Site icon வே. மதிமாறன்

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

திடீரென்று ஒருவர் மாரடைப்பில் மரணம் அடைவதைப் போல், அஜ்மல் கசாப்பின் தூக்கு, தூக்கிடப் பட்டபின் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நடத்தி, வயதாகி நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்த பால்தாக்ரே மரணத்திற்கு, பதிலடி தருவதுபோல் அமைந்திருக்கிறது, அஜ்மல் கசாப்பிற்கான மரண தண்டனை.

அநேகமாக தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில் ‘கசாப் தூக்கை’ இனிப்புக் கொடுத்து விழாவாக கொண்டாடி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் அப்படி கொண்டாவில்லை என்று தீர்த்துச் சொல்லிவிடவும் முடியாது. அந்தப் பணியை தமிழ் பத்திரிகைகள் சிறப்பாக செய்திருக்கின்றன.

‘ஊரறிந்த பாப்பானுக்கு பூணூல் எதுக்கு?’ அப்படின்னு ஒரு பழமொழி தமிழர்களிடம் உள்ளது. தினமலரின் கதை தெரிந்ததுதான்.

‘செய்திகளை தாண்டிய சில்மிஷம்’ என்கிற ‘இந்து பார்ப்பன உற்சவத்தில்’ திராவிட இயக்க குடும்பத்தால் நடத்தப்படும் தினகரனும் தன்னை துடிப்போடு அர்பணித்திக் கொண்டு வருகிறது.

செய்திகளை பத்திரிகைகள் உருவாக்க முடியாது. பூகம்பமோ, புயலோ ஒரு பத்திரிகைகாக மட்டும் நடக்காது என்பதுபோல்தான், எல்லா செய்திகளுமே.

நடந்த சம்பவங்களை தேர்ந்தெடுத்து செய்திகளாக தருவதுதான் பத்திரிகையின் பணி. அதில் ‘எங்களின் செய்தி’ என்பதற்கான உரிமை அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள்தான்.

ஆனாலும், அதையும் தாண்டி இன்றைய பத்திரிகைகள், தங்களின் சொந்த காழ்ப்புணர்ச்சி, அரசியல் காரணமாக செய்திகளை தாங்களே உருவாக்குவது, (தினமலர் மூன்று முறை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கொன்று இருக்கிறது.) தலைவர்களின் அறிக்கைகளை, பேச்சுகளை தலைப்பிடும்போதே, விமர்சனத்தோடு வெளியிடுவது. குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேட்டியை அறிக்கையைக் கூட தினமலரும், தினமணியும் அவர்களின் இந்து அரசியல் கண்ணோட்டத்தோடு விமர்சித்துதான் தலைப்பிடுவார்கள்.

சரி, இதெல்லாம்கூட ‘அந்த பத்திரிகையின் சொந்தக் கருத்து இல்லை’ என்று வாதத்திற்காகவது ஒத்துக் கொள்ளலாம்.

ஆனால், ‘தலையங்கம்’ என்பது ஒரு பத்திரிகையின் நிலைபாடு. அதுதான் அவர்களின் அரசியல் பார்வை. அதில் சொல்லப்படுபவைகளுக்கு முழுக்க முழுக்க அவர்களே பொறுப்பு.

இந்த ‘பொறுப்புடன்’ தினகரன் நாளிதழும் தலையங்கம் எழுதி வருகிறது.

தினகரன் ‘தலையங்கம்’, மேலோட்டமாக பார்த்தால் ஒரு பிரச்சினையை நடுநிலையாக, மனிதாபிமானமாக சொல்வதுப் போல் இருக்கிறது. ஆனால் அது சொல்லத் துடிப்பபோதோ இந்துப் பார்ப்பனக் கண்ணோட்டமே.

அநேகமாக இன்று (22-11-2012) கசாப் தூக்கிலிடப்பட்டதற்காக ‘தலையங்கம்’ எழுதிய ஒரே தமிழ் பத்திரிகை தினகரனாக  இருக்கும்.

‘மூன்று பேரை தூக்கிலிடாதே. மரண தண்டனையை ஒழிப்போம்’ என்று தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்களும் மாணவர்களும் பல அமைப்புகளும் போராடினார்கள். அதன் பயனாய், மூன்று தமிழர்களின் தூக்கை நீதிமன்றமும், தமிழக அரசும் நிறுத்தி வைத்திருக்கிறது.

இது தினகரனுக்கு ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும் அளவிற்கு பெரிய கவலையாக இருக்கும்போல,

‘மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை இன்னும் தூக்கிலிடாமல் இருக்கிறார்களே’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த தினகரன், கசாப்பின் தூக்கை ஆதரித்து எழுதிய தலையங்கத்திற்கு, ‘ஆறுதல் அளித்த மரணம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறது. என்ன ஒரு மனிதாபிமான மனசு?

அதை மேலும் உறுதி செய்வதுபோல், முதல் வரியிலேயே, குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனை அவ்வளவு சீக்கிரத்தில் நமதுஅரசுகளால் நிறைவேற்றப்படுவது இல்லை. அஜ்மல்கசாப் வழக்கு ஒருவிதிவிலக்கு.’ என்று அதிரடியாய் ஆரம்பித்திருக்கிறது.

பிறகு, ‘காஷ்மீர் ஆசாமி அப்சல்குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கும் முன்னால் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேர் 21 ஆண்டுகளாக காவலில் இருக்கிறார்கள். பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கை கொன்ற பல்வந்த்சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.’ என்று எழுதியிருக்கிறது.

இதில் அப்சல் குரு, பல்வந்த் சிங்’ இருவரை பற்றி எழுதும்போது, ‘இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்ற வார்த்தைகளை பயன்படுத்திய தினகரன், ராஜிவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை பற்றி எழுதம்போது நேரடியாக எழுதினால் எதிர்ப்பு வரும் என்பதால், தந்திரமாக இன்னும் இருக்கிறார்களே?’ என்ற கவலையில் ‘மூன்றுபேர் 21 ஆண்டுகளாக காவலில் இருக்கிறார்கள்.’  என்று எழுதுகிறது.

இந்த தலையங்கம் காங்கிரஸ் கண்ணோட்டத்தில்கூட இல்லை, பி.ஜே.பியின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்பதற்கு சான்றாக,

‘குஜராத்தில் தேர்தல்வருகிறது. பலவீனமான அரசு, பலவீனமான பிரதமர் என்ற நரேந்திரமோடியின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அனைத்தையும் திசை திருப்ப கசாப் பயன்பட்டிருக்கிறான்.’ என்று துக்ளக் சோ பாணியல் பார்ப்பன இந்துக் கண்ணோட்டத்தோடு கருத்து சொல்கிறது.

‘மூன்றுபேர் 21 ஆண்டுகளாக காவலில் இருக்கிறார்கள்.’ இவர்களுக்கு தண்டனைகள் சீக்கரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற ‘உள்ளுணர்வு’ தினகரனுக்கு இருப்பதால், அதே தலையங்கத்தின் இன்னொரு இடத்தில்,

‘அரபுநாடுகள், சீனா, அமெரிக்கா போன்று உடனே விசாரித்து உடனே மரணதண்டனையை நிறைவேற்றும் வழக்கம் இங்கு இல்லை.’ என்று மேலும் கவலையும் ஆதங்கமும் படுகிறது தினகரன்.

இதே ஆதங்கமுடனும் கவலையுடனும் சங்கரராமனை கொலை செய்த, சங்கராச்சாரி ஜெயேந்திரன் வழக்கை., ‘அரபு நாடுகள் பாணியில் உடனே விசாரித்து உடனே மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்’ என்று தினகரன் ஒரு தலையங்கம் எழுதுமா?

அதுகூட வேண்டாம், அப்படி ஒரு கருத்தை யாராவது சொன்னால், அதை செய்தியாகவாவது வெளியிடுமா?

கொலை செய்த ஜெயேந்திரனை காப்பாற்ற இவர்கள் துடிக்கும்போது, கொலை செய்யாத பேரறிவாளன், முருகன், சாந்தன் இவர்களை காப்பாற்ற நாம் முன் வரவேண்டாமா?

மூவரை கொல்லத் துடிக்கிற பயங்கரவாதிகளின் சதிகளை முறியடிப்போம். மூவர் உயிர் காப்போம்.

தொடர்புடையவை:

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

ஆனந்த விகடனும் – பெரியாரும்

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

Exit mobile version