Site icon வே. மதிமாறன்

‘பொய் சொல்லக் கூடாது’ பாப்பாவுக்கு மட்டும்தானா? பாரதிக்கு இல்லையா?

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -4

முதல் அத்தியாயம் (2)

 

2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெண்களுக்கு எதிராக சிந்தித்து இருக்கிறார்’ என்று கோபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்றாரே என்று சந்தேகிப்பதுகூட இல்லை.
சுப்பிரமணி பாரதிக்கு மட்டும் இலக்கியத்தில் ‘இடஒதுக்கீடு’ போலும்.

 

முரண்பாடுகளின் தொடரச்சியில், காந்தியை – காந்தியத்தை கேலி செய்து,

‘உப்பென்றும் சீனி என்றும் உள்நாடடுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி! கிளியே; செய்வதறியாரடீ!’

என்று கை கொட்டி சிரித்து கேலி செய்யும் பாரதி – மற்றொரு பாடலில்,

‘வாழ்க நீ; எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க; வாழ்க!’
– என்று வானுயர ‘கட்அவுட்’ வைத்து கைதட்டுகிறார்.

காரணம் – நல்லது கெட்டது என்று நாட்டில் பேசப்படுகிற அனைத்துச் செய்திகளையும் கவிதையாக்கி ரசிப்பது. அதன் பொருட்டே – அல்லாவைப் பற்றி பாடல், ஏசுவைப் பற்றிய பாடல், ரஷ்ய புரட்சி பற்றிய கவிதை, பெண் விடுதலை குறித்த பாடல்கள் இன்னும் குள்ளசாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணசாமி மீது பாடல்கள்.

தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள்.

முரண்பாடுகள் என்பது, ‘கவிதா மனோபாவம்’ போலும்.
‘உலகில் இந்து மத்திற்கு இணையாக ஒரு மதமும் கிடையாது. அதில் எல்லாம் இருக்கிறது.’ – என்று தோள்தட்டி, தொடை தட்டி – பாகம், பாகமாக அர்த்தமுள்ள இந்து மதம், யோக மாலிகா, ராக மாலிக என்று பேப்பர்களை வீணடித்த கண்ணதாசன், சாகும்போது மரண வாக்குமூலம் போல, ‘ஏசு காவியம்’ பாடிவிட்டு செத்துப் போனார்.

கண்ணதாசன் மாதிரி தனக்கென்று தத்துவம், இலக்கு எதுவும் இல்லாத பித்துக்குளி, புகழ் விரும்பி, தேவைகளுக்கு அடிமையானவர் என்று சுப்பிரமணிய பாரதியை நாம் சுருக்கிவிட முடியாது.

பெண் விடுதலை, சுதந்திரம், ரஷ்ய புரட்சி, உலகச் செய்திகள் என்று ‘எனக்கு இதெல்லாம் தெரியும் பார்’ என்ற பந்தா இருந்தாலும், பார்ப்பனியம், ‘இந்து மத’ சிந்தனையில் முரண்பாடுகள் இல்லாத முழு சுப்பிரமணய பாரதியை நாம் ‘தரிசிக்க’ முடிகிறது.

இந்தியாவை ‘பாரதம்’ என்று சொல்வதிலேயே கவனமாக இருந்திருக்கிறார்.

‘இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே’

-என்ற ஒரு இடத்தைத் தவிர – தன் கவிதைகள் எல்லாவற்றிலும் ‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவதி’லேயே குறியாக இருந்திருக்கிறார், ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர். அதுவும் பாரதத்தில்  வாழ்கிற அனைவரும் ‘ஹிந்துக்கள்’ என்று அடையாள அட்டை வேறு வழங்குகிறார்.

‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறார் என்றால், அது மகாகவியை கேவலப்படுதியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்களை அள்ளித்தருகிறார்’ என்று நாம் புளுகி வைப்போம்.

-தொடரும்

இதன் முந்தைய பகுதிகளைப் படிக்க

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

Exit mobile version