Site icon வே. மதிமாறன்

நெஞ்சை அறுக்கிறது, செங்கொடியின் மரணம்; தியாகம் என்றாலும் அதுவும் மரணம்தானே


மூ
வரின் தூக்கிற்கு எதிராக வழக்கறிஞர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும் முன்னெடுத்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தொடர் ஓட்டத்தை போல். தோழர்கள் வடிவாம்பாள், அங்கயற்கண்ணி, சுஜாதா இவர்களின் உண்ணா விரத போராட்டத்தில் தொடங்கிய எழுச்சி, ரயில் மறியல், கோவை பாஸ்போட் அலுவலக முற்றுகை என்று போர்குணமிக்க போராட்டமாக மாறி,

மூவரின் தூக்கிற்கு தடை ஆணையைாக மலர்ந்திருக்கிறது.

இந்தப் போராட்டத்தை பெரிய அளவில் செய்தியாக்கி, தொடர்ந்து அக்கைறையோடு மக்கள் மன்றத்தில் சேர்த்து எழுச்சிக்கு துணை புரிந்த சன் செயதிகள் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சிகளுக்கும் நம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஊடகங்களின் மூலமாக, மக்களுக்கு நன்மையும்கூட நடந்திருக்கிறதே என்ற ஆச்சரியத்தோடே அந்த நன்றியை பகிர்ந்து கொள்கிறோம். (அதுவும் அன்னா அசாரேவின் ஆபாச அலையைத் தாண்டி,)

முதல் நாள் முடியாது என்ற முதல்வர், மறுநாள் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து, சட்டசபையில் தீர்மானம் நிறேவேற்றி இருக்கிறார். அவருக்கும் நன்றி.

எட்டுவாரத்திற்கு இடைக்கால தடைவித்தித்த சென்னை உயர்நீதின்றத்தின்  செயலும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனாலும், ஆறாத ரணமாக, நெஞ்சை அறுக்கிறது, தோழர் செங்கொடியின் மரணம். தியாகம் என்றாலும் அதுவும் மரணம்தானே. அதுவும் தோழரின் மரணம்.

‘மூவரின் உயிர் போகக்கூடாது’ என்று முயற்சிக்கிற நேரத்தில், நம்மில் ஒருவரின் உயிர் அதன் பொருட்டே போயிருக்கிறது என்பது வேதனையைத்தானே தரும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் இவர்கள் சிறைக்கு சென்ற அந்த ஆண்டு பிறந்துகூட இருக்கமாட்டார் செங்கொடி.

ஆனால், செங்கொடியின் தியாகம், முதல்வர் இந்தப் பிரச்சனை பற்றி முதல்முறையாக பேசுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

அதுபோல் திங்கள் இரவு சென்னை சைதாப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தீக் குளித்தார்.

உண்ணவிரத பந்தலில் நாங்கள் இருந்தபோது, ‘நான் இன்று இரவு தீக்குளிக்கபோகிறேன். வீட்டுக்கு மேல் கருப்புக் கொடி ஏத்து’ என்று ஆவேசமாக தன் மனைவியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் ஒருவர். அவரும் ஒரு ஆட்டோ ஓட்டுர்தான். (சினிமாவில் ஆட்டோ ஓட்டுநர்களை கிரிமனல்களாக மட்டுமே காட்டுகிற மிஷ்கின் போன்ற கருத்து கிரிமனல்கள் கவனத்திற்கு)

அவரை அழைத்து நாங்கள், ‘தீக்குளிப்பது தீர்வாகாது’ என்று நீண்ட விளக்கம் அளித்தோம். சரி சரி என்று சொல்லிவிட்டு, உண்ணாவிரத பந்தலில் தலைவர்கள் பேசும் பேச்சை கேட்க சென்றுவிட்டார். குறிப்பாக செங்கொடியின் தியாகம் பற்றிய உணர்ச்சிக் கொப்பளிக்கும் பேச்சுக்கள் அவரை அதிகம் கவர்ந்திருந்தன.

செவ்வாய் காலை சென்னை உயர் நீதிமன்ற வாசலில் இருக்கும்போது, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பாண்டியன்தான் சொன்னார், “தோழர் நேற்று நம்மிடம் பேசிய அந்த தோழர் தீக்குளித்துவிட்டார், போலும்’ என்றார்.

விசாரித்ததில் தீக்குளித்தவர் அவர் அல்ல. இவர் வேறு ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதை அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் தோழர் தெய்வ மணி உறுதி செய்தார்.

நேற்று நீதிமன்றத்தில் காலை 11 மணிவரை இருந்த இறுக்கம் கலைந்து மகிழ்ச்சியாக மாறியபோதும், செங்கொடியின் இழப்பும், ஆட்டோ ஓட்டுநரின் தீக்குளிப்பும் மனதை கூடுதல் கவலையாக்கியது.

ஆம், நம் எல்லோரையும்விட இந்த தீர்ப்பின் மகிழ்ச்சியை அதிகம் கொண்டாடக்கூடியவராக செங்கொடி இருந்திருப்பார் என்கிற எண்ணமும் அந்தக் கவலைக்கு காரணமாகியது.

அதே உணர்வோடே, இன்று மாலை நடக்கும் செங்கொடிக்கான வீரவணக்க ஊர்வலத்திலும்  கலந்து கொள்கிறோம்.

தொடர்புடையவை:

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, முதல்வருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

Exit mobile version