பிராமணாள் கபே: என் மீதான குற்றச்சாட்டும் எனது விளக்கமும்

பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா? – என்ற ஒரு பதிவை எழுதியிருந்தோம். அது பற்றி திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நண்பர் மணிமகன் எழுப்பிய குற்றச்சாட்டும், நமது விளக்கமும்.

*

நண்பர் மதி த.பெ.தி.க.உறுப்பினர் என்ற முறையில் இப்பதிவில் கடைசியாக த.பெ.தி.க.விற்கு மட்டும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்திருந்தால் நான் அளிக்கும் இவ்விளக்கத்தை எடுத்துக் கொள்ளவேண்டாம். அல்லாமல், கட்சிகளைக் கடந்த பெரியார்-அம்பேதகர் கொள்கையாளர் என்றால் ஒரு கேள்வி.

பிராமணாள் கபேவுக்கு எதிராக முதலில் அந்தக் கடையின் உரிமையாளர் கிருஷ்ணனிடம் நேரடியாகச் சென்று வலியுறுத்தியவர்கள் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தோழர்கள். அதன்பின் தி.க.தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை மற்றும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் அறிக்கை விடுத்தார். அவை அவ்வூர் மக்களிடமும் பரப்பட்டது. தொடர்ந்து சிறீரங்கத்தில் கண்டனக்கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு- அதற்கு காவல்துறையின் அனுமதி மறுப்பு. பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்து கூட்டம் நடத்த 4.11.2012 அன்று அனுமதி பெற்று தி.க.தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கடும்கண்டன உரை நிகழ்த்தினர். ஆயிரத்துக்கும் அதிகமான தி.க.வினர் திரண்டனர்.

இதற்கு எதிராக பிராமண சங்கம் உண்ணாவிரதம் இருந்தது.கூட்டத்தில் பெயர் நீக்க கெடு நிர்ணயித்து இல்லையேல், பெயரை நீக்கும்வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த மேடையிலேயே 560 தோழர்கள் பெயர்ப் பட்டியலை அளித்தனர். இச்செய்தி 5.11.2012 ஊடகங்களில் வெளியானது.6.11.2012 இரவு கிருஷ்ணன் தன் கடையின் பெயர்ப்பலகையை கழற்றிவிட்டார். இந்த நிகழ்வுகள் எதுவுமே மதிமாறனுக்குத் தெரியாதா?

த.பெ.தி.க.வின் போராட்டத்தை வாழ்த்த உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால்,தி.க.வின் பங்களிப்பை மறைப்பது ஏன்? த.பெ.தி.க.வின் போராட்டத்தால்தான் இந்த பெயர் நீக்கம் என்றால் அவர்களின் போராட்டம் நடந்த சில நாட்களிலேயே நடத்திருக்குமே? ஏன் இவ்வளவு நாள் கழித்து நீக்க வேண்டும்? சிந்தியுங்கள். தி.க.வின் பணியை பார்ப்பன ஊடகங்களும் மறைக்கின்றன; உங்களைப் போன்றவர்களும் மறைக்க முயலுகிறீர்கள். ஏனோ…?

மணிமகன்.

மணிமகன் என்ற புனைப் பெயரில் இருக்கிற நீங்கள் யார் என்பது எனக்கு தெரியும் என்பதுபோலவே, நான் த.பெ.தி.க.உறுப்பினரா இல்லையா என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும்.

தெரிந்து கொண்டே கிண்டலான தொனியில், நீங்கள் கேட்ட முறை, முறையாக இல்லை.

சரி,

முதலமைச்சருக்கு வேண்டுகோள், ஓட்டல் உரிமையாளரிடம் கோரிக்கை, போராட்டம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை, பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றம் சென்று அனுமதி, பிறகு ஸ்ரீரங்க பிரச்சினையை ஒட்டி, திருவானைக்காவலில் பொதுக்கூட்டம்; இவைகளால் ‘பிராமணாள் கபே’ பெயர் நீக்கப்படவில்லை.

ஸ்ரீரங்கத்தில் உள்ள அந்தக் கடைக்கு முன்னால் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தியதால்தான் அது காலி செய்யப்பட்டது. அதை திராவிடர் கழகம் செய்திருந்தாலும் இது நடந்திருக்கும்.

போராட்டம் நடத்திய மறுநாளே, அந்தக் கடை மூடப்பட்டது. அதன் பிறகு மூடிய அந்தக் கடைக்கு நமது வேண்டுகோளை எல்லாம் தாண்டி, தமிழக முதல்வர், காவல் துறையின் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தார்.

மீண்டும் நமது வேண்டுகோளை புறந்தள்ளி, நமது பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த முதல்வர், பிரமணர் சங்கம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுத்தார்.

‘பிராமணாள் கபே’ பெயர் பலகையை கழட்டச் சொல்லி, காவல் துறையோ, முதல்வரோ எந்த வகையிலும் நெருக்கடித் தரவில்லை என்பது மட்டுமல்ல; பெயர் பலகை தொடர்ந்து இருக்க பாதுகாப்பத்தான் தந்தார்கள்.

‘பிராமணாள் கபே’ அமைந்திருந்த இடம் பல கடைகள் உள்ள ஒரு கட்டிடத்தில். அங்கு அந்தக் கடை வாடகைக்குத்தான் இருந்தது. ஆர்ப்பட்டத்திற்கு பின், ‘பிராமணாள் கபே’ பெயர் பலகைக்கு முன்னால், தினமும் காவல்துறையினர் கும்பலாக நின்று கொண்டிருந்ததால், அதன் அக்கம் பக்கம் உள்ள கடைகளுக்கு மக்கள் செல்வது குறைந்து, அவர்களுக்கு வர்த்தகம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.

மற்றக் கடைக்காரர்களின் நெருக்கடியும், அந்தக் கட்டிட உரிமையாளர், ‘பிராமணாள் கபே’ வை காலி செய்ய சொன்னதினாலும்தான், அது காலி செய்யப்பட்டது.

இப்படி ஒரு நெருக்கடியை அங்கு நடந்த ஆர்ப்பட்டமே உருவாக்கியது.

அதனால்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன். மற்றபடி திராவிடர் கழகத்தின் பெயரை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லை.

இந்தப் பிரச்சினை இதோடு முடியவும் இல்லை.

‘பிராமணாள் கபே’ திருமாலின் அவதாரம் போல் மீண்டும், பிராமணர் சங்க ஆதரவுடன் பிரம்மாண்டமாக சொந்தக் கட்டிடத்தில் வரலாம்?

முன்னதாக, தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அங்கு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அவர்களின் பெரியார் முழக்கம் இதழிலும், இணையத்திலும் ‘பிராமணாள் கபே’ எதிர்ப்பு விளக்கத்தை மிக சிறப்பாக எழுதி இருந்தார்கள்.

அவர்களைப் பற்றிக்கூட நான் எதுவும் குறிப்பிடவில்லை.

சரி, நான் தி.க வின் பணியை பார்ப்பனர்கள் போல் இருட்டடிப்பு செய்வதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

பெரியார் தொண்டர் என்கிற முறையில் நீங்கள் (தி.க) ‘பிராமணாள் கபே’ எதிர்ப்பில் ஈடுபட்ட பெரியார் தொண்டர்களை கைது செய்ததை கண்டித்தீர்களா? முதல்வருக்கு விடுதலைச் செய்ய சொல்லி வேண்டுகோள் விடுத்தீர்களா?

கருத்து வேறுபாடின் காரணமாக தனித் தனியாக பிரிந்த பிறகும், தோழர் கொளத்தூர் மணி, பெரியார் தொண்டர்களை விடுதலை செய்யச் சொல்லி அறிக்கை கொடுத்தார்.

திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

மக்கள் கலை இலக்கிய கழகமும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதற்கு, அதிமுக அரசைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டினார்கள்.

நீங்கள் என்ன செய்தீர்கள்?

ஊழல் குற்றச்சாட்டில் கைதாகிற திமுக முன்னாள் அமைச்சர்கள் கைதை கண்டிக்கிற நீங்கள், பெரியார் தொண்டர்கள் கைதை கண்டித்தீர்களா?

தி.க வின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல் துறை சொன்னக் காரணம்: ‘தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களால், ஸ்ரீரங்கத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதால் உங்களுக்கு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ காவல் துறையின் இந்த விளக்கத்தை விடுதலையும வெளியிட்டு இருந்தது.

இந்தப் பிரச்சினைக்காக திருவானைக்காவலில் நடந்த பொதுக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களும், காவல் துறையின் இந்த அறிவிப்பை ஒட்டித்தான்,

‘யாரோ சட்டத்திற்கு புறம்பாக நடத்திய ஆர்ப்படத்திற்காக, எங்களுக்கு அனுமதி மறுப்பது என்ன நியாயம்..?’ என்றே பேசியிருக்கிறார்.

‘பிராமணாள் கபே’ பெயர் பலகைக் கூட சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருந்தது.

*

10-11-2012 அன்று எழுதியது.
வேறு தீவரமான பிரச்சினைகள் போனதால், காலதாமதமாக இன்று (15-11-2012) வெளியிடப்படுகிறது.

தொடர்புடையது:

பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா?

16 thoughts on “பிராமணாள் கபே: என் மீதான குற்றச்சாட்டும் எனது விளக்கமும்

  1. இயக்கம் சாராமல் இயங்குவதாலும் பெரும்பாலும் ஒத்த கருத்தாளராக இருப்பதாலும்தான் மதியின் தளத்தைப் படிப்பதையும்,நண்பர்களுக்குப் பரிந்துரைப்பதையும் வழமையாக வைத்துள்ளேன்.இச்சம்பவம் குறித்து தொடர் முயற்சிகள் தி.க.வால் எடுக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டவே அந்த மறுமொழி எழுதப்பட்டது. தாங்கள் கூறுவதுபோல இது தி.க.வின் குற்றச்சாட்டு அல்ல;மணிமகனின் குற்றச்சாட்டாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்.மற்றபடி இது முறையல்ல என்று மதி கருதினால்,அதனைத் திரும்பப்பெறுவதில் எனக்கொன்றும் தயக்கமில்லை.தொடர்ந்து உங்கள் வழியிலேயே எழுதுங்கள்.இனி பார்வையாளனாக மட்டும் இருந்துவிட்டுப் போகிறேன்.நன்றி.

  2. பெரியார் தொண்டர்கள் ஒன்றாக இருக்க முடியாது எனும் போது பார்பனியம் எப்படி இங்கு மறையும் . இன்னும் சிறப்பாக அல்லவா வளரும்

  3. திராவிடர் விடுதலைகழகம் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் அறிவித்து இருந்ததா? இதென்ன புதுக்குழப்பம்?

  4. தோழர் மணிமகன், இது தி.க.வின் குற்றச்சாட்டு அல்ல;மணிமகனின் குற்றச்சாட்டாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்.
    என்று குறிப்பிட்டதால்,
    இதன் தலைப்பை மாற்றியிருக்கிறேன்.

  5. அன்பிற்கினிய தோழர் மணிமகன்,
    நீங்கள் என் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருவதும். அதை பல தோழர்களுக்கு பரிந்துரைப்பது நான் அறிந்ததே, நன்றி.
    உங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவித்து என்னை உற்சாகப்படுத்துவதற்கும் நன்றி.

    பெரியார் மீது அவதூறு பரப்பும் மோசடிப் பேர் வழிகளின் மீதான நம்மிருவரின் கோபமுமே நமக்குள் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தியது.
    அது தொடர வேண்டும்.

    மற்றப்படி எனக்கு உங்கள் மீது எந்த வருத்தமில்லை. நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு என்னுடைய பதிலாக இதை பதிவு செய்து கொள்ளுங்கள்.

    //இனி பார்வையாளனாக மட்டும் இருந்துவிட்டுப் போகிறேன்./// என்கிற உங்களின் வரி சங்கடப்படுத்துகிறது.
    நீங்கள் உங்கள் கருத்துக்களை எப்போதும் போல் சொல்லுங்கள்.. அது எனக்கு தேவையானது.

  6. நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை நீக்கி,நம் ஆற்றல் முழுதும் நமது எதிரியை நோக்கியே செலவழிக்கப்படவேண்டும் என்பதே பெரியார் தொண்டர்களின் போர்முறையாக இருக்கவேண்டும்.
    ஜாதிகளால் பிளவுபட்டுக்கிடக்கும் தமிழினத்தின் எதிரிகள் பல உருவங்களில் இருந்தாலும் ஒற்றுமையாக இயங்குகிறார்கள்.
    ஆனால்,நாம்தான் தன் முனைப்போடு முடங்கிவிடுகிறோம்.எதிரிக்கும் வேலை குறைந்துவிடுகிறது.

    இனி, இணக்கம் தொடரும்;தொடர்ந்து கருத்துரைப்பேன்.

  7. Ungalukku Vera velaye kidayaatha… saadhi illai illai nu sollikittu oru kurippita saathiyai mattum vendor veruppaaga paarpathu. .. Neengalum ungalin periyar kolgaium…..

  8. பிராமணாள் கபே என்றதும் கண்டனம் தெரிவிக்கும் இவர்கள் மற்ற ஜாதியின் பெயரில் பல கடைகள் நடத்துப்பட்டு வருகின்றனவே அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை? தங்களை விளம்பரப்ப்டுத்திகொள்ள இதுவாய்ப்பு!!!! அவ்வளவுதான். தருமபுரி மாவட்டத்தில் தலித்துக்கள் மீது வன்னியர்கள் கடும் தாக்குதல் நடத்தினார்களே! அதற்கு என்ன தீர்வு காணப்பட்டு உள்ளது!!! வெற்று பிராமண எதிர்பால் மட்டும் ஜாதியை ஒழிக்க முடியாது!!! பிற ஜாதிகளிடம் உள்ள ஜாதி உணர்வுகளை ஒழிக்க வேண்டும். ஆனால் இவர்களால் எதுவும் செய்ய இயலாது!!! செய்ய மாட்டார்கள்!

  9. “தமிழ் காட்டு மிராண்டி பாஷை!! தமிழ் நீஷ பாஷை!!!! தமிழைப் படிப்பவன் எவனும் உருப்பிடமாட்டான் என்று தமிழை கீழ்த்தரமாக விமர்ச்சித்து யார்? ” இவர்களுக்கு வக்காலத்து வழங்குவது தமிழுக்கு செய்யும் துரோகம் தவிர வேறொன்றும் இல்லை!!

  10. M.Natrayan மற்றும் அவரை ஒத்த கருத்தாளர்களுக்கு…ஜாதி வெறி எந்த ஜாதியாரிடம் இருந்தாலும் பெரியார் தொண்டர்களால் கண்டிக்கப்படுகிறார்கள்.இதோ படியுங்கள்:

    http://princenrsama.blogspot.in/2012/11/blog-post.html

    http://www.viduthalai.in/page1/48544.html

    http://www.viduthalai.in/page-2/48539.html

  11. Biraminal kape endra peyar viththal unngalukku athinal engu valikkirathu. en chennaiyil kooda thaan mambalam iyers engindra miga pirabalamaana idly/dosa wet floor irukirathu.

  12. தி.க. அமைப்பின் சார்பாக இந்த எதிர்வினையை மணிமகன் எழுப்பவில்லை என்ற போதிலும், தனிப்பட்ட கருத்தாகவே பதிவு செய்திருப்பதாக அவரே கூறியிருப்பினும், திராவிடர் கழகத்தை சார்ந்தவர் என்ற முறையில் மதிமாறன் அவரிடம் முன்வைத்திருந்த சில கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மணிமகன் நழுவியது ஏனோ?

    குறிப்பாக,
    \\பெரியார் தொண்டர் என்கிற முறையில் நீங்கள் (தி.க) ‘பிராமணாள் கபே’ எதிர்ப்பில் ஈடுபட்ட பெரியார் தொண்டர்களை கைது செய்ததை கண்டித்தீர்களா? முதல்வருக்கு விடுதலைச் செய்ய சொல்லி வேண்டுகோள் விடுத்தீர்களா?\\

    \\ஊழல் குற்றச்சாட்டில் கைதாகிற திமுக முன்னாள் அமைச்சர்கள் கைதை கண்டிக்கிற நீங்கள், பெரியார் தொண்டர்கள் கைதை கண்டித்தீர்களா?\\

    \\திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களும், காவல் துறையின் இந்த அறிவிப்பை ஒட்டித்தான்,

    ‘யாரோ சட்டத்திற்கு புறம்பாக நடத்திய ஆர்ப்படத்திற்காக, எங்களுக்கு அனுமதி மறுப்பது என்ன நியாயம்..?’ என்றே பேசியிருக்கிறார்.\\

    இக்கேள்விகளுக்கு மணிமகன் அவர்கள் நேர்மையாக பதிலளிக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.

  13. இளங்கதிர் அவர்களுக்கு…
    கடும் பணி ஆகவே தாமதமாக இந்த பதில்.
    திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றியவர்களைப் பற்றி மேடைகளில் பேசுவதோ,இதழ்களில் எழுதுவதோ இல்லை.எனவே,அந்த வழியில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை.
    பதில் சொல்லி,அதற்கு பதில் சொல்லி லாவணிக்கச்சேரி பாடும் வழக்கமும் தி.க.வில் இல்லை.
    நமது நேரத்தை நமது எதிரிகளிடம் செலவளிப்பதுதான் நல்ல அணுகுமுறை.அதனால் பலன் கிட்டலாம்.
    நாம் ஒருவருக்கொருவர் தத்தமது செயல்பாடுகளில்,வழிமுறைகளில் இயங்கும்போது பதில் அளிப்பதால் என்ன பயன் விளையப்போகிறது?
    அதனால் பதில் சொல்லவில்லை.

Leave a Reply

%d bloggers like this: