பாதிப்பு இல்லாத இசையமைப்பாளரே இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்டியின் அடுத்த பகுதிகளுக்கும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.

  2. மதி ஏற்கனவே நீங்கள் எழுதிய இதழில் படித்ததுதான் என்றாலும் இன்னும் புதுமையாகவே இருக்கிறது.

    நன்றி

  3. தங்களின் படைப்புகள் அனைத்தையுமே படித்து வருகிறேன், மிகவும் பயனுள்ளதாக உள்ளது, மெல்லிசை மன்னருடனான பேட்டியை தொடர்ந்து படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன் – நாகூர் இஸ்மாயில்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading