Site icon வே. மதிமாறன்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

கலக்கத்தோடு நாம் பார்த்தால், நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது இந்த தாயின் முகம்

 கத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூன்று புரட்சியாளர்களுக்கும் தூக்கு தண்டனை என்று ஆங்கிலேய அரசு அறிவித்தபோது, அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல், உப்பு காய்ச்சிக் கொண்டும், உண்ணாவிரதம் இருந்தும் கொண்டும் அந்த தண்டைனையை மறைமுகமாக ஆதரித்தார், அகிம்சையின் பிதாமகனான ஒரிஜினல் காந்தி.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஓடிப்போனால், காய்கறிவாங்கப் போனவர்களை சிக்க வைத்து தண்டனை வாங்கித் தருகிற காவல்துறையைப் போல்,

ராஜீவ் கொலையில் நேரடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லாம் இறந்துபோக, அவர்களுக்கு அறிமுகமானவர்கள் என்கிற அளவில் உள்ளவர்கள் மீது வழக்குபோட்டு, தூக்கு தண்டனையை நிறைவேற்ற துடிக்கிறது அகிம்சை இந்தியா.

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் தூக்கு உறுதி என்று தேதியை முடிவு செய்து தூக்கு கயிறுகள் அவர்களை நோக்கி விரைந்து கொண்டிருக்கும்போதும், அதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் அல்லது பொருட்படுத்தாமல் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து முடித்திருக்கிறார் காந்தியின் பேரனான நகல் காந்தி அன்னா அசாரே.

அவருக்கு ஆதரவாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று அட்டாகசம் செய்த அன்னா அசாரேவின் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் மூன்று உயிர்களுக்கு எதிரான மரண தண்டனை மகிழ்ச்சியளிக்கிறது போலும். அவர்களும் இதைப்பற்றி எந்த சொரணையும் அற்று இருக்கிறார்கள்.

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாமல், அகிம்சையின் தொல்லை மட்டும் எப்போதும் பெருவாரியன மக்களை இம்சை செய்துகொண்டு தான் இருக்கிறது.

‘இலட்சக் கணக்கான ஈழ மக்களை கொன்ற ராஜபக்சேவை தூக்கில் போடு’ என்று நாம் முழங்கினால், ‘மரண தண்டனை மனிதாபிமானமற்ற செயல்’ என்று நமக்கு உபதேசித்துவிட்டு, அப்பாவியான மூன்று பேர் உயிரிகளை பலி வாங்க துடிக்கிறது காந்தியின் அகிம்சை ஆயுதம் தாங்கிய அரசு.

ஈழ மக்களுக்கு ஆதரவான போராட்டம் என்றால் எப்போதும் களத்தில் அர்ப்பணிப்போடு முன்னணியில் நின்று அதை வழி நடத்தி செல்கிற வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும்; மூன்று உயிர்களை அகிம்சையின் கொலைவெறி தாக்குதலில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து போராடுவோம்.

நிச்சயம் வெற்றிதான்.

மூவரும் தூக்கு கயிற்றின் மூடிச்சிலிருந்து மட்டுமல்ல, அவர்களை ஆயுள் கைதியாக அடைத்து வைத்திருக்கிற, சிறையிலிருந்தும் வெளிவருவார்கள். வெற்றி நிச்சயம்.

ஆனாலும், அந்த கயிறுகளை மட்டும் கையகப்படுத்தி வைக்கவேண்டும். ஏனென்றால்,  நேற்று சென்னையில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி  மரியாதைக்குரிய மார்கண்டே கட்ஜு, ‘போலி என்கவுன்டரில் ஈடுபட்ட காவல்துறையினர் தூக்கில் போட தகுதியானவர்கள்’ என்று கொதித்திருக்கிறார்.

போலி என்கவுன்டர் போலிஸ்காரர்களுக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கான நம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவிற்கும், அவனின் கொலை வெறிக்கு துணைபோனவர்களுக்கும் அந்தக் கயிறு நிச்சயம் பயன்படும்.

தொடர்புடையவை:

காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பன அகிம்சாமூர்த்திகளும்

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

Exit mobile version