Site icon வே. மதிமாறன்

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை கண்டித்து காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் பெற்றது பாராட்டுக்குரியதுதானே?
-கண்மணி

ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில், கவுண்டமணியை அவர் மனைவி கதவைச் சாத்திவிட்டு கையை முறுக்கி குத்து குத்துன்னு குத்துவார்.

கவுண்டமணி ‘அய்யோ, அம்மா’ என்று கத்துவதற்கு பதில்,

“யார் கிட்ட வைச்சுக்கிற. என் கிட்ட வைச்சிகிட்ட அவ்வளவுதான். உன்ன கொன்னுபுடுவேன் கொன்னு.” என்று ஒரு பில்டப் சவுண்ட கொடுப்பாரு.

பூட்டிய  கதவுக்கு வெளிய நிக்கிற ஜனங்கள் எல்லாம், ‘பொண்டாட்டிய போட்டு எப்படி அடிக்கிறான்?’ என்று பதட்டதுடன் பேசிக் கொள்வார்கள்.

வலி தாங்க முடியாத கவுண்டமணி, கையில ஒரு அருவாள தூக்கிக்கிட்டு    “உன் தலைய வெட்டமா விடமாட்டேன்” என்ற சவடால் சத்ததுடன்  கதவை திறந்துக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடுவாரு.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்த பிரச்சினையில், காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்ட்டுகளை வெளியே போகச் சொல்லி ரொம்ப நாள் ஆகுது. ‘கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் வாங்குறதால ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்ல’ என்று காங்கிரஸ் பலமுறை சொல்லியாச்சு.

ஆனால் இவர்கள்தான் இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.

‘காங்கிரஸ் சொல்லி போன மாதிரி இருக்கக்கூடாது’ என்பதற்காகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் இப்படி பில்டப் சவுண்ட் கொடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள்.

இந்த பில்டப்பை நிரூபிப்பது போல் வெளியே போவதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குள், ஜோதிபாசு, சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்கள் ‘ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவத்ததை திரும்பப் பெறவேண்டும். காங்கிரசுக்கு ஆதரவை அளிக்க வேண்டும்’ என்று கோஷ்டியாக உடைந்திருக்கிறார்கள்.

இந்தியாவை சூழப்போகிற  அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்த இருள், கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் நிறைவேறினாலும் ஆச்சரியமில்லை.

அதற்கும் கவுண்டமணியிடம் நல்ல வசனம் இருக்கிறது…

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா…

பின்னினைப்பு :

“அது போன மாசம்… ”   – சோம்நாத் சட்டர்ஜி

இது வடிவேலு ஸ்டைல்

புதுடெல்லி, ஏப். 25- தனது எச்சரிக்கையையும் மீறி பகுஜன் சமாஜ் எம்.பி. தொடர்ந்து அமளி செய்ததால் ஆவேசம் அடைந்த மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, எனக்கு இந்த பதவியே வேண்டாம். என்னை விடுவியுங்கள் என்று கூறினார்.
– விடுதலை நாளிதழ்,  ஏப்பரல் 25, 2008

கொல்கத்தா, ஜூலை 14:
சபாநாயகர் பதவி, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதனால், பதவி விலக மாட்டேன், என்று சோம்நாத் சட்டர்ஜி அறிவித்திருந்தார்.
– தினகரன் சூலை 14, 2008

Exit mobile version