வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் சுதந்திரப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
வெள்ளையர்களுக்கு எதிராக மிக சொற்பமான சில்லரை போரட்டங்களில்  ஈடுபட்ட நேரு, ராஜாஜி போன்ற தலைவர்கள் அதற்கு விலையாக இந்த நாட்டையே பெற்றார்கள். இதுவா தியாகம்?
தியாகம் என்பது முற்றிலுமாக தன்னை இழப்பது.
கட்டபொம்மன், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், பகத்சிங் என்று பலபேர் வெள்ளையரை  எதிர்த்து, தன் நாட்டுக்காக  உயிரையே தியாகம் செய்தார்கள். அந்த தியாகிகளின் வரிசையில் அர்பணிப்போடு பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய கடைசி தமிழன் வ.உ.சி.
மற்ற எந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நேராத அவலம் வ.உ.சிக்கு மட்டுமே நேர்ந்தது. அவர் ஒருவர்தான் பிரட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைககும் உள்ளானர். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கும், சதிக்கும் ஆளானார்.
வ.உசி வாழ்க்கையின் முற்பகுதி பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சீரழிந்தது. அவரின் பிற்பகுதி அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தில் சிக்கி பாழானது. வாழும் காலத்திலேயே, தான் கொண்ட கொள்கையின் இரண்டு நேர் எதிர் நிலைகளையும் சந்தித்த தியாகி, அநேகமாக வ.உ.சிதம்பரமாக மட்டுமாகத்தான் இருப்பார்.
5-9-2009 அன்று அவரின் பிறந்த நாள் என்பதால் அவரை பற்றிய நினைவுகளுக்காக…இந்தக் கட்டுரையை மீண்டும் பிரசுரிக்கிறேன்.

பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த “காண்டீன் கான்டிராக்ட்‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.

இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.

இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.

ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.

“வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி.

சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி.

1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன.

தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.

ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.

சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ‘வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது’ என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.

திருநெல்வேலியே திகுதிகுவென்று தீப்பற்றி எரிகிறது

கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.

வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.

கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.

”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி.

மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்தனர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.

நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.

வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.

அன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.

உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார்.

சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.

எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.

மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.

சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.

சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார்.

அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.

காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள்.

கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.

சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்” என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.

அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.

வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம்

1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது.

19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்‘ என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார்.

1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை.

திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.

1939 இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.

பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் “கவுரவிக்க‘ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:

“கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.

இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார்.

அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.

எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது `சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

-வே. மதிமாறன்

புதிய கலாச்சாரம் 2006

9 thoughts on “வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

  1. நல்ல கட்டுரை தோழர் மதி
    புக வில் வந்திருந்த போதே
    வாசித்திருந்தேன். எனினும் இப்போது
    மீண்டும் ஒரு முறை வாசிக்கும் படி
    இதை வெளியிட்டதற்கு நன்றி.

  2. //கட்டபொம்மன், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், பகத்சிங் என்று பலபேர் வெள்ளையரை எதிர்த்து, தன் நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தார்கள். அந்த தியாகிகளின் வரிசையில் அர்பணிப்போடு பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய கடைசி தமிழன் வ.உ.சி.//

    மறுக்க முடியாத உண்மை, ஆனால் இந்திய ஈன பார்ப்பன பனியா கூட்டங்கள் திட்டமிட்டு மறைத்த உண்மை..

    வந்தாரை வாழவைக்கும் தமிழன் தனக்காக வாழ்ந்த தமிழனை (மனிதனை) என்ன செய்வான் என்பதற்கு ஒரு உதாரணம் அவரின் வாழ்க்கை. ஆதலால் வெட்டி பெருமை, வாய்சவுடால் போன்றவற்றை குறைப்பது நமக்கே நலன்.

    வ.உ. சிதம்பரனார் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றே.. அவர் வாழ்ந்த காலத்திலேயே அனைத்தையும் பார்த்துவிட்டே (அனுபவித்துவிட்டு) சென்றார்..

    அவர் இருக்கும் போதே முதுகில் குத்திய காங்கிரஸ் அவர் இறந்தும் குத்தியது என்பதை கேட்கும்போது சுயமரியாதை உள்ள ஒவ்வொரு திராவிடனும் (தமிழனும் = மனிதனும்) காங்கிரஸ் என்ற கயவர்களின் கூட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளவேண்டும்..

    மருது பாண்டியர்கள் தனது இறுதி நாட்களில் மறைந்திருந்த சங்கரபதி கோட்டையை பார்க்கும் போதெல்லாம் மனதில் மிகப் பெரும் வேதனை உண்டாகும்ங்க (நான் காரைக்குடிங்க)..தன் மண்ணை வெள்ளை ஈன பிறவிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடி எமது மண்ணிற்கு உரம்போல வீழ்ந்த அந்த மாவீரர்களின் கோட்டை இன்று ஆழ மரத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது.. அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வாழ்கையை எடுத்துச் சொல்லாமல் ஊரை ஏமாற்றிகிட்டு திரியுது ஒரு கூட்டம்..

    //பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த “காண்டீன் கான்டிராக்ட்‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.
    இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.//

    ரொம்ப நாளாவே டாட்டா மேல ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது தீர்த்து வைத்ததற்கு நன்றி…மத்தபடி நாட்டுக்கோட்டை செட்டிகளை (*) பற்றி நன்றாகவே தெரியும் நம்ம சமூகத்தை சீல் பிடிக்க வைத்த பெருமை பார்பனர்களோட சேர்த்து இவர்களுக்கும் முக்கிய உண்டு..

    *அழகப்பரை தவிர்த்து, கல்வி என்ற ஒன்றை வணிக நோக்கம் இல்லாமல் எமது ஊரை சுற்றி பல கிராம மக்கள் படிப்பதற்கு கல்வி கூடங்கள் அமைத்ததால்..(சில உள்குத்துகள் (விமர்சனம்) இருந்தாலும்).

    அருமையான, தேவையான கட்டுரை தோழர் மதிமாறன் அவர்களே,

    தோழமையுடன்

    முகமது பாருக்

  3. நான் இந்த கட்டுரையை இப்போதுதான் படிக்கிறேன்…..பல தகவலகள் தெரியவருகின்றன……இதை இந்த சமையத்தில் பிரசுரித்திருப்பது அவசியமானதே. மிக்க நன்றி!
    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பலரது தியாகங்கள் இரட்டடிப்பு செய்யப்பட்டுது போல் வா.ஊ.சி அவர்களின் தியாகமும் இரட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது வேதனையானது….

  4. காங்கிரசின் துரோகமும்////
    துரோகம் என்றால் அது காங்கிரஸ்

    பல புதிய விஷயங்கள் தெரிந்துகொண்டான் நான்..

  5. முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !

    நாம் நினைத்தது நடந்தது ! கீற்று நிர்வாகிகள் ‘இந்திய‌ ஜனநாய’கத்தின் கற்பை காக்கும் விதமாக அதற்கு தேவையான நேர்மையின்மையோடும், நாணயமற்ற முறையிலும் நடந்துகொண்டார்கள்.காலையில் இட்ட எமது பின்னூட்டம் இப்பொழுதுவரை வெளியிடப்படவில்லை.ஆனால் அதன் பிறகு வந்துள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ள‌ன.

    கீற்றுவின் யோக்கியதையில் ஏற்கெனவே எமக்கு முழு நம்பிக்கை இல்லாததால் முன் எச்சரிக்கையுடன் அங்கு இட்ட பின்னூட்டத்தை சிறு குறிப்புடன் வினவு தளத்திலும் பின்னூட்டமாக போட்டோம். இதோ அந்த பின்னூட்டம்.

    இந்த பின்னூட்டம் கீற்று இணையத்தில் “தியாகி,இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு” எனும் கட்டுரைக்கு போட‌ப்பட்டது. ஒரு வேலை கீற்று அதை வெளியிடாமல் ‘தடை’ போடக் கூடும் என்று எண்ணியதால் பாதுகாப்பிற்காகவும், சாதி வெறிபிடித்த முத்துராமலிங்கனை பலர் அறிந்துகொள்ள ப‌யன்படும் என்று கருதியதாலும் அந்த பின்னூட்டம் இங்கு பதியப்படுகிறது.

    முத்துராமலிங்கம் என்பவன் ஒரு சாதிவெறி பிடித்த மிருகம். அன்றைக்கே அடித்து கொல்லப்பட்டிருக்க வேண்டிய காட்டுமிராண்டி.

    ஆதாரங்கள் வாசிக்க
    இணைப்புகள் கீழே

    பசும்பொன்: முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்.
    இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.
    http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

    சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை… அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!
    முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை …
    http://www.keetru.com/literature/essays/vinavu_2.php

    தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்!
    http://mathimaran.wordpress.com/2009/08/27/article-233-2/

    கீற்றில் குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கு இந்த பின்னூட்டத்தை போட இயலவில்லை எனவே வேறு கட்டுரைக்கான பினூட்ட பகுதியில் எனது பின்னூட்டம் போடப்பட்டுள்ளது. அதை கீற்றுக்கும் தெரிவித்துள்ளேன்.

    /////////////

    கீற்றுக்கு வணக்கம்.
    எனது கமெண்ட்டை ‘இம்மானுவேல்’ பதிவில் போட இயலவில்லை அரைமணி நேரமாக லோட் ஆகிக்கொண்டே இருக்கிறது எனவே தான் இங்கு போட்டுள்ளேன். நீங்கள் வேண்டுமானால் மாற்றி போட்டுக்கொள்ளுங்கள்.
    நன்றி
    /////////////

    முத்துராமலிங்கம் ஒரு சாதிவெறியன் என்பது ஒன்றும் புதிய விசயம் அல்ல‌.தென் மாவட்டம் முழுவதும் மக்கள் அறிந்த விசயம் தான்.அந்த சாதிவெறியனைப் பற்றி ஒரு பின்னூட்டம் போட்டால் கீற்றுக்கு ஏன் வலிக்கிறது ? ஏன் குத்திக்குடைகிறது.ஏன் அந்த பின்னூட்டம் வெளியிடப்படவில்லை ? இதற்கு கீற்று நேர்மையுடன் பதிலளிக்க வேண்டும்.‌

    ஒரு பக்கம் எமது அமைப்பை அவதூறு செய்து எழுதுவதற்கு,இனவாத கும்பல் தமது காழ்புணர்வை கக்குவதற்கு களம் அமைத்துக்கொடுப்பது.அதற்கு தமிழ்தேசியம்,முற்போக்கு மண்ணாங்கட்டி என்றெல்லாம் விளக்கம் வேறு கொடுப்பது. இன்னொரு பக்கம் சாதிவெறியனான,தலித் மக்களையும் இம்மானுவேல் சேகரன் போன்ற த‌லைவர்களையும் கொன்ற கிரிமினலான பயலான‌ முத்துராமலிங்கத்தை காப்பாற்ற எமது கருத்தை இருட்டடிப்பு செய்வது.இது தான் இந்த தமிழ்தேசியம் பேசும் மண்ணாங்கட்டிகளின் யோக்கியதை. இதற்கு கீற்று அடுதத ஒரு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.மேலும் எமது பின்னூட்டம் அனுமதிக்கப்பட வேண்டும். பின்னூட்டம் ஏன் மட்டுறுத்தபட்டது என்பதற்கு விளக்கமும் வேண்டும். அந்த விளக்கத்தை கீற்று எப்படி வேண்ட்டுமானாலும் சொல்லலாம். எமது வார்த்தைகளில் ‘நாகரீகம்’ இல்லை என்றோ, ஒரு தலைவரை மரியாதை இல்லாமல் பேசினால் அவர் சார்ந்த சமூகத்தினரின் மனது புண்படும் என்றோ கீற்று கருதினால் அதை உள்ளது உள்ளபடி பொது அரங்கில் சொல்ல வேண்டும்.
    இல்லையெனில் நாமே ஒரு முடிவிற்கு வந்து கீற்று தளத்திற்கு இன்னொரு பெயரை சூட்ட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

  6. Dear Thozhar

    Miga arumaiyanaana katturai, naam anaivarum avaraippola vaazha vendum.

    anbudan Pa.Selvaraj,Neelangarai,Chennai-600 041

  7. //கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை.//
    நக்கீரன் வெளியீட்டில் வ உ சிதம்பரனார் வாழ்க்கை தொகுப்பில் ஆதனூர் சோழன் பக்கம் 59 பத்தி 4ல் காந்தி பணத்தை கொடுத்து விட்டார் என்றுள்ளதே, உண்மையான தகவல்கள் என்ன?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading