Site icon வே. மதிமாறன்

நாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்

13254665_1002647616471467_6075004334720533280_o
இந்துமதமே தனித்தனி ஜாதி வழக்கம்தான். இப்படியான பலநூறு ஜாதிகளை இரண்டு சமயங்கள் தனிதனியாகப் பிரித்து இயக்கி இருக்கிறது. மிக நுட்பாக இயங்கிய முறையின் மிச்சசொச்ச வழக்கங்கள் இன்றும் ஆதிக்கஜாதி உணர்வாளர்களிடம் இருக்கிறது.

ஜாதி படிநிலையில் ஒரேஅந்தஸ்தில் இருந்தாலும், வரலாறில் சைவம்xவைணவம் என்கிற சமயச்சண்டை, அதிகாரத்திற்கான ஆதிக்கஜாதிகளுக்குள்ளான சண்டைதான். பி.ஜே.பி. உள்ளே நடக்கும் பதவி சண்டை மாதிரி.

‘ஓம் நமசிவாய’ எனும் பஞ்சாட்சரத்திற்கும் ‘ஓம் நமோ நாராயாணாய’ எனும் அஷ்டாஷரத்திற்கும் நடந்த சண்டை. சிவன்xவிஷ்ணு யார் பெரியவர் என்பதற்காக மாறிமாறி எழுதிக் கொள்ளப்பட்ட கதைகளே இதற்குச் சாட்சி.

‘சிவனின் விஸ்வரூபததைத் தரிசிப்பதற்காக அவர் பாதம் நோக்கி பயணித்தவர்தான் விஷ்ணு’ என்கிற கதை சிவனின் பெருமைக்காக மட்டுமல்ல, விஷ்ணுவை பன்றி என்று இழிவாக சித்திரிக்ககவும்.
இந்தச் சமயச் சண்டையில் புராணங்களில் சிவன் மற்றும் சைவர்களின் கை ஓங்கி இருந்தாலும், இதிகாசங்களிலோ வைணவர்களின் செல்வாக்கு மட்டும்தான்.

இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் வைணவ பெருமை உடையவை. இரண்டிலும் ராமன், கிருஷ்ணன் வைணவக் கடவுள்கள்தான் நாயகர்கள்.
அனால்தான் பெரியார் இயக்கம் ராமாயணத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு முன்,
சைவ சமயத்தார் ராமாயண எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்கள். மறைமலையடிகளைப் போல்.

ஏனென்றால், ராமாயணத்தின் வில்லன் தீவிர சிவபக்தனான ராவணன். பிரகலாதன் கதையும் அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை மூட்டிய வைணவப் பெருமை. அசுரன் இரணியன் சிவபக்தன். அதனாலேயே குடலை மாலையாக்கிக் கொண்டான் நரசிம்மன்.
ஆனாலும் வைணவத்தில் உயர்வானவர்கள் அய்யங்கார்கள்.
சைவத்தில் அய்யர்கள்.

சைவ-வைணவ சச்சரவுகள் இருந்தாலும் அய்யர் – அய்யங்கார்களுக்கு வேதம் அது வலியுறுத்துகிற நாலுவர்ணம் பொது. அதில் எந்தச் சச்சரவும் இல்லை. புராணம், இதிகாசம் இரண்டிலும் அடிப்படை நாலுவர்ணமே.

பவுத்தமும் சமணமும்; பிறப்பிலே உயர்வு, தாழ்வு சொல்லுகிற நாலு வர்ணத்திற்கு எதிராக, ‘வைணவம்–சைவம் ஒண்ணு. இத அறியாதவன் வாயில மண்ணு’ என்று அம்பலப்படுத்தியது. இந்த நெருக்கடியின் காரணமாகத்தான் ‘ஹரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவன் வாயில மண்ணு.’ என்று சேர்ந்து புழங்க ஆரம்பித்தார்கள்.

அதற்கு அடையாளமாகத்தான், சிவராமன் போன்ற பெயர்கள் சைவ, வைணவ ஒற்றுமையின் குறியீடானது. கிறித்துவ, இஸ்லாம் வருகைக்குப் பிறகு சைவ-வைணவ வேறுபாடுகள் கடைப்பிடிப்பது தேவையற்றது என்கிற நிலை தீவிரமானது.

ஆனாலும் அய்யங்கார், நாயுடு (நாயக்கர்) மத்தியில் இன்றும் பெயர் வைப்பதில் சைவ சமய பெயர்களைத் தேர்தேடுப்பதில்லை. ஒற்றுமையின் குறியீடாக வந்த, சிவராமன் போன்ற பெயர்களைகூட வைப்பதில்லை. சிவராமன் என்பதில் சிவன் பெயர் முதலில் வருகிறது என்பதினாலும் இருக்கலாம்.
பழுத்த வைணவப் பெயர்கள்தான் வைத்துக் கொள்கிறார்கள். பெருமாள் மற்றும் அவர் புனைப்பெயர்கள். மனைவயின் பெயர்.

வைணவ அரசியலை ஒட்டுமொத்தமான இந்தியர்களின் அடையாளமாகவும் மாற்ற முயன்று அதில் அதிகம் வெற்றி பெற்றவர் காந்தி. அவர் தீவிர வைணவர்.
வைணவ பெருமையைத் தமிழ் சினிமாவில் தீவிரமாகக் காட்டியவர் ‘நாத்திகர்’ கமல். அவர் இயக்கத்தில் வெளியான ஹேராமில் அய்யங்கார் குடும்பப் பின்னணியில், வைணவக் கலாச்சாரத்தை ஒவ்வொரு ஷாட்டிலும், உச்சரிப்பிலும் சிலாகித்திருப்பார். காந்தியையும் வைணவராகதான் பார்த்திருப்பார்.

காந்தி மதநல்லிணக்கத்தை வலியுறுத்த, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலில் ராமனுக்கு முக்கியத்துவம் கொடுத்து. பிறகு ‘ஈஸ்வர, அல்லா’ என்று தான் வரிசைப்படுத்தியிருப்பார்.
ஆனால், கமல் ஹேராமில் அந்தப் பாடலை டைட்டில் சாங்கின் துவக்க வரியாக மட்டும் வைத்து, வைணவப் பெருமையான காந்திக்கு பிடித்த, 15 நூற்றாண்டில் நரசிம்மேத்தா என்ற குஜராத்தியால் எழுதப்பட்ட ‘வைஷ்ணவ ஜன தோ’ பாடலைதான் காந்திக்குப் பின்னணியாக வைத்திருப்பார்.

இந்தப் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி, லதாமங்கேஷ்கர் என்று பலர் பாடி புகழ் பெற்றிருந்தபோதும், அவர்கள் வைணவர்கள் அல்ல என்பதால், பட்டம்மாள் என்ற அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவரைதான் பாட வைத்திருப்பார்.
அந்தப் படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவிற்கு முன் வேலை செய்த எல். சுப்பிரமணியத்திற்கும் கமலுக்குமான சண்டை, சைவ, வைணவ சண்டையாகதான் இருந்திருக்க வேண்டும்.

காந்தியை கொலைசெய்யச் சாகேத்ராமன் (கமல்) தேர்தேடுக்கப்பட்டவுடன் அவன் கங்கையாற்றில் மூழ்கி பூணூலையும் குடுமியையும் அறுத்து வேறு வேடத்திற்கு மாறுவது போன்ற காட்சியில், அவரை சங்கராச்சாரி தண்ணீரில் முக்கி ஆசிவழங்குவதுபோல் காட்டியிருப்பார்.
சங்கராச்சாரிகள் சைவசமய குறியீடு.
எல்.சுப்பிரமணியமோ அய்யர். அதனால் அந்தக் காட்சிக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்திருக்கக் கூடும்.

சைவத்திற்கு இல்லாத வேறொரு வடிவம் வைணத்திற்கு உண்டு. காதல், காமம். இவையும் பக்தியின் ஒரு வடிவமாகவே போற்றப்படும். மீரா, ஆண்டாள் போன்ற மானுடப் பெண்கள் திருமால், கண்ணன் உடனான காதலையும், காமத்தையும் வெளிப்படையாக அறிவிப்பதும், கண்ணனின் வரைமுறையற்ற பாலியல் லீலைகளும் வைணவத்தில் புனிதப்படுத்தப்பட்டவை. அதனால்தான் ஹேராமில் மனைவிகளுடன் சாகேத்ராமன் உறவில் ஈடுபடுபதை லயித்துக் காட்டினாரோ?

பிறகு வந்த தசவதாரம் முழுக்கச் சைவ, வைணவ சண்டையைப் பகிரங்கமாகச் சொன்ன படம். சோழ மன்னனின், வைணவத்திற்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்துதான் ரங்கராஜ நம்பியாக அறிமுகமாவார் கமல்.
கமலை கட்டித் தொங்கவிட்டு கல்லால் அடிப்பது போன்ற காட்சியில், திருநீர் அணிந்தவர்களே அதைச் செய்வார்கள். சைவ சமயத்தைச் சேர்ந்த திருஞானச் சம்பந்தனை குறியீடாக்கி, ஒரு சிறுவன் கல்லால் அடிப்பதுபோன்றும் காட்டியிருப்பார்.

அதேபோல் அமெரிக்காவிலிருந்து வருகிற நாயகனின் பெயர் கோவிந்த் ராமசாமி. அய்யங்கார் அடையாளத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அம்பலமாகிப் போகும் என்பதால்,
அவரை நாயக்கராக அடையாளப்படுத்தியிருப்பார். இது நாயுடுகள் மேல் உள்ள ஈடுபாடல்ல. வைணவக் குறியீடு. ஆனால் கமல் அதையும் முற்போக்கான அடையாளமாகக் காட்ட முயற்சித்திருப்பார்.
‘உன் அப்பா யாரு?’ என்றதற்கு, ‘ராமசாமி நாயக்கர்’ என்று மறைமுகமாகப் பெரியாரை அடையாளப்படுத்துவார். பெரியாரையும் வைணவராக.
பல்ராம் நாயுடு மட்டுமல்ல, அவரின் அஸிஸ்டெண்ட் அப்பாராவ். அவரும் வைணவரே.

அய்யங்கார்களுக்குப் பதில் நாயக்கர்களைக் காட்டுவது இயக்குநர் பாலசந்தர் பாணி. இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாலசந்தர் படம் எடுத்தால் அதில் பார்ப்பனர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்டமாட்டார். மாறாகச் சைவ முதலியார்களைப் பார்ப்பனக் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார். (வானமே எல்லை)

தசவதாரம் படத்தின் திரைக்கதையை அறிவியலையும் வைணவ சக்தியையும் ஒப்பிட்டே காட்டியிருப்பார். உலகத்தையே அழிக்கக் கூடியதை அய்யங்கார் பெண்ணாக வரும் அசின் கையில் இருக்கும் அந்த வைணவ சக்தியே தடுத்து நிறுத்தும்.
கோவிந்த் ராமசாமிக்கு (கமல்) ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து பெருமாளே தற்செயலாகக் காப்பாற்றவார். பாலத்திலிருந்து அவர் குதித்தாலும் ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற லாறி வந்து அவரைக் காப்பாற்றிவிடும்.

12 நூற்றாண்டில் கோவிந்தராசர் சிலையுடன் ரங்கராஜ நம்பியை கடலில் வீசியக் காட்சியோடு துவங்கிய படம், 2004 சுனாமியுடன் முடியும். உயிர்களின் பேரழிவை தடுப்பதற்காகதான் பகவான் சுனாமியை ஏற்படுத்தினான் என்பது நீதி.
கடற்கரையில் சிதறுண்டு கிடக்கிற பல காட்சிகளில், சிலுவை குறியீடோடு சிதைந்து போயிருக்கிற தேவாலயத்தைக் காட்டியிருப்பார். மற்ற மதங்கள் சுனாமியை தாங்க முடியாமல் வீழ்ந்து கிடக்க, சுனாமியை கொண்டுவந்தவனே திருமால்தான் என்கிற குறியீடு.

இந்த வைணவப் பெருமையைக் கமல் தன் சொந்த விருப்பமாக, பெருமையாக அறிவித்துக் கொண்டாலும், தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்யாத இன்னொரு மிக மோசமான செயலை செய்தார்.

ஜாதி பட்டத்தைப் போராடி ஒழித்தவர் தந்தை பெரியார். இந்தியாவிலேயே இந்தச் சாதனையைப் பெரியார் ஒருவர்தான் செய்தார். பெரியாரின் பேரனாகத் தன்னை அறிவித்துக்கொள்ளும் கமலோ, ஜாதி பெயரில் ‘தேவர் மகன்’ என்று படம் எடுத்தார்.

அது மேலோட்டமாக ஜாதி பெருமை பேசினாலும், உள்ளீடாக அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் முரடர்கள், தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்கிறவர்கள் என்றே காட்சிப்படுத்தியிருப்பார்.
தேவர் சமூகத்தினர் தீவிரமான குலதெய்வ வழிபாடு கொண்டவர்கள். அதோடு முருகன் மற்றும் சைவ சமய சார்பு கொண்டவர்கள். எப்போதும் விபூதிதான் இட்டுக்கொள்வார்கள். நாமம் அவர்கள் பழக்கமல்ல.

விருமாண்டியிலும், தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளேயே கொலை செய்து கொள்கிறவர்களாகவும், விருமாண்டியைத் தவிர எல்லோருமே கெட்டவர்களாகவே வருவார்கள்.
ஆனால், அதில் நெப்போலியன் பாத்திரமும் அவரின் உறவினர்களும் மிகுந்த மனிதாபிமானகளாகவும் தேவர் ஜாதியை சேர்ந்த விருமாண்டிக்கும் உதவி செய்பவர்களாகவும் அதனால் தன் உயிரை இழப்பவர்களாகவும் காட்டியிருப்பார். அவர்கள் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த வைணவர்கள்.

கமலின் இந்த வைணவப் பெருமை அய்யங்கார்களின் ஆதிக்கஜாதி பெருமையாகதான் பதிவாகிறது. அதன் மறைமுக வடிவமே நாயுடு (நாயக்கர்) அடையாளம்.
அதன் முழு வடிவம்தான் ‘சபாஷ் நாயுடு’.

தசவதார பல்ராம் நாயுடு பாத்திரத்தை விரிவாக்கி, ஆந்திராவிலிருந்து வந்தவர் என்கிற பின்னணியில் தெலுங்கு கலந்த தமிழ் உச்சரிப்பில் வசனம பேச வைத்து கதை சொல்லப்பட்டால்;
தமிழ் நாட்டில் தமிழர்களாக வாழும் நாயுடு சமூகத்தினருக்கு நெருக்கடியான சூழலை அது உருவாக்கும்.

ஏற்கனவே இனவாதிகள் நாயுடுகளைத் தெலுங்கர் என்று அவதூறு கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தப் படம் அந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றும்.

அது மட்டுமல்ல, தலித் விரோதமும் ஜாதிவெறியும் கொண்ட சூழலில் இதுபோன்ற ஜாதி பெயர்களில் படம் வருவது, மோசடியானது. ஜாதிகளுக்கு எதிராகப் போராடிய பெரியார் பிறந்த மண்ணில் இது அநீதியானது. இதை அனுமதிக்கக் கூடாது.

எந்த ஜாதியின் பெயரிலும் திரைப்படம் எடுப்பதை இனியும் அனுமதிப்பது, ஜாதிய தாக்குதல்களை ஊக்குவிப்பதாகும்.
அதுபோக, ‘பள்ளர் மகன். பறையர் மகன். அருந்ததியர் மகன்’ என்று படம் எடுக்க முடியாதபோது, மற்ற ஜாதிகளின் பெயரில் படம் எடுப்பது சமூக விரோதம்.

‘எனக்கு ஜாதி பின்னணி கிடையாது’ என்கிற கமல், ’சபாஷ் சக்கிலியர்’ பெயர் வைப்பரா?
*
‘ஜனனம்’ இதழின் ஆசிரியர் நண்பர் முத்துராமலிங்கம் (Muthu Ramalingam) கேட்டுக் கொண்டதற்காக மே 19 தேதி எழுதியது. நன்றி முத்து.

கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு

Exit mobile version