Site icon வே. மதிமாறன்

நீதிக்கட்சியின் தேசத் துரோகம்?

 

 

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 18

ஐந்தாவது அத்தியாயம்

என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!”

“சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்”

“இங்ஙனம் தமிழ்ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர்.நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிட கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு…..”

இப்படி நீதிக் கட்சித் தலைவர்களை தேசத் துரோகிகள் எனறு சகட்டுமேனிக்கு சபிக்கிறாரே சுப்பிமணிய பாரதி, அப்படியென்ன தேசவிரோத செய்கையில் ஈடுபட்டனர் நீதிக்கட்சித் தலைவர்கள்?

காங்கிரஸ்காரர்கள்துப்பாக்கி எடுத்து பிரிட்டிஷ்காரனை விரட்டி, விரட்டி சுட்டதுபோலவும், ‘அய்யோ ஆளைவிட்டாபோதும்’னு வெள்ளைக்காரன் அலறி ஓடியதுபோலவும்,

இந்த நீதிக்கட்சித் தலைவர்கள் மட்டும், பிரட்டிஷ்காரனுக்கு கால் அமுக்கி விட்டு சலுகைகள் பெற்றதுபோல் – பாரதியை பின் பற்றி கதையளக்கிறார்கள், இன்றைய சுப்பிரமணிய பாரதிகளான சோவும் அவாள்களின் ஆசிர்வாதத்தைப் பெற்ற ஜெயகாந்தனும் இன்னும் பெறத் துடிக்கிற பார்ப்பனரல்லாத புத்திஜீவிகளும்.

அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சட்டத் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு, மாநில சட்டசபையில் குப்பை கொட்ட அலைந்தவர்கள்தானே இந்த காங்கிரஸ்காரர்கள்!

காங்கிரஸ்காரர்களும், இந்த படித்தப் பார்ப்பனர்களும் வெள்ளைக்காரனை எதிர்த்து எப்படி வீரம் செறிந்த போர் புரிந்திருக்கிறார்கள் பாருங்கள்,

“மக்கள் தொகையில் 2 சதவகிதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்களில் அச்சமூகத்து மாணவர்கள் 31 சதவிதம், பட்டதாரிகள் 68.8 சதவிகிதம், பொதுத் துறையில் 48 சதவிகிகதம் உள்ளனர். எஞ்சிய இடத்தில்தான் பெரும்பான்மை மக்களாகிய பார்ப்பனரல்லாதவர்கள், இஸ்லாமியகர்ள், போட்டி போட வேண்டியிருக்கிறது.”
(முனைவர் பி.சரசு எழுதி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளிட்ட, ‘வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் வாழ்வும் பணியும்’ என்ற நூலிலிருந்து இப்புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது)

இந்தச் சூழலில், நீதிக்கட்சித் தலைவர்கள் பார்ப்பனரல்லாதார் உரிமையை எழுப்பியதில் என்ன தவறு?
நீதிக் கட்சியை ஆரம்பித்து அவர்கள் என்ன மாபெரும் அய்யோக்கியத் தனத்தை செய்துவிடடார்கள்?

1916 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் தியாகராயர், பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்:

“நீதிகட்சிக்கு டாக்டர் டி.எம். நாயர் குறிக்கோள்களை உருவாக்கினார். அவற்றில் முக்கியமான இரண்டு;
1. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லா சமூதாயங்கள் ஒவ்வொன்றிலும் கல்வி, சமூகவியல், பொருளியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துறைகளில் முன்னேற்றமடையச் செய்தனர்.

2. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லா சமுதாயங்கள் எல்லாவற்றின் விருப்பங்களையும் நிறைவேற்றவும், பாதுகாக்கவும் அவர்களின் கருத்துக்களையும் விருப்பங்கள¬யும் அறிந்து ஆராயந்து – அரசாங்கத்திற்கு உண்மையானவையாகவும் தக்க சமயத்திலும் கருத்துக்களை அளிப்பதற்காகப் பொதுச் சிக்கல்களை ஆய்தல்.

மாண்டேகு இந்தியா வந்து சென்றபின் 1919ஆம் ஆண்டில் லண்டனில் ஜாயின்ட் பார்லிமென்டரி குழுமுன் வகுப்புவாரி உரிமை தொடர்பாக சாட்சியம் அளிக்க நீதிக்கட்சியின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் அங்கு சென்றார். சர்.கே.வி. ரெட்டி, சர்.ஏ.ராமசாமி முதலியார், கோகா, அப்பாராவ் நாயுடு ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றனர். புதிய சட்டத்தில் அரசுப் பணிகளிலும் பொது நிறுவனங்களிலும் வகுப்புவாரி உரிமை என்பது மக்கள் தொகைக் கேற்ப அமைந்த விகிதாசார முறையேயாகும் என இக்குழு சாட்சி அளித்தது.

தேர்தல் காலங்களில் பொதுத் தொகுதிகளில் பார்ப்பனரல்லாதார்க்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குழு கோரியது. இக்கோரிக்கை பிரிட்டனிலுள்ள அரசியல்வாதிகட்கு வியப்பை அளித்தது. எனென்னறால், பெரும்பான்மை பார்ப்பனரல்லாத சமுதாயம் சிறுபான்மை பார்ப்பன சமுதாயத்திடமிருந்து பாதுகாப்புக் கேட்பது அவர்கள் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. இதை டாக்டர் டி.எம். நாயரிடம் அவர்கள் அறிவித்தார்கள். அப்போது டாக்டர் நாயர் “ஓர் ஓநாயிடமிருந்து மிகப் பலவான ஆடுகளைப் பாதுகாப்பதில்லையா?” என்று விளக்கினார்.

பிறகு, ஜாயிண்ட் பார்லிமென்டரி குழவினரிடம் நீதிக் கட்சித் தலைவர்கள் சாட்சியம் அளித்தபோது ‘திராவிடச் சங்கம்’ சார்பில் சர்.ஏ. ராமசாமி முதலியார் குழு முன் சாட்சியம் அளித்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் தக்க சார்பாளர்களை அவர்கள் சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர்வாதிட்டார். இந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், நியமனம் மூலம் தாழ்த்தப்பட்டவர்கட்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனச் சட்டத்தில் வகை செய்யப்பட்டது.”

நீதிக் கட்சி பத்தரிகையான ‘திராவிடன்’ 3.10.1917இல்,

“லெஜிஸ்லேடிவ் கவுன்சிகளில் நிறவேற்றுமைகள் இடம் பெற்றால் உடனே பார்ப்பனரின் பெரிய ஓலம் கேட்கிறது. ஆனால், சாதி வேற்றுமைகள் பற்றி பேசப்பட்டால் அவர்கள் அதுபற்றி அறியாதவர்கள்போல் இருந்து விடுகிறார்கள். இந்தியர்களின் பிறப்புரிமை பற்றி இப்பொழுது நிறையப் பேசப்படுகிறது. ஆனால் பஞ்சமர்க்கு ஒரு நாயின் பிறப்புரிமை கூட மறுக்கப்படுகின்றது. ஒரு பஞ்சமர் மட்டும் லெஜிஸ்லேடிவ் கவன்சிலில் உறுப்பினராய் இருப்பாரேயானல் அவர் தம் சமுதாய மக்கள் அடைந்துவரும் இன்னல்களை அழுத்தமாக எடுத்துரைக்க மாட்டாரா? இதனாலேயே அரசாங்கதின் ஒவ்வொரு கவுன்சிலிலும் அரசாங்கத்தின் எல்லாப் பொது நிலையங்களிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாம் வறுப்புறத்துகிறோம்.”

என்று எழுதி பாரதி கும்பலின் சாபத்துக்கு ஆளானது.

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

 

 

Exit mobile version