இந்து மத எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு – இந்த அரசியலை தீவிரமாக வலியுறுத்துகிறவர்களை; தமிழுக்கு, தமிழனுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயலுகிறார்கள்.
பெரியார் மீதான அவதூறும் இந்த வகையானதே. இந்து அமைப்புகளும் தமிழனவாதிகளும் பெரியாருக்கு எதிராக ஒன்றுபடுகிற புள்ளி இதுதான்.
இவர்களின் இந்தச் செய்கையைக் கண்டிக்கிற முற்போக்காளர்கள் இன்னும் பெரியாரை தீவிரமாக ஆதரிப்பதாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட, கொள்கிற ஞாநி, சின்னக்குத்தூசி போன்றவர்களும் கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதுவரை பெரியாருக்கு எதிராக வந்த அவதூறுகளைக் கண்டித்து ஒரு வரிகூட எழுதியது கிடையாது.
மாறாக, பாரதியின் இந்து பார்ப்பன மனம் குறித்துத் தோழர் வாலாசா வல்லன் எழுதிய புத்தகத்திற்கும் என்னுடைய பாரதி விமர்சனத்திற்கும்தான் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்து கண்ணோட்டம் கொண்ட ஜெயமோகன், பெரியாரின் அடிப்படைகளுக்கு எதிராக மிக இழிவான அவதூறுகளை எழுதியபோது, ஞாநி அதைக் கண்டித்து எழுதவில்லை என்பதுகூட முக்கியமில்லை;
ஜெயமோகனை அழைத்துத் தன் வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது வீட்டுக்குள்ளோ கருத்தரங்கம் நடத்தினார். ‘இதுதாண்டா ஜனநாயகம்’ என்று பெரியார் தொண்டர்களுக்குப் பாடம் எடுத்தார், அந்தப் பெரியாரிஸ்ட்.
சரி, அதற்குப் பிறகாவது ஜெயமோகனின் பெரியார் அவதூறை கண்டித்து, பெரியாரிஸ்டாக அல்ல, ஒரு ஜனநாயகவாதியாக எழுதினாரா என்றால்.. அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
பெரியாரை இழிவாக எழுதியவரை அழைத்துக் கூட்டம் நடத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றிய ஞாநி, பாரதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி எழுதிய வாலாசா வல்லவனையோ என்னையோ அழைத்து அவர் மொட்டை மாடியில் கேணியும் தோண்டவில்லை. ஜனநாயகத்தையும் காப்பாற்றவில்லை.
அருண்சோரி, ரவிக்குமார், குணா, ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிய பெரியார், டாக்டர் அம்பேத்கர் மீதான அவதூறுகளுக்கு எதிராகப் பெரியார் இயக்கம், பெரியாரிஸ்டுகள், பா. பிரபாகரன் எழுதிய ‘அம்பேத்கரும் அவதூறுகளும் ஜெயமோகனுக்கு மறுப்பு’ நூலும், குறிப்பாகப் பெரியாருக்கு எதிரான அவதூறுகளுக்குத் தலித் முரசு புனித பாண்டியன், மிகக் குறிப்பாகப் பேராசிரியர் அ. மார்க்சின் பங்களிப்பும் மிக முக்கியமானது.
அருண்சோரியின் அம்பேத்கருக்கு எதிரான அவதூறைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணியின் ஆய்வுரை அம்பேத்கரியத்திற்கு முக்கியமான பங்களிப்பு.
இவர்களைத் தவிர வேறு எந்த முற்போக்காளர்களும், இயக்கங்களும் ஒரு பக்க அளவிலான கட்டுரை எழுதி கூடக் கண்டிக்கவில்லை. அவ்வளவு ஏன்? போற போக்கில் நாலு வரி சேந்தாப்போலப் பதில் எழுதவில்லை என்பது அவதூறுகளை விட மோசமானது.
பெரியார் மீதான அவதூறுகள், மோசடிகள் மிகத் தீவிரமாகத் தமிழகத்தில் பரவியபோது பார்வையாளனாக இருந்துவிட்டு, அதற்குப் பிறகு ‘நானும் பெரியாரிஸ்டுதான்..’ ‘பெரியார் பிறந்த மண்ணில் இந்து வெறியர்களை அனுமதியோம்..’ என்று பேச இவர்களால் எப்படி முடிகிறது?
*
சிந்தனையாளன் பொங்கல் மலருக்காக 17-12-2013 அன்று எழுதியது. சுருக்கப்பட்ட பகுதி. அதில் எழுதாத மூன்று வரிகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.
ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி
