Site icon வே. மதிமாறன்

பனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்! பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2

‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய் – 3

பகுதி -4

கோயில்களில், இந்து மதத்திற்குள் தங்களுக்கான ஆதிக்கத்திற்கு, லாபத்திற்கு ஆபத்து வருகிறது என்றால் பார்ப்பனர்கள் கொலைகூட செய்ய தயங்கமாட்டார்கள் என்பதைதான் காந்தி கொலை நிரூபித்திருக்கிறது.

தனக்கு இணையாக அல்லது தன்னை எதிர்த்து ஒரு பெரிய தலைவர் உருவாவதை காந்தி எப்போதும் விரும்பியதில்லை. அது கட்சிக்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய பகத்சிங் போன்ற புரட்சியாளர்களிடம் மட்டுமல்ல, ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளின் உதவியை நாடிய சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களிடமும் கூட எதிராக அல்லது அலட்சிமாகத்தான் நடந்துகொண்டார் காந்தி.  டாக்டர் அம்பேத்கருடனான அவரின் மோதல்களில், அவருடைய இந்து கண்ணோட்டம் மிக பெரிய அளவில் பங்காற்றினாலும், ‘தன்னை மீறி, தன்னை நேரடியாக எதிர்த்து ஒரு தலைவர் உருவாகக்கூடாது’ என்கிற காந்தியின் உளவியலும் சம பங்கில் வினையாற்றியிருக்கிறது.

அவர் என்ன நினைக்குறாரோ, அதைத்தான் மற்றவர்கள் செய்யவேண்டும். அல்லது தன்விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கக்கூடாது என்கிற சத்தியாகிரக சர்வாதிகாரியாகத்தான் காந்தி இந்திய அரசியலை நடத்தியிருக்கிறார். 1946 ல் இருந்து அவரின் செல்வாக்கு காங்கிரசுக்குள்ளேயே சரிய ஆரம்பித்தது. அவர் கட்சியில் இருந்த நேரு, பட்டேல் போன்றவர்களே அவர் பேச்சை உதாசீனப்படுத்தினார்கள். அவர் விருப்பத்திற்கு மாறாகவே அவரின் அரசியல் அவரை சுற்றி, சுற்றி சுழன்றது. தன் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கோமாளித்தனங்களை செய்தார் காந்தி.

பாகிஸ்தான் பிரிவினையின்போது அதை எதிர்த்தார். ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்தது. பிறகு பிரிந்த பாகிஸ்தானுக்கு 50 கோடி ரூபாய் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். அதை நிராகரித்தார் வல்லபாய் பட்டேல். இந்து-முஸ்லீம் கலவரம் கட்டுக்கடங்காமல் போனது. காந்தியை எதிர்த்த காங்கிரஸ் தலைமை பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கிறது என்பதாலயே அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தார். அதன் மூலமாக நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.

இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரித்த பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன் முனைப்பு அரசியலின் விளைவாக அவரை அறியாமல் முளைத்த முற்போக்கு கிளை அது. பார்ப்பனிய பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கு சரியான செயல் திட்டம் இல்லாமல், இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது போன்ற கோமாளித்தனங்களை செய்தார். அதில் அவர் நோக்கம் இந்துமதத்தை அவமானப்படுத்தவேண்டும் என்பதல்ல.  இந்துமதத்தை அவமானப்படுத்தும், பலவீனப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மனம் அறிந்து செய்ததில்லை காந்தி.

‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல’ என்று டாக்டர் அம்பேத்கர் ஆதாரத்துடன் நிரூபித்தபோது, ‘ஹரிஜன்’ என்ற பச்சையான இந்து பெயர் வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ஒற்றைச் சொல்லாகவே ‘ஹரிஜன்’ இந்துச் சொல்லை அவர்கள் மீது திணித்து, மீண்டும் இந்துமதத்திற்குள் அடைத்தார். இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ‘ஹரிஜன்’ என்ற சொல் செல்வாக்கு செலுத்திய அளவிற்கு வேறு எந்த சொல்லும் செலுத்தவில்லை. ஜாதி இந்துக்களும் அந்தச் சொல்லையே தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பதற்கு பயன்படுத்தினர். பயன்படுத்துகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாற்றத்தை தடுக்க பெரும் முயற்சி எடுத்த இந்து பார்ப்பன மற்றும் ஆரியசமாஜ்களால் செய்யமுடியாததை காந்தி என்கிற தனிமனிதர் செய்தார்.

“காந்தியிசம் என்பது இந்துயிசத்திற்கும் இந்துயிசத்தின் வறட்டு சூத்திரங்களுக்கும் ஒரு தத்துவ முறையிலான நியாயப்படுத்துதலே” என்பார் அண்ணல் அம்பேத்கர்.

அந்தக் காந்திதான் இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்தார். அந்தக் காந்தியைத் தான் இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் கொன்றனர்.

உண்மையில், இந்துக்கோயிலில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது இஸ்லாத்தை அவமானப்படுத்துகிற செயல். பாங்கு ஒலிப்பது என்பதே தொழுகைக்கு அழைப்பதுதான். இந்துக்கோயிலினுள் பாங்கு ஒலித்தால் முஸ்லிம்களை அங்குவந்து தொழுகை நடத்த அழைப்பது போன்றதுதான்.

‘உருவவழிபாடு, இறைவனுக்கு இணைவைப்பது இஸ்லாத்திற்கு எதிரானது’ என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. காந்தியின் இந்துக்கோயில் பாங்கு ஒலி, இஸ்லாத்திற்கு எதிரானதுதான். உண்மையில் தங்கள் மதநம்பிக்கைக்கு எதிரானது என்று முஸ்லீம்கள் தான் காந்திமீது வீரோதம் கொண்டிருக்கவேண்டும்.

இஸ்லாத்தை அவமானப்படுத்துவது காந்தியின் நோக்கம் அல்ல. பிரச்சினையை தீர்ப்பதற்கும், ‘இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான்’ என்று காந்தி நிறுவுகிறார் என்று காந்தியை இஸ்லாமியர்கள் நம்பினார்கள். சாதாரண இந்து நம்பிக்கை கொண்ட மக்களும் காந்தியின் செயல் நம் மதத்திற்கு எதிரானது அல்ல என்று புரிந்துகொண்டார்கள். இந்து பார்ப்பன அறிவாளிகள் தான் இதை எதிராக நினைத்தார்கள். மதப் புனிதம் கெட்டுப்போய்விடுகிறது என்று பொய்சொன்னார்கள்.

உண்மையில் காந்தியின் கொலை இந்து மதப்புனிதத்திற்காக அல்ல. இந்துக்கோயில்களில் பார்ப்பனிய மேன்மையை காலப்போக்கில் காலி செய்துவிடும் என்பதால்தான். இயல்பாகவே பார்ப்பனர்களைத் தவிர மற்ற இந்துக்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களான மசூதி, தர்கா போன்ற இடங்களில் அங்கு இருக்கும் இஸ்லாமிய மதப்பெரியவரிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஒரு இந்து சாமியாரிடம் காட்டும் பக்தியோடும், நம்பிக்கையோடுமே நடந்து கொள்வார்கள்.

இதுபோன்ற மனநிலை கொண்ட ‘இந்து’ மக்களிடம், காந்தியின் ‘இந்துக்கோயில் பாங்கு ஒலி’  நடவடிக்கை பார்ப்பனிய மேன்மையை தகர்ப்பதாக தீவிர இந்து பார்ப்பனர்கள் உணர்ந்ததாலேதான், காந்தி கொலையை அவர்களின் பிரதிநிதியாக இருந்து கோட்சே செய்தான்.

“இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது.  இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.” என்று காந்தியை கொன்ற கோட்சே கோர்ட்டில் சொன்னான். இதுதான் இந்து பார்ப்பன மனது.

டாக்டர் அம்பேத்கர் சொல்வார்:

“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.”

டாக்டர் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி. காந்தி கொலையை பார்ப்பன கும்பல்தான் செய்தது என்று வரலாற்று சம்பவத்தை நாம் சொன்னால், உடனே நம்மீது பாய்ந்து புடுங்குகிற பார்ப்பனர்கள், காந்தி கொலையை, கோட்சேவை கண்டிப்பத்தில்லை. மாறாக நம்மைதான் கடும் வெறுப்புக் கொண்டு புடுங்குகிறார்கள். விட்டால் கோட்சேவை போல் கொலைகாரனாகவும் மாறுவார்கள்போல.

‘இந்து மதம் புனிதமானது. எந்த மாற்றமும் அதில் செய்யமுடியாதது. மசூதியில் பகவத்கீதையை பாடினால் சும்மா இருப்பாங்களா? காந்தியால் இந்துமதப் புனிதம் கெட்டுபோனது. அதனால்தான் கோட்சே கொன்றார்’ என்று வாதிடுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகள். அப்படியா? இந்து மதம் புனிதமானதா? எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாததா?

இந்தவாதம் பச்சை பொய் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது” என்கிறார்.

புத்தரின் எழுச்சியால் தோல்வியுற்ற பார்ப்பனர்கள், தங்களின் வேதக் கடவுள்களை கும்பிடுவதை கைவிட்டார்கள். புத்தரின் இயக்கத்தால் வேதக் கடவுள்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்று போனதே அதற்கு காரணம். அதனால்தான் தங்களால் உயர்வாக பேசப்பட்ட கடவுள்களை குறித்தே மிக கேவலமான கதைகளை அவர்களே பரப்பினார்கள். ‘பிரம்மா தன் மகளுடன் உறவு கொண்டார்’ என்றும் ‘இந்திரன் பெண் பித்தன். பிறர் மனைவியை அதுவும் மரியாதைக்குரிய ரிஷி பத்தினிகளோடு கள்ளஉறவு வைத்திருந்தான்’ என்றும் எழுதி தங்களின் கடவுளை கைவிடுதற்கான காரணத்தை உண்டாக்கினார்கள் என்ற உண்மையை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.

“எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரம்மா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை (பிராமணர்களை) ஒருவர் கேட்கலாம். அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணைனையும் பிரம்மாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம்.

பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”

இந்து மதத்திற்கு புனிதம் என்று ஒன்று கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள்.  மாறாது என்கிற வார்த்தையை தவிர மற்றவை மாறிப்போகும் என்கிற மார்க்கிய விஞ்ஞானத்திற்கு பொருத்தமாக ஏகப்பட்ட மாற்றங்களை இந்து மதம் செய்திருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

ஆக, இந்து மத புனிதத்திற்காக அல்ல காந்தி கொலை. பார்ப்பன மேலாதிக்கத்தை பாதுக்காப்பதற்கே.

காந்தியின் துரோகம் தெரியவேண்டும் என்றால், அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்க வேண்டும்.

பார்ப்பன பயங்கரவாதம் புரியவேணடு்ம் என்றால், காந்தியின் கொலையின் ஊடாக பார்க்க வேண்டும்.

காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்.

காந்தியை கொலைசெய்த பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்.

வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறுத்தியதை கண்டித்தும்’ பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு.

மேடையில் பேசியசெய்திகளோடு, புதிய செய்திகளையும் சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.

தொடர்புடையவை:

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2

‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய் – 3

Exit mobile version