கலைஞருக்கு எதிராக மாமா மாலுனும் வாஸந்தி மாமியும்
தொடர்ச்சி 2
மாலன் எழுதுறாரு, “பாம்பன் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு. நம் அரசியல் தலைவர்களின் அடி மனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக்கொணர்ந்து விட்டது“
அதையே நாம் இப்படி எழுதுவோம், கலைஞரின் ராமன் பற்றிய பேச்சுக்கு பிறகு, நடுநிலையாளர்களாக, மதநல்லிணக்கவாதியாக, சிறுபான்மையினரின் ஆதரவாளராக வேஷம் போட்டுக்கொண்டிருந்த, பார்ப்பன பயங்கரவாதிகள் தங்கள் உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
அதற்கு ஒரு எடுத்துகாட்டு ‘மாமியின் வெர்ஷனில்‘ இருந்து பார்ப்போம்,
“அரசியலில் பதவியும் புகழும் கீர்த்தியும் செல்வாக்கும் இருக்கும் வரை எந்தக் கொம்பனும், கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் சாட்சாத் ராமன் உள்பட, நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் ஒரு மூத்த அரசியில் தலைவருக்கு வந்துவிட்டால், அது உச்சநீதிமன்றம் வரை போய்விடும். நீதிமன்றத்தில் ராமன் ஆஜர் ஆகப் போவதில்லை. ‘நெற்றிக்கண் திறப்பினும் கோதண்டத்தை எடுத்தாலும் குற்றம் குற்றமே‘! என்று சொல்லும் வாய்ப்பு பகுத்தறிவுவாதிக்குக் கிடைக்காது. ஆனால் மூக்கு உடையலாம். ஆக வயதிற்கு விவேகம் வேண்டாமா என்று நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கேட்கலாம்.”
“நமது அரசியல் தலைவர்கள், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர் என்று கொண்டாடப்படும் மூத்தவர்கள் பதவி தரும் போதையால், உன்மத்தத்தால் எத்தனை கேவலமாக, நாகரிகமற்ற மொழிப் போரில் இறங்குவார்கள்…….”
“ராமர் பாலத்தை இடிக்காமல் திடடத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை மூன்று மாத தவணைக்குள் ஆராய்வதாக உசச் நீதிமன்றத்தில் சொன்னது. (காங்கிரஸ் அரசு) கருணாநிதி இதை சற்றும் எதிர்பார்த்து இருக்கமாட்டார். அருடைய ஏமாற்றம் புரிந்து கொள்ளக் கூடியததான். எந்த காவியத் தலைவனை திராவிட இயக்கம் சளைக்காமல் இடித்து வந்ததோ, அதே ராமனின் பெயரில் அவரது கனவுத் திட்டம் அடிவாங்கிவிடும் என்ற சாத்தியம் அவமானகரமானது. அவரது நாடு தழுவிய கீரத்திக்கும், அரசியல் சக்திக்கும் வயதுக்கும் தோல்வியையும் அவமானத்தையும் தாங்க வேண்டிய அவசியம் இல்லை. தாம் போட்ட கணக்கு தப்பிவிட்டது என்ற ஆத்திரத்தை அடக்க வேண்டும் என்ற பக்குவம் அரசியலில் பழம் தின்று கொட்டையை உமிழ்ந்துவிட்ட கருணாநிதிக்கு அவசியம் என்று படவில்லை.”
“எத்தனை வயதானாலும், எத்தனை செல்வாக்கிருந்தாலும் நா காப்பது நல்லது. இல்லையென்றால், வயதானதற்கும் பெற்ற அனுபவங்களுக்கும் அர்த்தமில்லை.” இந்த வரிகளில் முதல்வர் மீது வேதாந்திக்கு இருந்த அதே ஆத்திரம் வாஸந்தியிடமும் தெரிகிறது.
‘எந்தக் கொம்பனும், கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் சாட்சாத் ராமன், பகுத்தறிவுவாதிக்கு, மூக்கு உடையலாம், வயதிற்கு விவேகம் வேண்டாமா, பதவி தரும் போதையால், உன்மத்தத்தால் எத்தனை கேவலமாக, நாகரிகமற்ற, எந்த காவியத் தலைவனை திராவிட இயக்கம் சளைக்காமல் இடித்து வந்ததோ, ஆத்திரத்தை அடக்க வேண்டும் என்ற பக்குவம் அரசியலில் பழம் தின்று கொட்டையை உமிழ்ந்துவிட்ட கருணாநிதிக்கு, நா காப்பது நல்லது. இல்லையென்றால்“ இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற உளவியல், கலைஞர் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும், ஜென்ம விரோதத்தையும் வெளிபடுத்துகின்றன.
ஆனால் மாலனோ இல.கணேசன் பாணியில், “ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? வரலாற்று ஆதாரம் உண்டா? மது அருந்துபவர், மாமிசம் உண்பவர் என்பது போன்ற கேலிகளும், விவாதத்திற்கு தயாரா? என் சவால்களும் அவரது ஆரம்ப திராவிடக் கழக நாட்களை நினைவூட்டுகின்றன. ஆனால் இதை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசுவதுதான் பொருத்தமானதாக இல்லை.” என்கிறார்.
நரேந்திர மோடி என்கிற ஒருவன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டல்ல, படுத்தக் கொண்டு, திட்டமிட்டு இஸ்லாமிய மக்களை கொலை செய்கிறான். அதை கேட்பதற்கு வக்கற்றவர்கள், அல்லது அந்தக் கொலைகளை விரும்புகிறவர்கள் ஐனநாயக ரீதியாக ஒருவர் கருத்துசொல்வதை கண்டிக்கிறார்கள். (சுப்ரீம் கோர்ட்டுக்கு ‘ஜட்ஜா‘ போறதுக்கான முழு தகுதியும் உள்ளவர்கள்.)
கம்யூனிசத்திற்கு நேர் எதிர் கருத்து கொண்ட பிற்போக்காளர்கள், மதவாதிகள், கம்யூனிச விரோதிகள் தங்கள் மோசடி கருத்தை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது மட்டும் மார்க்சியத்தை வெறும் மேற்கோளாக பயன்படுத்துகிற மோசடிவேலையை செய்வார்கள். அப்படிதான் இந்த ‘மோசடி மாலனும்‘ மார்க்சை மேற்கோள் காட்டுகிறார்:
“மதம் ஒரு அபின் என்ற கருத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் முன், அதை விளக்கும் முகமாக, மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜந்துக்களின் பெருமூச்சு, இதயம் இல்லாத உலகின் இதயம் என்று சொல்கிறார் மார்க்ஸ்.” இப்படி பிரித்து மார்க்சையே மதவாதியாக சித்தரிக்கிறார்.
சரியாக 150 ஆண்டுகளுக்கு முன், 1847ல் மார்க்ஸ்–எங்கல்ஸால் எழுதப்பட்ட ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை‘ இப்படி துவங்குகிறது; “ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்–கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும் ஜாரரசனும், மெட்டர்னிகும் கிசோவும், பிரெஞ்சுத் தீவிரவாதிகளும் ஜெர்மன் உளவாளிகளுமாய், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.”
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதை ‘கடவுள்‘ என்று சொல்வதுதான் உலக வழக்கம்.ஆனால் இவர்களோ, கம்யூனிசத்தை ‘பூதம்‘ என்கிறார்கள். ‘கடவுள்‘ என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஏன்?
கம்யூனிசத்துக்கு எதிராக சேர்ந்து இருப்பவர்கள்தான் கடவுள் ஆதரவாளர்கள், போப்பாண்டவர்கள் போன்ற மதவாதிகள். அதனால்தான் அதை ‘புனிதக் கூட்டு‘ என்ற ஆன்மீக வார்த்தையால் அடையாளப்படுத்துகிறார்கள். பூதம் என்ற வார்த்தையை கடவுளுக்கு எதிரான, ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சாத்தான், பூதம், பேய் இவைகளை ஓட்டுவதுதானே மதவாதிகளின் வேலை.
ஒருவேளை மாலன் இன்னொருநாள் கம்யூனிசத்துக்கு எதிரான கருத்துச் சொல்லும்போது, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே கம்யூனிசத்தை பூதம் என்று சொல்லியிருக்கிறார்கள் மார்க்சும் எங்கல்சும், என்பது கவனிக்கத்தக்கது‘ என்று சொல்வார் போலும்.
இதேபோல் இன்னொரு மோசடி, “எதையும் வரலாற்றின் வெளிச்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகையில் மேற்குலகிலிருந்து நாம் கற்றுக்கொண்ட வழக்கம். கீழ்த்திசை நாடுகளில் வாழ்வை வரலாற்றைவிட இலக்கியத்தில் பதிவு செய்வது என்பதே வழக்கமாக இருந்திருக்கிறது என்பதையும், இலக்கியம் என்பது மக்களைப் பற்றியதாகவும், வாழ்க்கையைப் பற்றியதாகவும் இருந்திருக்கிறது என்பதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.”
வரலாற்றை இருட்டடிப்புச் செய்து அல்லது இலக்கியத்தையே வரலாறாக சித்தரித்ததில் எவ்வளவு மோசடிகள் நியாயப்டுத்தப்பட்டிருக்கின்றன.
சம்பூகனை கொன்ற ராமனை கதாநாயகனாக நியாப்படுத்தகிறதே, அது எது? இலக்கியமா? வரலாறா?
ஆயிரகணக்கான சமணர்களை கொன்ற பிறகும் அன்பே சிவமாக காட்சி தருகிறார்களே சைவ களவானிகள். அது எதனால்? வரலாற்றினாலா? இலக்கியத்தினாலா?
தாழ்த்தப்பட்டவர் என்பதினாலேயே ‘நந்தனை‘ தீயிட்டிக் கொளுத்தி அந்தக் கொலையை ‘புனித‘ படுத்தினார்களே, பார்ப்பனர்கள். அது வரலாற்றின் பெயரிலா? இலக்கியத்தின் பெயரிலா?
‘பார்ப்பான் மேன்மையனவன், சூத்திரன் கீழானவன்‘ என்று சொல்லாத உன் இந்து இலக்கியம் எது? இலக்கியம் முழுவதும் பார்ப்பன நலன், பார்ப்பன உயர்வு, உழைக்கும் மக்களுக்கு எதிரான கருத்துகளாகவே நிரம்பியருக்கிற ஒரு நாட்டில், ‘வரலாற்றைவிடவும் இலக்கியம் மேன்மையானது‘ என்று ஒருவன் சொன்னால், அவன் எப்பேற்பட்ட ‘ஃபிராடாக‘ இருப்பான்.
“இராமாயணத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் மூவர். வாலி, சூர்ப்பனகை, இராவணன் மூவரும் அடுத்தவர் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஆசைப்பட்டவர்கள்.” என்கிறர் இந்த ‘உத்தம புருஷன்‘ மாலன்.
உன் ராமன் சம்பூகனை கொன்னானே, சம்பூகன் என்ன உன் பொண்டாட்டி கையை பிடிச்சா இழுத்தான்?
***
மாலன் தன் கட்டுரையை இப்படி துவங்குகிறார், “ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்று உண்டு.” என்று.
அதேபோல் மாமியும், “திருவையாறு போயிருக்கிறீர்களா? தியாகராஜரின் கீர்த்தனைகளை கேட்டிருக்கிறீர்களா? அவரது தெலுங்குப் பாடல்களையும் கேட்டு நெக்குருவி நிற்கும் சாமான்ய தமிழர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கலைஞரை கேட்கிறார். (‘சாமான்ய தமிழர்கள்‘ வார்த்தையை கவனிக்கவும்)
நாமும் அதே தியாகராஜரின் கீரத்தனையை ஒன்றை சொல்லி, ராமனின் பெருமையை உலகுக்கு அறிவிப்போம்.
வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி;”ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை, என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், “ஹா–புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளை (பேடி)க்கா என் புதல்வியைக் கொடுத்தேன்.” என்று தம்மை நொந்து கொள்வார்.இம் மடவுலகர், ராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை. மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை“
(அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார் மொழி பெயர்ப்பு)
திருமதி சீதை தன் கணவன் ராமனை இப்படி கேவலமாக பேசிய இந்த ‘சுட்சுவேஷனுக்கு‘ப் பொருத்தமாக ஒரு பாடல் போட வேண்டும் என்றால், தியாகய்யர் ராமனை நினைத்துப் பாடிய “எந்துகோ… ராமா… ஈ… ஜென்மமு…” என்கிற கீர்த்தனையை இப்படி புரிந்து கொள்ளலாம்,
“உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்“
***
மாலனும், வாஸந்தியும் ஏதோ கலைஞர் ராமனைப்பற்றி தன் சொந்தக் கருத்தை தெரிவித்ததைப்போல் கோபப்படுகிறார்கள். ஆனால் அவர் வால்மிகி ராமயணத்தில் இருந்துதான் மேற்கோள் காட்டினார். இவர்களுக்கு குறைந்தபட்ச அறிவு நாணயம் இருந்தால், வால்மிகி ராமயணத்தில் சொல்லப்பட்டிருக்கற ‘மேற்படி‘ இந்த மாதிரியான செய்திகளுக்கு முறையான விளக்கம் சொல்லிவிட்டு பிறகு பகுத்தறிவாளர்கள் மீது பாயட்டும்.
“கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பதும் நாத்திகவாதி என்பதும் அவரது சொந்த விஷயம்.”
“கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கல்லெறியக்கூடாது. அதுவும் எப்படிப்பட்ட கல்? ஒரே வீச்சில் இந்தியா மொத்ததிலும் உள்ள பெரும்பான்மையான இந்துக்களைப் புண்படுத்தும் ஆயுதமாக.” என்று சீறுகிறார் வாஸந்தி.
ஒரு காலத்தில் கணவன் இறந்தபோது மனைவியை உடன் வைத்துக் கொளுத்திய அநீதியை கண்டித்து, அக்கறை உள்ளவர்கள் எழுந்தபோது, இதேபோல் மதவாதிகள் கோபப்பட்டார்கள். வாஸந்தி கோபப்படறத பார்த்தா ‘உடன் கட்டையை‘ தடை செய்தது இந்துக்களை புண்படுத்தும் செயலாகத்தான் தெரிகிறது.
உடன் கட்டை பழக்கம் தொடர்ந்து இருந்திருந்தால், வாஸந்தியிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரையும் வந்திருக்காது. அதுக்கு பதில் எழுதுற வேலையும் நமக்கு மிச்சமாகி இருக்கும்.
***
‘இந்து மதம் பலஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளில் கலந்தது. அதை எந்த எதிர்ப்பிகளினாலும் அழிக்க முடியாது. அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.’ என்பதே பார்ப்பன அறிவு ஜீவிகளின் ஆவேசம்.
10-1-1947ல் விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் இப்படி எழுதினார்:
“யார் என்ன சொன்னாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உள்ள இந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எந்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்ளையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது இந்து மதம்” என்று சர். இராதாகிருஷ்ணன் போன்ற மேதைகள் கூறலாம்.
உயிரோடு இருப்பதினால் மட்டுமே ஒரு விஷயம் உயர்வானதாகிவிடுமா?எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கிடையே எலி, கொசு, தேள், பாம்பு மூட்டைப்பூச்சிகள் கூடத்தான் உயிரோடு இருக்கின்றன. இவைகளெல்லாம் இந்து மதத்தைவிட புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக்கூடியவையா?”
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாத இதழான ‘புதிய கலாச்சாரம்‘
ஜனவரி 2008 ல் எழுதியது.
ஆணித்தரமான கருத்துக்கள். வியக்க வைக்கிறீர்கள். பலரை வியர்க்கவும் வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவரா இல்லை பார்ப்பனர்களுக்கெதிரானவரா…?
அப்படியென்றால் கிரிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியுமா உங்களால்…
கேக்க வேண்டுமென்று தோன்றியது… கேட்டேன்! மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ள வேண்டாம்!
நன்றி