‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 11
மூன்றாவது அத்தியாயம்
கிருபானந்த வாரியாரை ‘ஸ்வாமிகள்‘ என்று அவரின் ஜாதிக்காரர்கள், இன்னும் பார்ப்பனரல்லாத பக்த கோடிகள் பீற்றிக் கொண்டாலும்,“அவரின் வாய் ‘தெய்வத்தின் குரலை‘ சொல்லுகிற வாயல்ல-அது வெறுமனே பிரசங்கம் பண்ணுகிற வாய். அவர் ஒரு பிரசங்கி”–என்று அதிகப் பிரசங்கிகளான பார்ப்பனர்கள், வாரியாரின் ஒளிவட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த மின்சாரத்தின் ‘பீஸ் கேரியரை‘ பிடுங்கி விட்டனர்.
ஆன்மீகப் பிரசங்கம் செய்த அந்த வாயின் வாரிசாக – புது வாய் ஒன்று வந்திருக்கிறது. இந்த வாய்-பார்ப்பன வாயோ, பார்ப்பனரல்லாத வாயோ தெரியவில்லை.அந்த வாய்க்குச் சொந்தக்காரர் சுகி. சிவம்.
அவர் ஒரு கதை சொல்கிறார்;
“ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெரியவர் குமாரில பட்டர் என்பவர், வேத வழி வந்த வைதீகர். வேத அத்யனம் செய்த வேதவித்தகர். அவர் காலத்தில் வேத எதிர்ப்பு இயக்கம் புத்தர்களால் வலுப்பெற ஆரம்பித்தது. யாகங்களில் பலி தருவதை எதிர்த்து-யாகங்களை எதிர்த்து வேத எதிர்ப்பாக பவுத்தம் திசைமாறியது.
பவுத்தர்களை வீழ்த்த நினைத்த குமாரிலபட்டர், புத்தர்கள் தத்துவத்தைப் பயில விரும்பினார். வேத அந்தணராக நுழைந்தால் விரட்டப்படுவோம் என்பதைப் புரிந்து கொண்டு வேத எதிர்ப்பாளியாகத் தம்மைக் காட்டிக் கொண்டார்.
எதை எதிர்ப்பதானாலும் அதை முழுமையாகத் தெரியாமல் எதிர்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் புத்த மத நூல்களை அவர் படிக்க நினைத்த நேர்மை மரியாதைக்குரியது.
தனது வைதீக அனுஷ்டானங்களை யாரும் காணாத மறைவில் செய்து கொண்டு பவுத்தராக வாழ ஆரம்பித்தார். உள்ளும், புறமும் வேறு வேறாக வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு. பவுத்த குருமார்கள் வேதத்தைப் பழித்தபோது இதயங்க கசங்க கண்ணீர் விடுவார்.
‘ஏன் அழுகிறீர்கள்?’ என்று குருமார்கள் கேட்டால், “ஆஹா… என்ன கண்ணீர்” என்று சமாளிப்பார். ஆனால் புத்த பிட்சுகள் அவரைப் புரிந்து கொண்டார்கள்.
புத்த விகாரத்தை (மடம்) விட்டு அவரை அனுப்புவதைவிட உலக விவகாரத்தை விட்டே அவரை அனுப்புவது என்று தீர்மானித்தனர். புத்த விகார பிட்சுகளின் மன விகாரம் கொடுமையானது. ஆட்டைக் கூட கொல்லாதே என்ற புத்தர் வழி வந்தவர்கள் ஆளையே கொல்ல முடிவு செய்தனர். புத்த விகாரத்தின் ஏழாம் மாடியில் இருந்து அவரைத் திடீர் என்று காலை வாரி விட்டனர்.”
இதற்கு மேலும் அவர் கதையளக்கிறார். நமக்கு இதுவரை போதும்.இந்தக் கதையை அவர் ‘எங்கிருந்து கிளம்பினார்‘ என்று சொல்லவில்லை.நேரே பார்த்த சாட்சி போலவே சொல்லியிருக்கிறார். ஒரு வேளை போன ஜென்மத்து ஞாபகமோ என்னவோ?
சரி, இந்தக் கதை நமக்கெதற்கு?
இது நமது ‘கவிதாநாயகனுக்கு‘ அப்படியே பொருந்துகிறது.
இதில் வரும் குமாரிலபட்டர்-நமது மகாகவியையே ஞாபகப்படுத்துகிறார்.
ஆனால், புத்தத் துறவிகளோடு பொறுத்திப் பார்க்கத்தான் யாரும் இல்லை.
–தொடரும்
இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க
இங்கே சொடுக்கவும்
