Site icon வே. மதிமாறன்

டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம்

al327

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்! -2

தொடர்-3

‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கலாம், பெண்களையும் அர்ச்சகராக்கலாம், தமிழில் அர்ச்சனை செய்’ என்று தீவிரமாகஉரிமைகள் எழும்போது, ‘அதுக்கூடாது’ என்பதற்கு பார்ப்பனர்கள் சொல்லுகிற காரணம், “இந்து மதம் பழைமையானது. ஆகமங்களும் அப்படியே. அதை மாற்றினால் தெய்வக் குத்தம் ஆகும். கடவுள் செயல்கள் மாறுதலுக்கு உரியவை அல்ல” என்கிறார்கள்.

 டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனர்களின் இந்த விளக்கத்தை ‘பச்சைப் பொய்’ என்கிறார். ‘இந்து மதத்தில் புதிர்கள்’ என்ற நூலின் முன்னுரையை இப்படி துவங்குகிறர்;

 பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதவாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் இரண்டாவது நோக்கம், பிராமணர்களின் தந்திரங்களைச் சாதாரண இந்து மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து, பிராமணர்கள் எப்படியெல்லாம் தங்களை ஏமாற்றியும் திசை திருப்பியும் வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களைச் சுயமாகச் சிந்திக்க தூண்டுவதாகும்.” என்று குறிப்பிடுகிறார்.

 பார்ப்பனர்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நட்டம் என்றால் இந்து மதத்துக்குள் சின்ன மாற்றத்தைக்கூட அனுமதிக்க மாட்டார்கள். லாபம் என்று தெரிந்தால் அவர்கள் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ள தயங்க மாட்டார்கள், என்பது இன்று மட்டுமல்ல அவர்களின் வேத, புராண, இதிகாச காலங்களில் இருந்தே தெளிவான ஒன்று.

 பார்ப்பனரல்லாதவர்களின் கடவுளாக இருந்த முருகன், லாபம் தருகிற வருமானம் வருகிற கடவுளாக மாறியபின் அதுவரை முருகனை வழிபடாத பார்ப்பனர்கள், ‘சுப்பிரமணிய சுவாமி, கந்தசாமி’ என்று முருகனை பெயர் மாற்றி ‘முருகன் கோயில்களை’ கைப்பற்றினார்கள். (இன்று கூட பார்ப்பனர்கள் ‘முருகன்’ ‘ஆறுமுகம்’ போன்ற பெயர்களை வைத்துக் கொள்ள மாட்டர்கள். ‘சுப்பிரமணிய சுவாமி’, ‘கந்தசாமி’ என்றுதான் வைத்துக் கொள்வார்கள்.)

 சமீப காலத்தில்கூட தாழ்த்தப்பட்ட மக்களின் (அருந்ததியர்கள் மற்றும் பறையர்கள்) பெண்தெய்வங்களான சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் போன்ற கோயில்களை பார்ப்பனர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். நாடார்களுக்கு சொந்தமான சில கோயில்களையும் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள் பணக்கார நாடார்கள்.

 60 ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் முருகன் கோயில் நுழைவு வாயிலில் ‘பள்ளன், பறையன், சாணான், சக்கிலி நுழையத் தடை’ என்று எழுதி வைத்திருந்தார்கள். பெரியார் இயக்கத்தின் போராட்டத்திற்கு பின்னே அது மறைந்தது. (சாணன் என்பது நாடார்களைக் குறிக்கும்.) நாடார்களுக்கு திருமணம் செய்து வைக்கிற புரோகித வேலைக்குப் பார்ப்பனர்கள் வரமாட்டார்கள். ‘அவர்களை கண்டாலே தீட்டு’ என்று ஒருகாலத்தில் பார்ப்பனியம் அவர்களை ஒதுக்கி வைத்தது. ஆனால் இன்று பணக்கார நாடார்களின் திருமணங்கள் பெரும்பாலும் பார்ப்பனப் புரோகிதரைக் கொண்டுதான் நடக்கிறது.

 வருமானம் வரும்போது “லோகம் மாறுதோ இல்லியோ நாமும் மாறிக்க வேண்டியதுதான்” என்று முற்போக்காளர்கள் போல் பேசுகிற பார்ப்பனர்கள், பார்ப்பனியத்திற்கு எதிராக பார்ப்பனரல்லாதவர்களின் உரிமைக்காக கோயில் நுழைவு போராட்டம், தேவராம், திருவாசகம் பாடுவது என்று முயற்சித்தால், ஒரு ரவுடியைப்போல் மிக மோசமாக நடந்துக்கொள்வார்கள்.

 இதுபோன்ற பார்ப்பனர்களின் செயல்களை டாக்டர் அம்பேத்கர் தனக்கே உரிய வீச்சோடு அம்பலப்படுத்துகிறார்;

“எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரமா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை (பிராமணர்களை) ஒருவர் கேட்கலாம். அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணைனையும் பிரமாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள்.

 இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம்.

பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்க்க உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்க்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்க்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

 அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்க்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”

டாக்டர் அம்பேத்கர் சொன்னது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மசூதியிடத்தில் ராமர் பேரில் கோயில் கட்ட முயற்சிப்பதும், இல்லாத பாலத்தை ராமர் பேரில் இருப்பதாக சொல்வதும் மதத்தை வியாபாரமாக மட்டுமில்லாமல், அரசியலாகவும் மாற்றுவதில் வேத காலத்தில் இருந்தே பார்ப்பனியத்தின் சதி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 ***

 இந்து மத்தின் மூடத்தனங்களை, அதன் ஜாதி வெறியை, பெண்ணடிமைத்தனத்தை முற்போக்காளர்கள் நெருக்கிப் பிடித்து கேள்வி கேட்டால், “இந்த சீர்கேடுகள், இடையில் யாராலோ புகுந்தப்பட்டது. வேதகாலத்தில் ஜாதிய வேறுபாடோ, பெண்ணடிமைத்தனமோ கிடையாது” என்று சுப்பிரமணிய பாரதியைப் போல் கதையளப்பார்கள், இந்து மதவெறியர்கள்.

 “வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே”

 “வேத வுப நிடத மெய்நூல்க ளெல்லாம் போய்

பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே”

 “வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பாளோ பாரததேவி!”

 

என்று வேதத்தை உயர்வாக போற்றி பூரிக்கிற சுப்பிரமணிய பாரதியை போன்ற சுயஜாதி பிரியர்களுக்கு உரைப்பது போல், டாக்டர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்;

“பிராமணர்கள் மிகவும் விஷமனத்தனமான ஒரு கருத்தை மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை. தவறுக்கிடமற்றவை என்பதே இந்தக் கருத்து. இந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், இந்து நாகரிகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானல் இந்தக் கருத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்க வேண்டும்.

வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள்தான் அவற்றைப் புனிதம் எனறும் பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் பிற்காலத்திய இடைச்செருகளான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள் பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன. இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள் எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளைடியத்து, தங்களை வழிபடுவோருக்குக் கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்ளும் வேண்டுகோள்களைத் தவிர வேறெதும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமல் போயிற்று. ஆனால் பிராமணர்கள் பரப்பியுள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியில் இருந்து இந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இந்த விடுதலை ஏற்படாமல் இந்தியாவிற்கு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத் தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்”

 என்று குறிப்பிடுகிறார்.

 

 

 மாக்ஸ் முல்லர் போன்ற ஜெர்மானியர்களும் இன்னும் சில வெள்ளைக்காரர்களும், (திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருக்காங்களே அது மாதிரி ஆளுஙக) வேதங்களை உயர்வாக மதிப்பிட்டு உலகம் முழுக்க பரப்பியபோது அதை உடைத்து இந்து மதத்தை, பார்ப்பனியத்தை, வேதங்களை, உபநிடதங்களை, புராணங்களை, இதிகாசங்களை மிகத் துல்லியமாக, வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி கேள்வி கேட்டு அதை அம்பலப்படுத்தியிருக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

 இவைகளைப் பற்றியான டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு உலகத் தரம் வாய்ந்தது. அதனால்தான் யாரையும் தனக்கு தலைவர் என்று அறிவிக்காத சுயம்பு சிந்தனையாளரான தந்தை பெரியார், ‘என் தலைவர்’ என்று டாக்டர் அம்பேத்கரை மட்டும் குறிப்பிட்டார்.

 இவ்வளவு பெரிய தலைவரை, உலகம் வியக்கும் அறிஞரை பார்ப்பனர்கள் மட்டும் அவமதித்தால் அதில் அர்த்தம் இருக்கறது! ஆனால், தலித் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்ட தலித் அல்லாத எல்லா ஜாதியை சேர்ந்தவர்களும் சில நேரங்களல் இஸ்லாமியர்களும், ‘முற்போக்காளர்களும்’ கூட ஏதோ ஒருவகையில் அவமதிக்கிறார்கள்.

 டாக்டர் அம்பேத்கரை தலித் தலைவராக மட்டும் சித்தரிப்பவர்களை, அவர் சிலையை சேதப்படுத்துபவர்களை, அவர் சிலைக்கு மாலையிடுவதை கேலி செய்பவர்களை, அவர் பெயரை புறக்கணிப்பவர்களை & முட்டாள்கள், அயோக்கியர்கள், ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், மத வெறியர்கள், மனித தன்மையற்றவர்கள், தலித் விரோதிகள், காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள் என்று நீங்கள் இந்த வார்த்தைகளில் எந்த வார்த்தைக் கொண்டு முடிவு செய்தாலும், அல்லது இதை விட கடுமையான வார்த்தைகளால் திட்டினாலும் அது தவறான முடிவல்ல. செயலல்ல.

 -தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

Exit mobile version