பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 14
மூன்றாவது அத்தியாயம்
“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி;
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்”
என்று பாட்டெழுதி ‘கம்யூனிஸ்ட் கட்சிகளின்’ ஆஸ்தான கவிஞரான பாரதி (போட்டியின்றி இன்று வரை பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்)
பேய், பிசாசு, மாகாளி, பராசக்தி, மாரியம்மா இப்படி எல்லா சக்திகளும் ஒன்றாய் கலந்த கொடுங்கோலன் ஜார் மன்னனின் அரசையும், இன்னும் சரஸ்வதி, லட்சுமி, மேரியம்மா, ஏசு போன்ற மென்மையான ‘மென்ஷிவிக்கு’ களையும் – மக்கள் சக்தியென்ற மாபெரும் சக்தியின் துணையோடு தூக்கியெறிந்த – புரட்சித்தலைவன் லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவிஞர் சுப்பிரமணிய பாரதி:
“கொலையாலும் கொள்ளையாலும், அன்பையும், ஸமத்வத்தையும் ஸ்தாபிக்கப்போகிறோம் என்று சொல்வோர்தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன். ‘இதற்கு நாம் என்ன சொய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக் கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடிக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்திப் பண்ணுமேயழிய குறைக்காது. பாவத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாவத்தை பாவத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை.”
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து, இவ்வளவு வன்முறை கூடாது, ரத்தம் வேண்டாம் என்று அன்போடு ‘பட்டாளி வர்க்க சரணாகதி தத்துவம்’ பேசுகிற இந்த கம்யூனிஸ்ட் கவிஞர்,
பங்காளி தகராறு, சூதாட்டம், பஞ்ச பாண்டவர் – கவுரவர் பொறுக்கித் தனங்களுக்காக நடந்த பாரத சண்டைக்கு பாண்டவர்களின் சார்பாக சங்கெடுத்து ஊதுகிறார் பாஞ்சாலி சபதத்தில்,
வீமன் செய்த சபதம்
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை
மாணற்ற மன்னர்கண் முன்னே – என்றன்
வண்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,
தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன் – தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் – அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்
நடைபெறுங் காண்பி ருலகீர்! – இது
நான் சொல்லும் வார்த்தைகள்என் றெண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை – இது
சாதனை செய்க பராசக்தி’ என்றான்
அர்ஜுன் சபதம்
பார்த்த னெழுதந்துரை செய்வான்: – ‘இந்தப்
பாதகன் கர்ணனைப் போரில் மடிப்பேன்
தீர்த்தப் பெரும் புகழ் விஷ்ணு – எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழலாணை:
கார்த்தடங் கண்ணி எந்தேவி – அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்தொழில் விந்தைகள் காண்பாய் – ஹே!
பூதலமே! அந்தப் போதினில்! என்றான்
பாஞ்சாலி சபதம்
தேவி திரௌபதி சொல்வாள்; – ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங் கலந்து – குழல்
மீதினற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் – இது
செய்யுமுன்னே முடியே’ என்றுரைத்தாள்.
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நியாயம்? இதுதான் பாரதியின் பஞ்சாயத்து.
சுப்பிரமணிய பாரதியின் இந்தச் செயல், குமாரில பட்டரை ஞாபகப் படுத்துகிறது அல்லவா?
சீச்சீ…. சீச்சி… குமாரில பட்டர் எவ்வளவோ பரவாயில்லை.
-தொடரும்
