முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆராய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அதில் தமிழகம் சார்பாக முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது என்றும் கேரளாவை சேர்ந்த நீதிபதி கே.டி.தாமஸ் கேரளாவிற்கு துரோகம் செய்து விட்டார் என்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சரான பி.ஜே.ஜோசப், கடுமையாக விமர்சித்து கேரள மக்களை நீதிபதி தாமசுக்கு எதிராக தூண்டி விட்டுள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நீதிபதி தாமஸ்,
“அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் அதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் ஐவர் குழு மூலம்தான் புகார் தெரிவிக்க வேண்டும். ஜோசப் சொல்வதைக் கேட்டு்ச செய்வதற்காக என்னை உச்சநீதிமன்றம் நியமிக்கவில்லை. ஜோசப் கட்டுப்பாட்டோடு பேச வேண்டும்.
முதலில் அவர் அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். அதன் பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும். மாறாக மக்களின் உணர்வுகளை, கோபத்தைத் தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார். இது தவறானது.
நான் நீதிபதி. இரு மாநிலங்களுக்கும் பொதுவானதைத்தான் நான் சொல்லியுள்ளேன். என்னை கேரளாக்காரன் என்றோ, தமிழ்நாட்டுக்காரன் என்றோ கூறுவதில் அர்த்தம் இல்லை” என்று ஆணித்தரமாக பேசியுள்ள நீதிபதி தாமசுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
ராஜிவ் கொலை விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர் மரியாதைக்குரிய நீதிபதி தாமஸ் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அதுமட்டுமல்ல, ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் கே.டி.தாமஸ். அவரே அதற்கு தலைமை நீதிபதியும்கூட. அவருடன் நீதிபதிகள் வாத்வா, முகம்மது குயாத்ரி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த வழக்கை விசாரித்தனர். இதில் நீதிபதி தாமஸ், மூவருக்கு தூக்கு தண்டனை தருவதை எதிர்த்தவர் என்பதும், நளினிக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று தீர்ப்பளித்தவரும் இவரே.
தி ஏசியன் ஏஜ்’ பத்திரிகைக்கு கடந்த செப்டம்பர் 2, 2011 அன்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார்:
“ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த அமர்வில் தலைமை தாங்கும் கெட்ட வாய்ப்பு எனக்குக் கிட்டியது..” என்று துவங்கி,
“வரலாற்றிலே 2000 ஆண்டுகளுக்கு முன் ஜெருசலம் நகரில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தும், நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்தார். காரணம், அங்கே கூடியிருந்த கூட்டம், குற்றம்சாட்டப்பட்டவர் மீது பகையும், வெறுப்பும் கொண்டிருந்தது! அந்த நீதிபதியின் பெயரை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும், அந்த நீதிபதி – பிலாத்தோஸ்! மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி – ஏசு.” என்று முடித்திருந்தார்.
எது நியாயமோ அதன் சார்பாக பேசுகிற யாரையும் துரோகி என்று குற்றம் சாட்டுகிற சமூக வீரோதிகள் எல்லா ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
‘தாங்கள்தான் இந்த மக்களுக்கு உண்மையாக பாடுபடுகிறவர்கள்’ என்று வேறு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இது வேடிக்கை மட்டுமல்ல, வேதனையும்கூட.
சிறந்த மனிதாபிமானி நீதிபதி தாமஸ் அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
தொடர்புடையது:

