‘அவன்-இவன்’ பாலாவை ‘அப்படி’ புரிந்துகொண்டால் ‘அதற்கு’ நான் பொறுப்பல்ல
அவன்-இவன் படத்தில் பாலா மாடுகளை புனிதமாக சொல்லவில்லை, அவைகளை துன்புறுத்தக் கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார். தலித்துகளை இழிவாகவும் அவர் காட்டவில்லை. தங்கம் இதழில் உங்கள் விமர்சனம் ஒரு சார்பாக உள்ளது.
-மருது, திண்டுக்கல்.
மாட்டுக்கறியை உண்பவர்கள் இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும்தான். படம் பார்ப்பவர்கள், மாட்டு வியாபாரியை இஸ்லாமியராக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், ‘ஒட்டகத்தை வெட்டி கொடுக்குறாங்களே… அது என்ன?’ என்று ’குர்பானி’யை தவறாக உச்சரிக்க வைத்திருக்கிறார். அதன் நோக்கம் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதை அழுத்தமாக சொல்வதற்காகத்தான்.
மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை பற்றிதான் அந்த படம் கண்டித்தது. துன்புறுத்துவது பற்றி ஒரு இடத்தில் கூட சொல்லப்படவில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகளைதான் துன்புறுத்துவதாக காட்டியிருக்கவேண்டும்.
ஆனால், இந்தக் கொடுமைகளை பற்றி படம் குறிப்பால்கூட உணர்த்தவில்லை. ஜல்லிக்கட்டில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கு கொள்கிறார்கள். அதை காண்பித்தால் அவர்களின் எதிர்ப்பை எதிர் கொள்ளவேண்டிவரும்,. தென் மாவட்டங்களில் படத்தை வெளியிட முடியாது.
ஜல்லிக்கட்டு கொடுமையை காட்டாததற்கு அது மட்டும் காரணமல்ல, பாலாவின் ஜாதி உணர்வும்தான் என்று நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் செப்டம்பர் மாத இதழ்
தொடர்புடையவை:
பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’
இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’
பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!
‘சுற்றுலாபொருட்காட்சி’தான் உண்மையான ‘தமிழர்திருவிழா’; பொங்கல் அல்ல.