Site icon வே. மதிமாறன்

மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..?

Student Struggle

படம்: தமிழ் டெனி

ஈழத்தமிழர்கள் துயர்துடைக்கும் அக்கறையில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து அர்பணிப்போடு நடந்து வருகிறது.

மாணவர்கள் போராட்டத்தை நீர்த்து போக வைக்க, ஒடுக்க, அதை தன் கட்சியின் கணக்காக காட்ட பல சதிகளை அரசுகளும் அரசியல் கட்சிகளும் செய்ய முயற்சிக்கின்றன.

இந்தச் சூழலில், தனி தனியாக போராடும் மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமும் அவசரமும்கூட.

இதை மாவட்ட வாரியாக ஒருங்கிணைத்து, அதை மாநிலம் முழுக்க வழிநடத்தும் ஒரு தலைமை குழுவை உருவாக்கலாம். அந்த தலைமையை மாணர்வகளிடமிருந்தே உருவாக்க வேண்டும்.

மாணவர்களை ஒருங்கிணைக்க அவர்களை பின்னணியிலிருந்து வழிநடத்த, தேர்ந்த ஒரு குழு அவசியம்.

அதற்கான தகுதி, எப்போதும் ஈழத்தமிழர்களுக்காக துணிந்து அர்பணிப்போடு போராடும் வழக்கறிஞர்களுக்கே இருக்கிறது.

தழிழகத்தை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் சாராத தன்னெழுச்சியான தலைகீழ் மாற்றத்தை உருவாக்கும் போராட்டங்கள் நடந்தால், அது வழக்கறிஞர்களின் தலைமையில் மாணவர்களின் துணையோடுதான் நடைபெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

முத்துக்குமார் தியாகத்தை ஒட்டி நடந்த தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு போரட்டங்கள் அதை நிரூபித்தன.

திமுக, அதிமுக சார்பு பெற்ற பல சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளாலும்,

ஈழ ஆதரவு போராட்டங்களை இந்திய அரசுக்கு எதிரான போராட்டமாக நடத்துவதைவிட, திமுக எதிர்ப்பு போராட்டமாக மட்டும் மடை மாற்றி விடுகிற, தமிழினவாத குழுக்களாலும் அந்தப் போராட்டங்கள் சிதறிடிக்கப்பட்டது.

அப்போதாவது திமுக ஆளுங்கட்சி, ஒருவகையில் அந்த மடைமாற்றம் பொருத்தமாக இருந்தது. ஆனால், இப்போதும் அதுவேதான் நடக்கிறது.

அன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தக்கப் பாடம் கற்பித்தார்கள்; அதன் விளைவாக திமுக அரசால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

அதன் பிறகு வழக்கறிஞர்களிடம் ஏற்பட்ட தொய்வு, ஒட்டுமொத்தமாகவே தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போர்குணம் கொண்ட போராட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டது.

வழக்கறிஞர்களுக்குள் வழி நடத்தி செல்லக்கூடிய தலைமை குழு இல்லாததும் அதற்குக் காரணம்.

அதே போன்ற துயரம் இன்றைய மாணவர் போராட்டத்தையும் சுற்றி வளைக்கிறது.

இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள்  மாவட்ட வாரியாக தங்களுக்குள் சிறப்பான ஒரு குழுவை உருவாக்கி, மாணவர்கள் போராட்டதை வழி நடத்த வேண்டியது அவசியம்.

காவல் துறை, கல்லூரி நிர்வாகம் இவைகளின் மிரட்டல்களிலிருந்து மாணவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை தரவும், இந்தப் போராட்டத்தால் அவர்களின் கல்வி பாதிக்காமல் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

இது போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைகள் மூலமாக, மாணவர்களுக்கு ஏற்படுகிற உளவியல் நெருக்கடியிலிருந்தும் விடுவிக்கும்.

இது நடந்தால், இந்தப் போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு நகரும். இல்லையேல் ஒரு சில நாட்களில் உண்ணாவிரதத்தோடே இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

ராஜபக்சேவை தண்டிக்க, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது எதிர்ப்பது என்பதையும் தாண்டி, ஈழத்தமிழர்கள் பிரச்சினையை மாணவர்கள் போராட்டம் பெருவாரியான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது,

சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்துகிறது,

ஜாதி, மதங்களைத் தாண்டி மக்கள் பிரச்சினைக்கு போராட அழைக்கிறது என்பதினாலும் மாணவர்கள் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டியது அவசியம்.

தொடர்புடையவை:

‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை

தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி

Exit mobile version