‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை
அன்பிற்கினிய தம்பி கார்ட்டூன் பாலா தனது Facebook ல் ஜாதிகளுக்கெதிரான ஞாநி யின் கீழ் கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதுகுறித்து பாலாவின் பக்கத்தில் நான் எழுதிய கருத்து.
*
ஞாநி யின் கருத்து:
கட்சி அரசியல்வாதிகள் எதுவும் உருப்படியாக செய்வார்கள் என்று தோன்றவில்லை. எனவே சாதிமறுப்பு, சாதி கலப்புத் திருமணங்களை ஆதரிக்கும் படைப்பாளிகள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், விமர்சகர்கள், இதர தொழில் சார்ந்தோர் எல்லாரும் சேர்ந்து கலப்பு மணமக்களுக்கு ஒரு பாராட்டு விழாவை விரைவில் நடத்த முயற்சிக்கலாம் என்று கருதுகிறேன். காதல், கலப்பு திருமணங்களை எதிர்க்கும் அனைத்து சாதி சங்கங்களுக்கு இதுவே சிறந்த கண்டனம்.
கலப்பு மணம் செய்து சிறப்பாக வாழும் மூத்த தம்பதிகள் முதல் இப்போது மணம் செய்த இளையோர் வரை திரட்டலாம். இப்படிப்பட்ட திருமணங்களை ஆதரிப்பது, பாதுகாப்பது முதலிய கடமைகளில் அரசின் பங்கு, போலீசின் பங்கு, சமூக அறிவுஜீவிகளின் பங்கு, தடைகளை உடைக்கும் வழிமுறைகள் பற்றியெல்லாம் தனித்தனி அமர்வுகள் கூட நடத்தலாம். இசை, ஓவியம், பாட்டு, நடனம், நாடகம், என்று இதை ஒரு திருவிழாவாக நடத்தவேண்டும் என்று கருதுகிறேன்.
ஒவ்வொராண்டும் கூட டிசம்பர் அல்லது பொங்கல் சமயத்தில் இதை நாம் செய்யலாம். இப்போது உடனடியாக, சென்னையில் யாரேனும் லயோலா கல்லூரி அரங்கைப் பெற்றுத் தந்தால் நன்றாக இருக்கும். ஏற்பாடு செய்ய, பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் எல்லாரும் எனக்கு ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்பினால், ஒருங்கிணைக்க முயல்வேன். கள ஏற்பாடுகளை செய்யும் தெம்பும் சக்தியும் உடைய இளைஞர்கள் நிச்சயம் தேவை.
-ஞாநி.
கோமாவில் இருந்தவர் திடீர் என்று முழிப்பு வந்து பேசுவதுபோல் இருக்கிறது ஞாநியின் அறிவிப்பு.
இதுபோல் ஜாதி வெறி சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் ஜாதிக்கு எதிராக பொதுவாக கருத்து சொல்வதுதான். மோசமானது.
திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், பெரியார் ஆர்வலர்கள் காதல் திருமணம், ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைப்பது, செய்து கொண்டவர்களுக்கு பாராட்டுவிழா நடத்துவது என்று தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பெரியார் இயக்கங்களின் செயலை தெரிந்து கொள்ளவோ, தெரிந்து கொண்டால் அதை கல்கி போன்ற புரட்சிகரப் பத்திரிகைகளிலோ, அல்லது தன்னுடைய இணைய பக்கத்திலோ எழுத ஞாநி தான் தயாராக இல்லை.
வருகிற 25 தேதி திராவிடர் கழகம் நடத்தும், ‘ஜாதி மறுப்பு இணைத்தேடல் திருவிழா’ வை வரவேற்று கல்கியிலும் தன் இணையப் பக்கத்திலும் ஞாநி விரிவாக எழுதலாமே, அதன் மூலம் அவர் சொல்வதை இதில் இருந்து தொடங்கலாமே…
இல்லை இணையத்தில் இருப்பவர்கள் அவர் தலைமையில் திரண்டால்தான் செய்வாரா?
*
தர்மபுரி ஜாதி வெறி தாக்குதல்களுக்கு எதிராக ஞாநி என்ன பதிவு செய்திருக்கிறார்?
தாக்குதல் செய்வதவர்கள் எந்த ஜாதிக்காரர்கள் என்பது பற்றியும் சொல்லாமல், யார் பாதிக்கப்பட்டவர்கள் என்பதையும் குறிப்பிடாமல் ‘தெளிவா’ எதாவது கட்டுரை எழுதியிருப்பார். அதாவது ஆதிக்க ஜாதிகளைப் பற்றி எதுவும் சொல்லாமல் ஆனால், தீவிரமாக ஜாதி வெறியை கண்டிப்பவர் போல்.
ஒரு படத்துல கவுண்டமணி, ‘ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கனும். பூசாத மாதிரியும் இருக்கனும்… ஆனா, பாத்தா பளிச்சுன்னு தெரியனும்.. அதான்டா தொழில் டிரிக்ஸ்.’
ஞாநியிடமிருந்து ஜாதிகளுக்கு எதிராக கடுமையான கண்டிப்புகள் வராது. காரணம், இந்து மதம், பார்ப்பனியம், ஜாதி ஒழிப்புக் குறித்து ஞாநியிடம் தெளிவான கண்ணோட்டம் இல்லை. அதற்கு பெரியார் – அம்பேத்கர பற்றிய விரிவான படிப்பும் புரிதலும் அவசியம்.
குறிப்பாக ஞாநியிடம் அம்பேத்கரிய பார்வை சுத்தமாக இல்லை. அம்பேத்கர் என்று ஒருவர் இருந்தார் என்பது ஞாநிக்கு தெரியும் என்பதே, அம்பேத்கரை அவதூறு செய்த கார்ட்டூனை அவர் ஆதரித்து பேசிய போதுதான் தெரிந்தது.
அவர் பாரதியின் மீசைக்கு ‘டை’ அடித்துக் கொண்டே இருந்தால், ஒருபோதும் அவரால் பார்ப்பனியத்திற்கு இந்துமதத்திற்கும் ஜாதிக்கும் எதிராக எழுதவே முடியாது.
அது சரி அப்படி எழுதினால்,
தினமணி, ஆனந்த விகடன், குமுதம், கல்கி வரை தொடர்ந்து அவரால் பயணித்திருக்க முடியுமா?
தொடர்புடையவை:
கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?
சின்மயி விவகாரமும் ஞானி யின் பஞ்சாயத்தும்
தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?
சரியாச்சொன்னீங்க…பெரியார் சொன்னது போல் ‘ஞாநி’ கள் பலர் உல்லாச நாத்திகர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். பாரதியையும் பெரியாரையும் ஒரே தட்டில் நிறுத்துப்பார்க்க ஞாநி விரும்புவதன் மூலமே ஞாநியின் அறிவு நாணயத்தை புரிந்துகொள்ள முடியும்.
முரசொலியிலும் பலகாலம் எழுதினார். 89-ல் திமுக ஆட்சிக்கு வந்தபொழுது முரசொலி அலுவலக்த்திலேயே கலைஞரை நேரில் சந்தித்து சந்தன மாலை ஒன்றை அணிவித்து, இனி தான் முரசொலியில் எழுதுவது சரி வராது… என்று சொல்லி பிரிந்து வந்துவிட்டார் என்பதையும் சொல்லி இருக்கலாம்.
நல்ல பதிவு
கவுண்டமணி மனதில் பட்டதை துணிவுடன் சொல்பவர் .