Site icon வே. மதிமாறன்

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

Lord Vishnuதினமலரும் தினமணியும் கலந்து செய்த கலவை. தமிழில் இன்னொரு ‘இந்து’ நாளிதழ்.

‘தமிழால் இணைவோம்’ எதுக்கு ‘மோடி’யை பிரதமராக்கவா?

‘இந்து’ வாக இணைந்து கொண்டு ‘தமிழால் இணைவோம்’ என்று பொருந்தா வசனம். ஆனாலும் இந்த தமிழ்த் தேசிய ‘டச்சஸ்’ ‘சிச்சுவேசனுக்கு’ப்  பொருத்தமா, நல்லா ‘எடுப்பா’ இருக்கு.

‘தமிழர்கள் இந்து’ அல்லது ‘இந்துக்கள் தான் தமிழர்கள்’ என்கிற இந்த அடையாளம்; ஏற்கனவே பல தமிழ்த் தேசியவாதிகளிடம், உள் அரசியலா ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்கு ‘தோதா’ இந்த ‘இந்து’ தமிழ் தாத்தா.

‘அரசுப் பேருந்துகளில் குடிநீர் ரூ. 10க்கு ஒரு லிட்டர் பாட்டில்’ இது நேற்று தலைப்பாக பல நாளிதழ்களில் வந்த செய்தி. ஆனாலும் முதல் நாள் முதல் தலைப்பு பழைய செய்தியாக இருந்தாலும் ‘தமிழக அரசுக்கு ஆதரவான செய்தியாக இருக்க வேண்டும்’ என்கிற அந்த உணர்வு, செய்திகளை முந்தி தருகிற வேகத்தையும் ‘தி இந்து’ வின் நடுநிலையையும் ‘பச்சை’ யாக அடையாளம் காட்டுகிறது.

இந்துவின் ‘இந்து’ உணர்வையும் முதல் நாள் இதழிலேயே, பக்கத்து பக்கம் மோடியை பிரதமராக்க வேண்டும் என்கிற அந்த ‘இந்து’க் கனவையும் ஒரு ‘பருந்து’ பார்வையில் பார்போம்:

முதல் பக்கத்தில், ‘சிறைக்குள் செல்போன்!’ செய்திக் கட்டுரை இப்படி தொடங்குகிறது. ‘அந்தப் புகைப்படத்தில் இருப்பது ராஜிவ் கொலைக் குற்றவாளி முருகன்தான். அதில் சந்தேகப்படுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை’ என்று துவங்கி, ‘இவை எல்லாம் குற்றாலம் விருந்தினர் விடுதியில் எடுக்கப்பட்ட குதூகலப் புகைப்படங்கள் இல்லை.’ என்று வர்ணிக்கிறது.

குற்றால விருந்தினர் விடுதியில் இருப்பவர்களை விட சிறையிலிருப்பவர்கள் அதுவும் ராஜிவ் கொலைக் குற்றவாளிகளாக இருப்பவர்கள் மிகுந்த உல்லாசமாக இருக்கிறார்கள் என்கிறது ‘தமிழால் இணைவோம்’ என்கிற ‘இந்து’.

அடுத்து அதற்கு கீழ் ‘பா.ஜ.க. நோக்கி.. எடியூரப்பா புதுக் கணக்கு’ என்ற செய்தி கட்டுரைக்கு ஹைலைட்டாக, ‘தனிக்கட்சி தொடங்கியதால் பலன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்துள்ள எடியூரப்பா, பா.ஜ.க.வோடு கைகோத்தால்தான் ‘தலை தப்பிக்கும்’ என எண்ணுகிறார். மோடியின் கை வலுப்பதும் இதில் ஒரு காரணம்’ என்று உளவியல் மருத்துவரைப்போல் எடியூரப்பா மனுசுக்குள் புகுந்து மோடியின் புகழ் எழுதப்பட்டிருக்கிறது.

2 ஆம் பக்கத்தில் ‘இன்றுதான் மலேசியா உதித்தது’ என்ற தகவலில், ‘பிற்பகுதியில் மலேசியா ஸ்ரி விஜயப் பேரரசின் ஆட்சின்கீழ் இருந்திருக்கிறது. பதினைந்தாம் நுற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள், ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர ராஜ்ஜியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாக பரவியது’

‘ஆதாரத்தோடு’ மலேசியா பூர்வீகத்தில் இந்து மன்னனால் ஆளப்பட்ட இந்து நாடு என்று நிறுவ முயல்கிறது மதசார்பற்ற அகண்ட இந்து ராஜ்ஜியத்தை விரும்புகிற ‘இந்து’.

3 ஆம் பக்கத்தில், ‘ஜெயலலிதாவுடன் சோ திடீர் சந்திப்பு’ செய்தியில், ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், தன்னுடன் சுமுகமான உறவைப் பேணிவரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தனது கட்சிக்கு ஆதரவு தரக்கோரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.’ என்று தன் விருப்பத்தை ‘சோ’ வுக்கே யோசனை சொல்லியிருக்குமோ என்கிற அளவிற்கு ‘இந்து’ கருத்து சொல்கிறது.

அதற்குக் கீழ், ‘களைகட்டிய ஓணம் பண்டிகை’ தலைப்பில்… ‘ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னையில் என்ன சிறப்புகள் ஏற்பாடாகியிருக்கிறது..’ என்ற செய்தியாக இருக்கும் என்று பார்த்தால்.. அது மகா விஷ்ணுவின் பெருமையை, புகழை செய்தியாகவே சொல்கிறது. ஒரு புராணக்  கதையையே செய்தியாக வெளியிட்ட பெருமை தமிழ் இந்துவுக்குதான் சேரும்.

நடந்த எதையும் அதுபோலவே செய்தியாக மட்டும் வெளியிடாமல், அந்த செய்தியின் மீது தன் அரசியலை கருத்தை ஏற்றி வெளியிடுகிறது ‘இந்து’. இதுக்கு பெயர்தான் செய்தியில் நேர்மை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு ஆப்கான் மன்னன் அமீர் வந்தபோது, அவனை வரவேற்று பாரதியார் செய்திக் கட்டுரை எழுதினார்:

‘டில்லியில் பக்கிரீது பண்டிகைக்கு (ஆப்கான் அமீரை) மகமதியர்கள் அழைத்தார்கள். அப்போது முகமதியர் பசுக்களைக் கொல்லும் பஷத்தில் தாம் வரமுடியாதென்று அமீர் சொல்லிவிட்டார். பசுக்களை வெட்டுவது ஹிந்து ஜனங்களுக்கு மனஸ்தாபம் உண்டுபண்ணக் கூடுமாதலால் அதற்கு பதிலாக ஆடுகைள வைத்துக்கொண்டால் மட்டுமே தாம் வரக்கூடுமென்று அமீர் தெரிவித்தார். ஹிந்து ஜனங்களுக்கும் மகமதியர்களுக்கும் எவ்விதத்தாலும் மனஸ்தாபமிகுதியடையலாகதென்ற விஷயத்தில் இவருக்குள்ள அபிப்பிராயத்தை எல்லா முகமதியர்களும் நன்கு தெரிந்து கொண்டு நலம் பெறுவார்களென் நம்புகின்றோம்.’ – பாரதி.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்போடு வாழவதென்றால் எப்படி அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை அன்றே குறிப்பால் உணர்த்தினார் பாரதி. அதே பாரதியின் பாணியில்,

4 ஆம் பக்கத்தில், ‘விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம் இளைஞர்கள்’ என்ற செய்தியில் ‘திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை பெரிய மசூதி தெருவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம் இளைஞர்களும் கலந்து கொண்டு, விநாயகர் சிலை முன்பாக ஆட்டத்துடன் சென்றனர்.

மேலும், அவர்கள் வடிவமைத்திருந்த விநாயகர் சிலை கையில் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தப்படி இருந்தது.’ என்று நவீன பாரதியாக ‘இந்து’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

12 ஆம் பக்கத்தில், ‘மோடியின் இலக்கு 272’ என்ற செய்தியில், ‘எப்போதும் விறைப்பான நடை, உடை, பாவனைகளுடன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் எவ்வாறு இருக்க முடிகிறது என்ற கேள்வி  அவரைப் பார்க்கும் அனைவருக்கும் எழுவது இயல்பானதுதான். தான் அணியும் உடையும் தனது கம்பீரத்துக்கு ஏற்றவகையில் அவர் தேர்ந்தெடுக்கிறார். உடை விஷயத்தில் அவருக்கு மிகுந்த அக்கறை உணடு. இளைஞராக இருந்தபோது, ஏழ்மையான சூழ்நிலையிலும் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தனது உடையை இஸ்திரி செய்துகொள்வாராம்.’

எல்லோரும் சுடு தண்ணிலதான் இஸ்திரி பண்ணுவாங்க ஆனால் மோடி தண்ணிரிலேயே அதை செய்திருக்கிறார். ‘இந்து’ தருகிற பெருமைமிகு இந்த அரிய தகவலை படிக்கும்போது, நமக்கே ‘மோடிக்கு ஓட்டுபோடலாமே’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த அரிய செய்தியை எழுதுனவரு பெயர் ஏகலைவன். ‘விதுரன்’ என்றால் பொருத்தமாக இருந்திருக்கும்.

16 ஆம் பக்கத்தில், ‘புதையும் வரலாறு’ என்ற தலைப்பில் சமஸ் என்பவர் ஒரு Assignment செய்திருக்கிறார். அதில் அதிரடியாக, ‘இந்தியாவின் வரலாறு எங்கே ஒளிந்திருக்கிறது? கொஞ்சம் வரலாறு தெரிந்தால், சிறுவர்கள்கூட சொல்வார்கள்… ‘கோயில்களில்’ என்று.’ துவங்குகிறார்.

‘கோயில்களில் ஒளிந்திருக்கிறது’ என்கிறார். பிறகு ‘கொஞ்சம் வரலாறு தெரிந்தால், சிறுவர்கள்கூட சொல்வார்கள்…’ என்கிறார். அப்புறும் எப்படி அது ‘ஒளிந்திருக்கிறதாக’ அர்த்தமாகும்? ‘ஒளிந்திருந்த வரலாறு’ என்று சொன்னாலாவது சரியாக இருக்கும்.

ஆனால், கோயில்களில் ஒளிந்திருந்த வரலாறு கொலைக்கார வரலாறு. மன்னர்களும் பிரபுக்களும் பார்ப்பனர்களும்; உழைக்கும் மக்கள், பெண்கள் மேல், சமண, பவுத்த சமயங்களின் மேல் நடத்திய அந்தக் கொலைக்கார வரலாற்றை, வீதியில் இழுத்து வந்து அம்பலப்படுத்தியது பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் மார்க்சிய ஆய்வாளர்களும்தான்.

செய்தியாளரோ, இதற்கு நேர் எதிராக, கோயில்களில் ஒளிந்திருக்கிற வரலாறை புனித வரலாறாக பார்க்கிறார்:

‘அண்ணாந்து பார்த்து வணங்கிய நம் கோயில்கள் எல்லாம் இப்போது தலைகுனிந்து பார்க்க வேண்டிய நிலையை நோக்கிச் செல்ல என்ன காரணம்? எளிய பதில்: வளர்ச்சியின் பெயரால், அறியாமையால் நாம் ஆடும் ஆட்டம்.’ என்கிறார்.

‘அறியாமை’ என்றால் என்ன? ‘நாம்’ என்பது யார்? என்பதற்கு அவர் விடை தேடியிருந்தால், அதை படிக்கிற நம்மையும் அவருடன் கூட்டு சேர்த்திருக்க மாட்டார்.

கடைசியல் அதற்கு தீர்வாக சொல்ல வருகிற சம்ஸ்,

‘மறைந்த எழுத்தாளர், சுந்தர ராமசாமி சொல்வார்: “இல்லாமைகூடப் பிரச்சினை இ்லை. அது இல்லை என்கிற பிரக்ஞைகூட நம்மிடம் இல்லை என்பதுதான் பெரிய பிரச்சினை” என்று.’

எழுத்தாளர் கேள்விப் பட்டிருக்கிறேன் அது என்ன ‘மறைந்த எழுத்தாளர்?’ Invisible Man ஆ சுந்தர ராமசாமி? அவரு சொன்னதா இவுரு சொல்றாரே அது அவரு சொந்தமா சொன்னது இல்ல. சுப்பிரமணிய பாரதி சொன்னது,

‘கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இதுவெனும் அறிவுமிலார்’ இதான் அது.

சுந்தர ராமசாமி சொன்ன ‘பிரக்ஞை’ என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு  நடிகர் விசு பாணியில் சிலம்பம் விளையாடி இருக்கிறார் ‘இந்து’ செய்தியாளர்:

‘எப்படி பிரக்ஞை இல்லாமல் சாலைகள் அமைக்கப்படுகின்றனவோ, எப்படி பிரக்ஞை இல்லாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அப்படியே நம் யாருடைய பிரக்ஞையும் இல்லாமல் மண்ணுக்குள் புதைகிறது வரலாறு.’

அதுபோல் இந்த Assignment ம் படிக்கிறவங்களோட பிரக்ஞை இல்லாமல் முடிகிறது.

முதல் நாள், ஒரே நாள் இதழிலேயே.. அதுவும் மேலோட்டமாக வாசித்ததற்கே இவ்வளவு என்றால்…?

**

பார்ப்பன, பார்ப்பன மனோபாவம் கொண்ட அறிவாளிகளுக்கு இன்னுமொரு அட்சய பாத்திரம் தமிழ் இந்து. ‘தினமணி’ யுடன் – ‘தமிழ் இந்து’ விலும் இனி சிறப்புக் கட்டுரைகள் எழுதி, ‘இந்து தமிழர்’ களின் அறிவை விரிவாக்கலாம்.

எது எப்படியோ, சரியான நேரத்திற்குதான் ‘தமிழ் இந்து’ வந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவாக இன்னொரு ‘இந்து’ பத்திரிகை.

‘மவுண்ட்ரோடு மகா விஷ்ணு’ தமிழில் பேசினால் மட்டும், பார்ப்பனியத்தை பேசாமல் பகுத்தறிவா பேசுவாரு?

**

இன்று (16-09-2013) காலை 8 மணியளவில் facebook ல் எழுதியதின் விரிவு.

தொடர்புடையவை:

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

நரேந்திர மோசடி

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

Exit mobile version