மூன்றாவது அத்தியாயம்
“இந்தியாவை வெளியுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக் கருவிகள் பல. முதலாவது கிறிஸ்துவப் பாதிரி…..
அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான் அநாகரீக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மத்ததிலே சேர்த்து மேன்மைபடுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள்.
இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும் ஸ்தீரீகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறார்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள்.
நம்முடைய ஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.”
“இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் தெரு வழியாக நாம் நடந்து வந்த காலத்தில் எதிரே 10 அல்லது 11 வயதுள்ள இரண்டு அழகிய பிராமண கன்னிகைகள் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏதோ ‘ஏசுநாதன்‘ ‘கடவுள்‘ என்று பேசிக்கொண்டு வந்தார்கள். இந்தச் சிறிய குழந்தைகள் கடவுளைப் பற்றியென்ன பேசுகின்றன என்பதையறிய ஆவலுற்று அதைச் சிறிது நின்று கவனித்தோம். சில சில வார்த்தைகள் காதில் விழந்தற்கப்பால் அக்கன்னிகைகள் துரிதமாக நடந்து அப்பால் போயிவிட்டார்கள்.
ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக ‘பெண் கல்வி வேண்டும்‘ ‘பெண் கல்வி வேண்டும்‘ என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் ‘பைபிள்‘ வாசித்துக் கொண்டு வரும்பொருட்டாகத்தானா? வருங்காலத்தில் இந்தப் பெண்கள் தாய்மாராகி நமது ஜாதி (Nation) க்கு காப்புத் தெய்வங்களாக இருக்கப் போகிறார்கள்?
நமது கிருஸ்துவ நண்பர்கள் நாம் சொல்வதிலிருந்து மனஸ்தாபமடைய வேண்டியதில்லை. அவர்களுடைய தெருவுக்கு நடுவிலே நாம் போய் ஒரு பள்ளிக்கூடம் வைத்து சில இந்து சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தால், அந்தப் பள்ளிக் கூடத்துக்கு தமது குமாரத்திகளை அனுப்புவார்களா? அதுபோலவே இந்துக்களும் தமது சகோதரிகளைக் காப்பாற்றிக் கெள்வது இவர்களுடைய கடமையல்லவா“
–இராம. கோபாலன், தலைவர், ‘இந்து முன்னணி‘
இதைச் சொன்னது இராம. கோபாலன்தான் என்று நம்பி விட்டீர்கள் அல்லவா? நீங்கள் உண்மையென்று நம்பியது பொய். சொன்னது அவரல்ல,
‘உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்
வன்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வானமேனியில் அங்கும் விளங்கும்`
–என்று உண்மையான கிறித்துவர் போல் வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் சுப்பிரமணிய பாரதியே அந்த ஆர்.எஸ்.எஸ். வரிகளுக்குச் சொந்தக்காரர்.
பாரதியின் இந்த சிந்தனையும் குமாரில பட்டரை ஞாபகப்படுத்துகிறதல்லவா?
–தொடரும்
இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க
இங்கே சொடுக்கவும்
