
அப்படியானால், ‘மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’- இப்படியும் சொல்லாம்.
மகள்களை பெறாதா அப்பாக்களும், மகன்களை பெறாதா அம்மாக்களும், குழந்தையே இல்லாத தம்பதிகளும், திருமணமே ஆகாத ஆண்களும் பெண்களும்; முத்தத்தை முழுக்க காமத்திற்கு மட்டுமா பயன்படுத்துகிறார்கள்? இல்லை, அவர்கள் குழந்தைகளை முத்தமிடுவதே இல்லையா?
‘ குழந்தைகளை முத்தமிடுகிற எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரிந்திருக்கும் குழந்தையை முத்தமிடுவது காமத்தில் சேர்ந்ததில்லை என்று’– இதுதான் சரியானது.
குழந்தை ஒரு உன்னதம். முன்பின் தெரியாதவர்கள்கூட முத்தமிட முடியும் என்றால் அது குழந்தைகளை மட்டும்தான். மனித அன்பின் உச்ச வடிவம் குழந்தைகளை கொஞ்சுவதும் முத்தமிடுவதும். அந்த முத்தத்திற்கு பாலின பாகுபாடு கிடையாது. அது ஆணின் முத்தமும் இல்லை பெண்ணின் முத்தமும் இல்லை. அன்பின் முத்தம்.
உறவுகளை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்ப்பதால், மற்ற மனிதர்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துகிற வடிவத்திற்கு மாறிவிடுகிறது.
ஆனாலும், முத்தத்தை அப்பா கொடுத்தாலும் ஆயா கொடுத்தாலும் குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடும் தொற்றுநோய் அபாயமும் ஏற்படும் என்பதால், முத்தத்தை குழந்தைகளிடம் பெறுவதோ தருவதோ தவிர்ப்பதே பகுத்தறிவு.
இதுபோன்ற அபத்தமான வாக்கியத்தை விட, ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்’ என்பது போன்ற கோமாளித்தனமான ‘பஞ்ச் டயலாக்’ எவ்வளவோ பரவாயில்லை.
*
தங்கமீன்கள் திரைப்படம் வெளியாகாமல் இருப்பதைக் குறித்து நான் எழுத வேண்டும் என்று, எட்டு கேள்விகளும் மூன்று பரிந்துரைகளும் எனக்கு வந்தருக்கிறது.
தங்கமீன்கள் பற்றி ஏன் எழுத வேண்டும்?
‘அது தரமானப் படம். அதனால்.’
தரமானப் படம் என்பதை பார்த்து தெரிந்துக் கொண்டவர்களைவிட, கேட்டுத் தெரிந்து கொண்டவர்களே அதிகம். இதில் கூடுதலாக, விஸ்வரூபம் பற்றி நான் எழுதிய விமரசனம், ‘படம் வருவதற்கு முன்பே அதை பார்க்காமல் எப்படி எழுதலாம்?’ என்று கேட்டவர்களும் உள்ளடக்கம்.
‘தங்கமீன்கள்’ பார்க்காமல் அது நல்லப் படம் என்று முடிவுக்கு வந்ததற்கு, இயக்குநர் ராம் நடிக்காமல், இயக்குநராக மட்டுமிருந்து எடுத்த ‘கற்றது தமிழ்’ படம் காரணமாக இருக்கலாம்.
‘தங்கமீன்கள்’ படத்தை நான் ஆதரித்து எழுதாமல் இருப்பதற்குக் காரணமும், அதே ‘கற்றது தமிழ்’ தான்.
இப்போது போலவே; தரமான சினிமா விரும்பிகள், தமிழ் உணர்வாளர்கள், அறிவாளிகள் பரிந்துரையை நம்பி ‘கற்றது தமிழ்’ படம் பார்த்தேன்.
தமிழ் உணர்வாளர்கள், அறிவாளிகள், தரமான சினிமா விரும்பிகள் எனக்கு பொய் தகவல் சொல்லி ஏமாற்றி விட்டதாகவே படம் பார்த்தப் பிறகு உணர்ந்தேன்.
மனநிலை பாதிக்கப்பட்டவரை வைத்து திரைக்கதை பண்ணிய சிறந்த படங்களைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், ஒரு திரைக்கதையே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், மிகுந்த எரிச்சலும், மன உளைச்சலுக்கும் உள்ளானேன், கற்றது தமிழால்.
சரி. தங்கமீன்கள் மிகச் சிறந்த படமாகக்கூட இருக்கலாம்.
இன்று தங்க மீன்கள் வெளியாகாததற்கு வருத்தப்பட்டவர்களில் யாரும் டாக்டர் அம்பேத்கர் படம் 10 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தற்கு வருத்தப்படவில்லை.
சினிமாவிற்கு வெளியில் இருப்பவர்களால்தான் அம்பேத்கர் படம் வெளியானது. அன்பிற்குரிய வழக்கறிஞர் சத்தியச் சந்திரன் நீதிமன்றத்தின் மூலம் அதை முடிவுக்கு கொண்டு வந்தார்.
சினிமாவில் இருக்கிற முற்போக்காளர்கள் யாரும் அதற்கு முயற்சி செய்யவில்லை. படம் வந்த பிறகும்கூட அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
அதுபற்றி எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல், தன் படம் வெளியாகாமல் இருப்பதை சமூகத்திற்கு ஏற்பட்ட சாபம் போல் பேசுகிறார்கள் முற்போக்கு இயக்குநர்கள். இவர்களுக்கும் கமல்ஹாசனுக்கும் விஜய்க்கும் என்ன வித்தியாசம்?
திரையுலகிலிருந்து எடிட்டர் லெனின் மட்டும் டாக்டர் அம்பேத்கர் படம் வெளிகொண்டு வரும் முயற்சிக்கு பெரிதும் உதவினார். அவரால் முடிந்த அளவிற்கு பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.
ஜபார் படேல் இயக்கிய, டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் அம்பேத்கரின் அரசியலை சரியாக, நல்ல சினிமாவிற்குரிய நேர்த்தியோடு அழகியலாக சொன்னப் படம். Shyam Benegal போன்ற உலகப்புகழ்பெற்ற இந்திய சினிமா மேதைகளின் பங்களிப்போடு உருவான படம்.
நல்ல சினிமா ரசிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களில் பலர், அம்பேத்கர் படத்தை ஒரு நல்ல சினிமாவாகக்கூட பரிந்துரைக்கவில்லை. (புதுப்படங்களைப் பாராட்டினால், அந்த இயக்குநர்களிடம் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம். உதவி இயக்குநராக சேரலாம். வசனம், பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கலாம். இது எதுவும் இல்லாட்டிக்கூட அவர்கள்கூட பழகுறதே பாக்கியம். அம்பேத்கர் படத்தை பரிந்துரைப்பதால் என்ன பயன்? நஷ்டதான். ஜாதி உணர்வு கொண்ட நண்பர்களோடு ‘கருத்து’ வேறுபாடு. நட்பு ?)
ஒரு தலைவரின் வாழக்கையிலிருந்தும் அவரின் அரசியலிலிருந்தும் சம்பவங்களை தேர்ந்தெடுத்து எப்படி நேர்த்தியாக திரைக்கதை அமைப்பது, அவரின் எழுத்துக்களிலிருந்தே படத்திற்கான வசனங்களை எப்படி எழுதுவது என்பதை கற்றுத் தந்தது, டாக்டர் அம்பேத்கர் திரைப்படம். திரைப்பட இயக்குநர்கள் மிக குறிப்பாக சமூக அக்கறை உள்ள திரைப்பட இயக்குநர்கள் பார்க்க வேண்டிய படம்.
ஆனால், டாக்டர் அம்பேத்கர் படம், வெளிவருதற்கு முன்பும் வெளியான பிறகும் பல சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் ‘சமூக அக்கறையை’ அம்பலப்படுத்தியது.
கமர்சியல் படம், கலை படம், மிடில் சினிமா, ஜாதி உணர்வோடு படம் எடுக்கிறவர்கள், ஜாதி உணர்வற்ற நிலையிருந்து படம் எடுக்கிறவர்கள்; இவைகளை இவர்களின் படங்களை எல்லாம் ‘மயிர்’ பிளக்கும் விவாதங்களோடு ரசிக்கிறவர்கள், விமர்சிக்கிறவர்கள் எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது டாக்டர் அம்பேத்கர் படம்.
போகட்டும்.
**
பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் உணர்வு, ஜாதி பிரச்சினை, தொழிலாளர் போராட்டம் போன்ற பல நல்ல உள்ளடக்கத்தை; சுவராஸ்மற்ற, பொறுப்பற்ற திரைக்கதை மற்றும் அந்தப் பிரச்சினைகளைக் குறித்த தங்களின் அறியாமையின் மூலம் படத்தை தோற்கடித்துவிட்டு, ‘கடைசியில் நான் நல்ல படம் எடுத்தேன். அதை தமிழர்கள் ஆதரிக்கவில்லை.’ என்று அப்போதுகூட தன் தவறை உணராமல், தன்னை தியாகியாகவும், அறிவாளியாகவும் சித்தரித்துக்கொண்டு மக்களை முட்டாளாக குற்றம்சாட்கிற இயக்குநர்களும் இருக்கிறார்கள்.
இவர்களால் அடுத்து இதுபோன்ற நல்ல உள்ளடகத்தை கொண்டு படம் செய்ய வருகிறவர்களின் முயற்சிகளை, அந்தப் படங்களை காட்டிய மூடுவிழா நடத்திவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இயக்குநர்களுக்கு தியாகி பட்டமும், பார்வையாளர்களுக்கு துரோகி பட்டமும் கிடைத்ததை தவிர…
தொடர்புடையவை:
குழந்தைக்கும், தகப்பனுக்குமான உறவு குழந்தையின் ஆரோக்கியமான நேரங்களில் குழந்தையை கொஞ்சுவது, குழந்தையோடு விளையாடுவது என்பதாகவே இருக்கிறது.‘குழந்தையைக் கொஞ்சுவதால் தகப்பனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தன் மகிழ்ச்சிக்காகவே அவன் குழந்தையைக் கொஞ்சுகிறான்’.
இரவுகளில் குழந்தையின் அழுகைச் சத்தம் தாயைப் பதட்டப்படுத்திவிடும். ஆனால், தந்தையோ எரிச்சலடைவான்.குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கெடுக்காத கணவன்; மனைவியுடனான மணமுறிவின் போது மட்டும் குழந்தை மீது அதிக உரிமை கொண்டாடுபவனாகக் காட்டிக் கொள்கிறான். தன் மனைவியின் உயிர் ஆதாரம் குழந்தைதான் என்பது அவனுக்குத் தெரியும். மனைவியின் மீது வெறுப்புக் கொண்ட கணவன், உளவியல் ரீதியாக அவளைத் துன்புறுத்த, குழந்தைகளை அவளிடம் இருந்து பிரிக்க பெரிதும் முயற்சி எடுத்து … குழந்தையிடம் தாயைப் பற்றி மிக மோசமான .. விரிவாக வாசிக்க.. ..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி
‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே
‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்
கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள்
‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்
