
சிவனடியார் பெரியவர் ஆறுமுகசாமி சிதம்பரம் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்களால் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறார். தீட்சதர்களால் அவர் தாக்கப்படுவதற்கான சூழல் இருக்கிறது என்று முன்பே (சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்) (இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக் கூடாது…) எழுதியிருந்தோம்.
நாம் எழுதிய ஒரு மாதத்திற்குள் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். ‘தமிழன் ஆண்ட பரம்பரை, வீரபரம்பரை, தமிழன் மீது கை வைத்தால் நடப்பதே வேறு. ரத்த ஆறு ஓடும்.’ என்ற தமிழனவாதிகளின் அனல் பறக்கும் வசனங்களை, தீட்சதப் பார்ப்பனர்கள் ஏதோ காமெடி வசனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.
சைவ சமயத்தில் வீர சைவர்கள் என்று ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வீரமாக இருந்தார்கள் என்று அறிவதில் நாம் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம். இப்போதும் அவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை?
‘சைவ மட ஆதினமாக வருவதற்கு பார்ப்பனர்களை உள்ள விடமாட்டோம்’ என்று மார் தட்டுகிறார்கள் முதலியார்கள்.
சிதம்ரபம் கோயிலில் ஒரு சிவனடியாரை பார்ப்பனர்கள் தாக்கியிருக்கிறார்கள். எங்கே போய் மார்அடித்துக் கொண்டிருக்கிறார்கள், முதலியார்கள் அல்லது ஆதினங்கள் அல்லது பிள்ளைமார்கள்.
‘வன்னியருன்னா நெருப்பு’ என்று தாழ்த்தப்பட்டவர்களிடம் அனல் கக்குகிற வீர வன்னியர்கள், தங்கள் சமூதாயத்தைச் சேர்ந்த ஒரு சிவனடியார், தீட்சிதப் பார்ப்பனர்களால் தாக்கப்பட்டிருக்கிறார் என்றவுடன், பார்ப்பனர்களுக்கு எதிராக வன்னிய வீரம் பொங்க மறுக்குதே ஏன்?
(சும்மா இருங்க. இவுங்களயும் கிளப்பி விடாதீங்க… இவுங்க எல்லாம் ஒன்னு சேந்து வெளிப்படையா வந்தா அதுக்கப்புறம் தீட்சதர்களுககு ஆதரவு பெருகிகிட்டே இருக்கும். ஏற்கனவே ஒரு தமிழின அமைப்பு சிதம்பரத்துல தீட்சதர்களோடு இணைந்து ‘ஒன்னா சேந்து சுமுகமா நடராஜர் கோயில்ல புழங்கலாம்…’ என்று திட்டம் வைத்து கருத்தரங்கம் எல்லாம் நடத்தி இருக்காங்க… அவுங்க போதாதுன்னு… இவுங்க வேறவா?
ஏதோ கோயிலுககுப் போனமா சுண்டலா சாப்பிட்டமா என்று இவர்கள் இருப்பதினால்தான், ஓரளவுக்கு தீட்சிதர்களை எதிர்த்து போராட முடியுது. இவுங்க களத்துல இறங்குனாங்க… ஆபத்து தீட்சிதர்களுக்கு இல்ல… நமக்குத்தான். – யாராவது இப்படி ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.)
‘எந்த ஜாதிக்காரராக இருந்தாலும், சுயஜாதி அபிமானியாக இருந்தால், அவர் தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்களை கீழானவர்களாகவும், தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களை மேலானவர்களாகவும் நிச்சயம் நினைப்பார். இதுதான் ஜாதி நிலையின் உளவியலும் செயல்பாடும்.’ என்று தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல் என்ற கட்டுரையில் எழுதியிருந்தேன். அதை இதோடு பொறுத்திப் பார்த்து புரிந்து கொள்ளவும்.
