யாரையும் விட மாட்டீர்களா? எல்லாரையும் திட்டுகீறீர்களே?
-சு.விநாயகம், சென்னை
தன்னைப் பற்றியோ அல்லது தனக்கு வேண்டியவர்கள் பற்றியோ விமர்சிக்கும்போது, அதை நேரடியாக கேட்க தைரியமற்றவர்களின் உளவியல் சார்ந்த கேள்வி இது.
தன் விஷயத்தையே பொதுவிஷயமாக மாற்றி, தன்னையும் தனக்கு வேண்டியவர்களை விமர்சிக்கிற காரணத்தினாலேயே, தரமான ஒன்றை ‘தரமற்றது’ என்று பிரச்சாரம் செய்வதின் மூலமாக, ‘பழிவாங்கிய மனத் திருப்தி’யை அடைவதற்கான முயற்சியே இந்தக் கேள்வியின் உளவியல் பின்னணி.
நான் விமர்சிக்கிற விஷயம், சரியா? தவறா? என்பது பற்றிதான் உங்கள் கேள்வி இருக்க வேண்டும். தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்.
பாராட்டிக் கொண்டிருப்பதற்கு ஆயிரம் பேர்கள் வருவார்கள். பாராட்டி அதன் மூலம் பலனும் பெறுவார்கள். சமூக பொறுப்புள்ளவன் யாரையும் தேவையற்று பாராட்டிக் கொண்டிருக்க மாட்டான். 1.5.1927 ம் ஆண்டு தந்தை பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்:
“பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடியரசி’னால் நான் செய்து வந்த பிரச்சாரத்திலும் அரசியல் இயங்கங்களைக் கண்டித்தேன். வேதம் என்று சொல்லுபவற்றை, சாத்திரம் என்பதைக் கண்டித்தேன்.
பார்ப்பனியம் என்பதை கண்டித்தேன். சாதி என்பதை கண்டித்தேன். அரசாங்கம் என்பதை கண்டித்தேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்தேன்.நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்தேன். தேர்தல் என்பதைக் கண்டித்தேன். கல்வி என்பதைக் கண்டித்தேன்.
ஸ்ரீமான்கள் கல்யாண சுந்தரம் முதலியார், வரதராஜூலு நாயுடு, ராஜகோபாலாச் சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்தேன். இன்னும் என்னெனவற்றையோ, யார் யாரையோ கண்டித்தேன். கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன். எதைக் கண்டித்திருக்கிறேன்? எதைக் கண்டிக்கவில்லை? என்பது எனக்கு ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது.
இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும், கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்தகாத தியாகமோ, திட்டமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படமாட்டேன் என்கிறது.”
செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.
‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….
புத்தக தொடர்புக்கு:
‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச: 9444 337384
தொடர்புடைய கட்டுரை, பதில்கள்:
இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்
பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?
ஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்
கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…
பணமா? பாசமா?

