Site icon வே. மதிமாறன்

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

0

இயக்குநர் மகேந்திரன் (Dir Mahendran)அவரது பக்கத்தில்  (face book ல்) ஜானி படத்திலிருந்து கீழ் உள்ளக் காட்சியை YouTube லிருந்து share செய்திருந்தார். அந்தக் காட்சி பற்றி என் அனுபத்தை ஜனவரி 29 அன்று நான் என் பக்கத்தில் எழுதியிருந்தேன்.

இந்தக் காட்சியின் சிறப்பு; காட்சியின் முடிவில், ‘ஏன் அப்படியெல்லாம் பேசினீங்க…?’ என்று ரஜனி கேட்க, அதற்கு ஸ்ரீதேவி ‘நான் அப்படித்தான் பேசுவேன்..’ என்று சொல்லும்போதும்.. அதற்குப் பிறகும் அவர் காட்டும் பாவங்கள் ஒரு கவிதை.

ஸ்ரீதேவி, உலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் என்பதைச் சொல்லும் பாவங்கள். அவரிடமிருந்து சிறப்பான நடிப்பை கொண்டு வந்த இயக்குர் மகேந்திரன் அவர்கள் எழுதிய உன்னதக் கவிதை இந்தக் காட்சி.
காதலை பேரன்பு பொங்க இதை விட உன்னதமாக, நாகரிமாக யாரால் சொல்ல முடியும்?

‘இது மிக யதார்த்தமாக இருக்கிறது’ என்று சொல்வது இந்தக் காட்சியைச் சாதரணமாக மதிப்பிடுவதாகும். இது மிக உண்மையாக இருக்கிறது.

17 ஆண்டுகளுக்கு முன் இந்தக் காட்சி குறித்து, இயக்குநரிடம் என் சிலாகிப்பை நேரிலேயே தெரிவித்திருக்கிறேன்.

அதற்கு அவர், இந்தக் காட்சி படமாக்கிய அன்று ரஜினி, ஸ்ரீதேவியை வெகுவாகப் புகழ்ந்ததையும், ‘ஸ்ரீதேவிதான் இந்தக் காட்சியில் இருக்கிறார்.. நான் இல்லை..’ என்று வெகு நேரம் ரஜினி ஆதங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

*

காட்சி ஆரம்பித்து 58 ஆவது நொடியில்தான் இசைஞானி தன் மந்திர வேலையைத் துவங்குகிறார்.

‘என்னை மனைவியா ஏத்துக்க நீங்க தயாரா இருக்கீங்களா?’ என்ற வசனம் முடிந்த நொடியில், இசை காதல் உணர்வோடு பொங்கி, வழிந்தோடுகிறது… பிறகு தொடர்ந்து.. குறைந்த ஒலியில் தவழ்கிறது.

‘உங்க பாட்டைக் கேட்கிற தகுதி மட்டும்தான் எனக்கிருக்கு.. உங்களையே கேக்குற அந்தஸ்து எனக்கில்லை’ என்று ரஜினி சொன்ன உடன் ஒற்றை வயலின் ‘அய்யோ என்ன இப்படிச் சொல்ற..?’ என்பது போன்று இசையை மேலழுப்பி மெல்ல வசனத்திற்குப் பின் நகர்கிறது.

‘மன்னிச்சிகுங்க..’ என்றவுடன் வசனத்திற்குப் பின் மெல்ல தவழ்ந்து கொண்டிருந்த அந்த வயலின், மேலேழுந்து அடுத்து வருகிற கீபோர்டு இசை எழுப்புகிற உணர்விடம் கைமாத்தி செல்கிறது.

தன்னைப் பற்றிய தவறான மதிப்பீடுதான் நீங்கள் மறுப்பதற்குக் காரணம் என்று ஸ்ரீதேவி விளக்கம் கொடுக்கும்போது; மெல்ல ஒலித்துக் கொண்டிருக்கும் இசை, அடுத்து அந்த விளக்கத்தால் ரஜினி ஆகப்போகிற எமோஷ்னலை முன்னதாக அறிவிக்கிறது, குறைந்த இடைவெளியில் மேலேழுந்து ஒலிக்கிற அந்த இசை.

‘நிச்சயமா நான் உங்கள மனைவியா ஏத்துக்கத் தயாரா இருக்கேன்..’ என்றவுடன், அதே இசைக்குறிப்புகள்தான், என்ன மாயம் அப்படியே மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.

‘நான் அப்படித்தான் பேசுவேன்.’ என்று ஸ்ரீதேவி கொஞ்சலாக உரிமையோடு சொன்னவுடன் இப்போதும் அதே இசை, ஆனால் பியானோவில்…

அந்த மந்திரவாதி தன் இசையால் நம்மை வசமாக்குகிறான். அவர்களின் காதலை அவன் தன் பியானோவிலும் வயலினிலும் கித்தாரிலும் புல்லாங்குழலிலும் கொண்டாடி மகிழ்கிறான்.

உலகின் மிக உன்னதமான இசை உருவாகிறது.

*

உன்னதக் காட்சி:

href=”http://vemathimaran.com/2013/07/26/best-actress-662/” rel=”bookmark”>மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

Exit mobile version