*
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பரிமள ராசன் தனது facebook ல் ஜூலை 4 ம் தேதி தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் மரபு பற்றி குறிப்பிட்டு இருந்ததை விவாதத்திற்காக வெளியிட்டிருந்தார். அதையும் அதில் நான் எழுதியதையும் சேர்த்து வெளியிடுகிறேன்.
பரிமள ராசன் :
‘தமிழ் மரபு’ குறித்து தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் கூறுகிறார்,
‘ஏழை வேலைக்காரனிடம், “சோறு தின்றாயா?” என்று கேட்பது மரபு.
கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.
“போஜனம் ஆயிற்றா? நிவேதனம் ஆயிற்றா?” என்பதுதான் தமிழ் மரபு.’
வே. மதிமாறன் :
சோறு தமிழ்ச் சொல். இன்னும் சரியாக சொன்னால் உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட மக்களின் சொல். அவர்கள் சாதம் என்கிற சொல்லை பயன்படுத்த மாட்டார்கள்.
சாதம், பிரசாதம் என்பதின் தொடர்ச்சி. அதுவேதான் போஜனம். இவைகள் எல்லாம் சமஸ்கிருதம்.
தமிழ் அல்லாத இந்த வார்த்தைகளை பார்ப்பனர்களும் பார்ப்பன மனோபாவத்தில் இருக்கிற பிள்ளைமார்களும் முதலியார்களும் செட்டியார்களும்தான் பயன்படுத்தவர். இவர்கள் தங்கள் வீடுகளில் ‘சோறு’ என்று சொல்ல மாட்டார்கள். ‘சாதம்’ என்றே சொல்வார்கள்.
//கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.// என்று தாத்தா குறிப்பிடுகிற கனவான்கள் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்கைளயும்தான்.
//‘ஏழை வேலைக்காரனிடம், “சோறு தின்றாயா?” என்று கேட்பது மரபு.// ஏழை வேலைக்காரர்கள் என்பது தாழ்த்தப்பட்ட மக்கள்.
தாத்தா ஜாதி வேறுபாடுடன் மட்டுமல்ல வர்க்க வேறுபாடுடனும் தமிழ் சேவை செய்திருக்கிறார்.
ஆனால் பொதுவாகவே மலையாளிகள் ‘சோறு’ என்கிற தமிழ்ச் சொல்லே பயன்படுத்துகிறார்கள். ‘ஊண்’ என்கிற தனித் தமிழ்ச் சொல்லை முதன்மை படுத்தி ‘சாப்பிட்டாச்சா’ என்பதை ‘ஊணு கழிஞ்சோ’ என்று பேசுகிற முறையும் மலையாளிகளிடம் இருக்கிறது.
ஆனால் ‘தமிழர்கள்’ என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள்தான், “போஜனம் ஆயிற்றா?” என்கிற தமிழ் விரோத மொழியான சமஸ்கிருதத்தை பயன்படுத்துவதையே ‘தமிழ் மரபு’ என்கிறார்கள்.
அது மட்டுமல்ல உ.வே.சா. தன்னிடம் தமிழ் படிக்க வந்த ஒரு பார்ப்பனரல்லாவருக்கு ஜாதியின் காரணமாக தமிழ் சொல்லித் தர மறுத்தார். ஆனால் அவர் மட்டும் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தார்.
அது பற்றி வ.உ.சி என்று நினைக்கிறேன், ‘நீங்க மட்டும் பார்பனரல்லாதவரிடம் தமிழ் படிக்கலாமா?’ என்று கேட்டார்.
சுதந்திரப் போரட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு ராஜ துரோகியாக, அரசு விரோதியாக வ.உ.சி கடும் சிறையில் இருந்தபோது திருக்குறளின் அறத்துப்பாலுக்கு உரை எழுதினார். அதில் ஏற்பட்ட சந்தேகத்தை கேட்பதற்காக அவர் உ.வே.சா விற்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தை உ.வே.சா வெள்ளைக்கார கவர்னரிடம் கொண்டு போய் கொடுத்து ‘நான் இதற்கு என்ன செய்வது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த கவர்னர் ‘பதில் எழுதுங்கள்’ என்று சொன்ன பிறகே பதில் எழுதினார்.
தாத்தா எவ்வளவு உஷார்..?
தொடர்புடையவை:
பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு
சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?
நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!