செம்மொழி மாநாட்டில் ‘சிந்து வெளி எழுத்துச் சிக்கல்: திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்திருக்கிறார் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அஸ்கோ பர்ப்போலோ,
அதில், ”கி.மு 2600 முதல் 1900 வரை சிந்து சமவெளியில் திராவிட நாகரீகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது; முகம், களம், பழம், காணா போன்ற சொற்கள் ரிக்வேதத்தில் பரவலாக பயன்படுத்தட்டுள்ளன. இந்த சொற்கள் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை. ”ஹரப்பா பகுதியில் வாழ்ந்தவர்கள் திராவிட மொழி பேசியவர்கள்“ என்று குறிப்பிட்டு இருக்கிறார் அஸ்கோ.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த, அலெக்சாண்டர் துபியான்ஸ்கி, ”மங்கோலியர்களின் மொழியில் நிறைய தமிழ் சொற்கள் கலந்திருக்கிறது“ என்று ஆராய்ந்திருக்கிறார்.
இதைக்கேட்டு தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் பொங்கி பூரிக்கிறார்கள். ஆனால் இந்த செய்தி, டாக்டர் அம்பேத்கரை முறையாக படித்தவர்களுக்கு புதியதல்ல. அண்ணல் அம்பேத்கர் இதை பல ஆண்டுகளுக்கு முன்னே தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்:
“திராவிடர்’ என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல.‘தமிழ்’ என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல், ‘தமிழ்’ என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் தமில்லா ஆகி முடிவில் திராவிடா என்று உருத்திரிந்தது.
திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் ஞாபகத்திற்கு கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை, மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும்.
உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுததிய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும்.
வடஇந்தியாவிலிருந்து நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு, அதற்குப்பதில் சமஸ்கிருதத்தை வரித்துக்கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தபடும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
‘திராவிடர்’ என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரையில் திராவிட மொழியை தாய் மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்; அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரே மக்கள் என்றமுறையில் தங்களைத் திராவிடர்கள் எனறு அவர்கள் அழைத்துக்கொள்வது மிக மிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணம்” என்கிறார் அம்பேத்கர்.
தனிப்பட்ட முறையில் பிறப்படிப்படையில் ஒரு விசயத்தை அணுகுகிற தன்மை அம்பேத்கரிடம் துளியும் கிடையாது.
அவர் எழுத்துக்களில் மகர் ஜாதி உணர்வோ, மராட்டியம், மாராட்டியன் என்கிற மொழி, இன அடிப்படையில் பெருமை பேசுகிற தன்மையை துளியும் பார்க்க முடியாது.
எது தனக்கு உண்மை என்று தெரிகிறதோ அதை துணிந்து சொல்வது. யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களின் சார்ப்பாக போராடுவது இதுதான் அண்ணல் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட சமூதாயத்தில் பிறந்தார் என்பதினால் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்கள் தான் தீண்டாமை என்கிற மோசடியில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதினால் தான் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையில் தீவிரமாக இயங்கினார். அதுபோன்ற காரணத்தால்தான் தாழ்த்தப்பட்ட பெண்களைவிட, ஆதிகக்கஜாதி பெண்கள்தான் ஆணாதிக்கத்தின் நுகத்தடியில் அதிகம் சிக்கி தவிக்கிறார்கள் என்று இந்து சட்ட மசோதவை கொண்டு வந்தார்.
இந்தியாவில் இவருக்கு இணையான நேர்மையான ஆய்வாளரை பார்க்க முடியாது. ‘தீமை அந்த காலத்திலிருந்து இருக்கிறது. சமஸ்கிருதத்தில் தமிழ் கலந்திருக்கிறது. வேதத்தில் ஆதாரம் இருக்கிறது’. என்று மட்டும் சொல்லிவிட்டு எச்சரிக்கையாக ஒதுங்கிக் கொள்கிற ஒரு கோழையான ஆய்வாளனைபோல் நேர்மையற்றவரல்ல அம்பேத்கர்.
ஏன் இருக்கிறது? என்றும், அதை உண்டாக்கியவர்கள் யாரோ அவர்களை அம்பலப்படுத்தி கடுமையாக விமரிசிக்கவும் தயங்கியதில்லை அண்ணல் அம்பேத்கர். அவரின் ஆய்வில் இருக்கிற இந்த விமர்சனக் கண்ணோட்டம்தான் பார்ப்பன மற்றும் ஆதிக்க ஜாதிக்காரர்களின் வீரோதத்தையும் புறக்கணிப்பையும் அவருக்கு பெற்றுத்தந்தது. ஆனாலும் எந்த ஆய்வாளனுக்கும் இல்லாத பெரும் சிறப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் மாபெரும் தலைவராக அதே விமர்சன ஆய்வு கண்ணோட்டம்தான் அவரை உயர்த்தியது.
கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற வெளிநாட்டு அறிஞர்களையும் இன்னும் பிள்ளைமாரு, அய்யிரு, முதலியாரு, செட்டியாரு போன்ற பல உள்ளுர் அறிஞர்களின் ஆய்வையும் பெருமிதமாக குறிப்பிடும் தமிழனவாதிகள், ஆய்வாளர்கள், முற்போக்காளர்கள்; தமிழ் குறித்த அண்ணல் அம்பேத்கரின் இந்த ஆய்வை குறிப்பிட்டு சொல்வதே இல்லை.
கேடடால், ’குறிப்பிடக் கூடாது என்பதல்ல; அதை நாங்கள் படிக்கவேயில்லை.’ என்பார்கள்.
அம்பேத்கரை திட்டமிட்டோ, அலட்சியமாகவோ படிக்காமல் இருப்பதே ஒரு ஜாதிய மனோபாவம்தான்.
தொடர்புடையவை:
பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம் * அம்பேத்கர் என்னும் ஆபத்து * முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் * ‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது *
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’ * இந்து என்றால் ஜாதி வெறியனா? * 60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…

