
‘பாரதியை எப்படிப் புரிந்து கொள்வது?’ என்பதற்குச் சுலபமான வழியை நம் அறிஞர்களுக்குப் பணிவோடு சொல்லித் தருவோம்.
பாரதியிடம், உயர்ந்த மொழி ஆங்கிலமா? தமிழா?என்றால் ‘பராசக்தி தமிழுக்கு ஒரு தீங்கா?’ என்று பொங்கி எழுவான்.
தமிழா? சமஸ்கிருதமா? என்று நெருக்கிப் பாருங்கள், ‘சமஸ்கிருதம் ஒன்றுதான் தேவ பாஷை’ என்று குழைவான்.
‘அல்லாவைப் பற்றி பாட்டெழுதி முசுலீம் கடையில் டீ குடித்திருக்கிறான். அதனால் அவன் முசுலீம்.’
‘ஏசுவைப் பற்றிப் பாடியிருக்கிறான். அவன் ஒரு கிறித்தவன்.’
‘பிறப்பால் அவன் இந்துவாக இருக்கிறான் இந்து மதத்தின்மீது ஈடுபாடு இருக்கிறது. அதனால் அவன் ஒர் இந்து’ என்று பாரதியின் ‘ஏசு, அல்லா பாட்டை’ தனியாகக் கழட்டிப் பார்த்து, அவரை மத நல்லிணக்கவாதியாகக் காட்டி மகிழ்ச்சியடையலாம்.
இந்து மதமா? இசுலாமா?
கிறித்தவமா? இந்து மதமா?
என்று நெருக்கிப் பிடித்துப் பாருங்கள்.
இசுலாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்து, மசூதிக்குச் சென்று கஞ்சி குடித்துவிட்டு மாலை பொதுக்கூட்டத்தில்,
‘இது இந்து நாடு, ராமன் பிறந்த அந்தப் புண்ணிய பூமியில் அவனுக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்று சவால் விட்டுப் பேசுகிற அத்வானி வாஜ்பாயைப் போல் நெற்றியில் நீட்டி இடப்பட்ட குங்குமத்தோடும், கையில் சூலத்தோடும் வழி மறிப்பான் மகாகவி.
பவுத்தம் குறித்து சிலாகிக்கிற பாரதியை ‘பவுத்தமா? வேதமா?’ என்று நெருக்கினால்,
‘நல்ல வேளை ஆதி சங்கரர் பவுத்தத்திடம் இருந்து வேத மதத்தைப் பாதுகாத்தார்’ என்று நிம்மதி மூச்சு விடுவான்.
பார்ப்பன எதிர்ப்பு பாடிய பாரதியை, ‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று நெருக்கிப் பிடித்தால், ‘இந்த பிராமணரல்லாதார் கிளர்ச்சி காலகதியால் தானே மங்கி அழிந்து விடும்’ என்று சாபமிடுவான்.
அவ்வளவுதான் பாரதி.
-வே. மதிமாறன்
*
‘பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்’ நூலிலிருந்து.. (மூன்றாம் பதிப்பு)
சென்னையில் ‘கீழைக்காற்று – புக் பாயிண்ட் – பனுவல்’ புத்தகக் கடைகளில் கிடைக்கும்.
அங்குசம் வெளியீடு
ஞா. டார்வின்தாசன்
9444 337384
தொடர்புடையவை:
நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…
