“இந்து சமூக அமைப்பு, சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பே அது தூக்கியெறியப்பட்டிருக்கும். ஆனால், அது படிப்படியான சமத்துவமின்மையைக் கொண்டிருப்பதால், சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தீண்டப்படாதவர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து வந்துவிடுவதை சூத்திரர்கள் விரும்பவில்லை.
அவர்கள் தீண்டப்படாதவர்களுடன் சேர்ந்து சமூக முறைமையின் மேல் படிகளையெல்லாம் ஒரே மாதிரியாகக் கீழிறங்குவதைவிடத், தங்கள் மீது பிராமணர்கள் சுமத்துக்கின்ற அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்வதையே விரும்புகிறார்கள்.
இதன் விளைவாகத் தீண்டப்படாதவர்களின் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ள யாரும் இல்லை என்று ஆகிவிடுகிறது. அவர்கள் முற்றிலுமாகத் தனிமைப்பட்டு நிற்கிறார்கள். தனிமைப்பட்டிருப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு இயற்கையாகத் தோழமையாளர்களாக இருக்க வேண்டிய வகுப்புகளே அவர்களை எதிர்த்து நிற்கிறார்கள். இவ்வாறு தனிமைப்பட்டிருக்கும் நிலை தீண்டாமையை ஒழிப்பதற்கு மற்றொரு இடையுறாக உள்ளது.”
டாக்டர் அம்பேத்கர் அன்று சொன்னதை இன்றும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஜாதி உணர்வுகொண்ட சராசரி சூத்திரர்களும், ‘ஜாதி உணர்வு எனக்கு கிடையாது’ என்கிற முற்போக்கு சூத்திரர்களும், பார்ப்பனர்களும்.
அண்ணலின் முகத்தோடு பெரியார் திராவிடர் கழகத்தினர்
“தீண்டாதவர்களின் (தாழ்த்தப்பட்டவர்களின்) பரிதாபமான நிலையைக்கண்டு மனம் வருந்துவோர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது ‘தீண்டாதவர்களுக்கு நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்’ எனறு ஓலமிடுவதை வழக்கமாகக் கேட்கிறோம். இந்தப் பிரச்சினையில் அக்கறையுள்ள எவரும் ‘தீண்டத்தக்க இந்துவை (ஜாதி இந்துவை) மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்லுவதைக் கேட்பது அரிது.”
என்றார் அண்ணல் அம்பேத்கர்.
டாக்டர் அம்பேத்கர் சொன்னதற்கு சாட்சியாக இன்றும் பல சூத்திர, பார்ப்பன அறிவாளிகள் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை பார்த்தால் மட்டும் தீண்டாமைக்கு எதிராக பேசுவது. தலித் இளைஞர்களால் நடத்தப்படுகிற பத்திரிகைகளில் மட்டும் அம்பேத்கரை புகழ்வது என்று ‘பெர்ப்பான்ஸ்’ தருகிறார்கள்.
மீண்டும் மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் போய் ‘அம்பேத்கர் மாபெரும் தலைவர்’ என்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் சூத்திர அறிவாளிகள். தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கரை புறக்கணிப்தோ, அவமதிப்பதோ கிடையாது. தங்களுக்கான தலைவராக அவரை சரியாக புரிந்து கொண்டுள்ளனர்.
ஆனால், சூத்திரர்களும், சூத்திர எழுத்தளார்கள் பலரும்தான் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள். அவமதிக்கிறார்கள். ஆக, டாக்டர் அம்பேத்கரை கொண்டுபோய் சேர்க்க வேண்டியது, பிற்படுத்தப்படடவர்களிடம்தான். அதுதான் ஜாதி எதிர்ப்பு அரசியலின் சரியான. நியாயமான முறை.
இப்படி பிற்படுத்தப்பட்டவர்களிடம் அம்பேத்கரை கொண்டு போய் சேர்க்கும் முயற்சியாக, பெரியார் திராவிடர் கழகத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருப்பதை கண்டித்து 13-4-2010 அன்று பெரியார் திராவிடர் கழகததினர் கோவையில் அம்பேத்கர் படம் கொண்ட முகமூடி அணிந்து ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆர்ப்பட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஆறுசாமி முன்னிலை வகித்தார்.
மறுநாள் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு (14-4-2010) ‘தலித் அல்லாதவர்களின் கவனத்திற்கு’ என்று சுவரொட்டி அடித்து கோவை முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள்.
ஒரு ஆண்டுக்கு முன்பே ‘நான் யாருக்கும் அடிமையில்லை – எனக்கடிமை யாருமில்லை’ என்ற வாசகத்தோடு அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட டி சர்ட்டை அணிந்து கொண்டு ஈழத் தமிழருக்குத் துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டு கைதாகினர், கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு ‘டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியிட்டுக்குழு’ சார்ப்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
***
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடுவது தொடர்பான எங்களின் முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் தோழர்கள், தோழர் லெமூரியனை தொடர்புகொள்ளுங்கள்.
பா.லெமூரியன் – செல்பேசி: 9940475503
தொடர்புடைய கட்டுரைகள்:
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி * அம்பேத்கர் என்னும் ஆபத்து * ‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது *‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’ * இந்து என்றால் ஜாதி வெறியனா?

