விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் இஸ்லாமிய தலைவர்கள் நடந்து கொண்டது சரிதானா?
-கே. சாதிக், திருநெல்வேலி.
இஸ்லாமியர்கள் எதிர்ப்பு கண்ணோட்டம் கொண்ட சினிமா மற்றும் இலக்கியத்தை முதலில் கண்டித்தது இஸ்லாமியர்களோ அல்லது இஸ்லாமிய அமைப்புகளோ அல்ல.
பெரியாரிய சிந்தனையாளர்கள்தான் அதை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செய்தனர்.
பொதுவாக இஸ்லாமிய அமைப்புகள், திரைப்படங்களில் இஸ்லாமியர்களை இழிவாக காட்டுவதை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை; மாறாக இஸ்லாத்தை இழிவாக சித்தரித்தால்தான் பொங்கி எழுவார்கள்.
அதனால்தான் இஸ்லாத்தை உயர்வாக காட்டிவிட்டு இஸ்லாமியர்களை இழிவாக சினிமா எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
துப்பாக்கி பட எதிர்ப்பிலிருந்துதான் ஆரோக்கியமான மாற்றம் இஸ்லாமியர்களிடம் நிகழ்ந்தது. பிறகு கமலின் இஸ்லாமியர் எதிர்ப்பிற்கு எதிராகவும் இஸ்லாமியர்களின் ‘விஸ்வரூபத்தை’ பார்க்க முடிந்தது.
ஆனாலும் இஸ்லாமிய தலைவர்களிடம் விஸ்வரூப எதிர்ப்பில் தன்முனைப்பு கூடுதலாக தெரிந்தது.
கமல் விஸ்வரூபத்தில் சித்தரித்ததைவிட, விஸ்வரூப விவகாரத்தில் ஊடகங்கள் இஸ்லாமிய தலைவர்களை வில்லன்களாக சித்தரித்தது அதிகம்.
அதை புரிந்து கொள்ளாமல், தொலைக்காட்சி பேட்டிகளில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டார்கள் தலைவர்கள். இஸ்லாமிய மக்களிடம் இந்த விவகாரத்தில் யார் பெயர் எடுப்பது என்ற பாணியில் இருந்தது அந்த அணுகுமுறை.
கமலும் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
*
தங்கம் 2013 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

