Site icon வே. மதிமாறன்

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

மெரினா படம் சென்னையைச் சரியாகதானே காட்டியது?

-சிவகாமியின் செல்வன், திருத்துறைப்பூண்டி

சென்னையைச் சரியாகக் காட்டவில்லை. ஆனால், மோசமாகவும் காட்டவில்லை. மற்றபடி தமிழ் சினிமா சென்னையை, சென்னை மக்களைச் சென்னை மொழியை. இழிவானதாக இழிவானவர்களாகத் தொடர்ந்து சித்திரித்துக் கொண்டு வந்திருக்கிறது.

குறிப்பாகச் சென்னை மொழியை மிகக் கேவலமாக அவமானபடுத்திக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் பேசுவது போன்று செயற்கையான, சென்னை தமிழைச் சென்னையில் நீங்கள் எங்குமே பார்க்க முடியாது.

சென்னை தமிழை இப்படிக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தியதற்கான முழுக் காரணமும் சென்னை வாழ் பார்ப்பனர்களே.

சென்னையின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்ட, வன்னிய, மீனவ மக்களை; பார்ப்பனர்களின் நாடகங்களில் ரவுடிகளாகச் சித்திரித்து, அந்தக் கதாபாத்திரத்தை பார்ப்பனரே ஏற்று, இழிவான உச்சரிப்புகள், செய்கைகள் மூலம் சென்னை மக்களையும் இனிய சென்னை மக்கள் மொழியையும் கொச்சைப்படுத்தினார்கள்.

அதில் சோ போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜாம்பஜார் ஜக்கு போன்ற வேடங்களில் அவர் பேசிய மொழி இந்த உலகத்தி்ல் எங்கேயும் யாராலும் பேசப்படாத மொழி.

நாடகத்தின் தொடர்ச்சியாகச் சினிமாவுக்கு வந்த பார்ப்பனர்கள், சென்னை சேரி மக்களுக்கு எதிரான கருத்தோடும், கதாபாத்திரத்தோடுமே வந்தார்கள். மதுரை மற்றும் கோவை பகுதிகளில் இருந்து சினிமாவிற்கு வந்த இளைஞர்களும்கூட, சென்னை மொழியைக் குறித்துப் பார்ப்பனர்கள் கற்றுத் தந்த கண்ணோட்டத்தோடே படம் எடுத்தார்கள்.

உண்மையில் சென்னை தமிழ் என்பது, சென்னையில் மட்டும் பேசப்படுகிற மொழியல்ல; அது வடஆற்காடு, திருவண்ணாமலை. விழுப்புரம் மாவட்டத்து பேச்சு மொழி. மிக அதிகமாக வட ஆற்காடு மாவட்ட மொழி.

கஸ்மாலம், நாஷ்ட்டா போன்ற சொற்கள் எல்லாம் உருது சொற்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் உருது பேசுகிற இஸ்லாமியர்கள் அதிகம். தாழ்த்தப்பட்ட மக்களும், உருது இஸ்லாமியர்களும் நெருங்கி வாழ்கிற பகுதிகளில் உருது வார்த்தைகள் கலந்து பேசுகிற தமிழே சென்னை தமிழாக அறியப்படுகிறது.

சரியாகச் சொன்னால், சென்னை தமிழ் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான ஒற்றுமையின் அடையாளம். அதற்குச் சாட்சியாகச் சென்னை, வேலூர், ஆற்காடு, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளின் மத்தியில் இஸ்லாமியர்களின் பச்சை கொடி பறப்பதை பார்க்கலாம். இருவரும் கலந்தே வாழ்கிறார்கள்.

சினிமாவில், சென்னை தமிழை ஓரளவுக் சரியாகப் பயன்படுத்திய ஒரே தமிழ்த் திரைப்படம், வெங்கட் பிரபுவின் சென்னை 28.

சென்னை மக்களின் வாழ்க்கை குறித்துச் சரியான அரசியல் பார்வையோடு திரைப்படம் எடுக்கக் கூடியவர் இன்றைய இயக்குநர்களில் இயக்குநர் எஸ். பி. ஜனநாதனுக்கு இருப்பதாக உணர்கிறேன். அதற்கான அறிகுறிகள் அவரின் ‘ஈ’ படத்தில் இருந்தது.

‘சென்னையில் குறிப்பாக மீனவ மக்களோடு வளர்ந்தவன். சென்னையைக் குறித்துச் சிறப்பான படம் எடுப்பது தனது லட்சியம்’ என்றும் என்னிடம் தெலைபேசியில் பேராண்மை படம் விமர்சனம் தொடர்பாகப் பேசும்போது இயக்குநர் எஸ் பி ஜனநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.

ரேடியோவில் ஒலிபரப்பான பேட்டி என்று நினைக்கிறேன், ஒருமுறை எழுத்தாளர் சிவசங்கரி “ச்சீ என்ன தமிழ் இதெல்லாம்..? கஸ்மாலம், நாஸ்ட்டா, கயித, குந்து’ என்று அலுத்துக்கொண்டார்.

இப்படிச் சிவசங்கரி மட்டுமல்ல; தாடி வைச்சிக்கிட்டுத் தன்னை எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்கிற திருப்பூர் கண்ணனோ, கோபாலனோ பெயர் நினைவில்லை அவர் உட்பட ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

‘ஸ்நானம், ஜலம், பேஷா, நன்னா, நேக்கு, நோக்கு, உக்காத்தி வைச்சி’ இதெல்லாம் உங்களுக்குத் தமிழா தெரியும்போது, ‘கஸ்மாலம், நாஸ்ட்டா, பேமானி, கயித, குந்து’ இதெல்லாம்தான் எங்களுக்குச் சிறப்பான தமிழ், இதுதான் எங்களின் செம்மொழி தமிழ்.

சமஸ்கிருதம் கலந்து பேசினால், உயர்வான தமிழ், மணிபிரவாள நடை.

உருது கலந்து பேசினால் மட்டமான தமிழ், இழிவான நடையா?

இது வெறுமனே மொழி பிரச்சினையல்ல. ஆயிரம் ஆண்டுகால அரசியலே இதுதான்.

*

தங்கம் மார்ச் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

Exit mobile version