Site icon வே. மதிமாறன்

மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம்

ஜல்லிக்கட்டு – ஒட்டுமொத்த தமிழர் அடையாளம் என்றால், அது ஏன் தமிழகத்தில் குறிப்பட்ட பகுதியில் மட்டும் நடக்கிறது? குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கெடுக்கிறார்கள்?

தடை விதித்தவர்களுக்கு மனிதர்களை விட மாடுகள் முக்கியமாகத் தெரியலாம். நாம் தடையை ஆதரிப்பதற்கு முதன்மையான காரணம், மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதில் ஈடுபடுபவர்களுக்கே தீங்கிழைக்கிறது. குடல் சரிந்து போகிறது, ஆண்மை பாதிக்கப்படுகிறது, படுகாயம் அடைகிறார்கள். உயிர் சேதம் ஏற்படுகிறது.

ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பினால், ஜல்லிக்கட்டில் எந்த வகையிலும் பங்கெடுக்காத அவர்களைச் சார்ந்திருக்கிற பெண்கள் – உடல், உளவியல், பொருளாதரப் பிரச்சினைகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

மாடுபுடியில் கலந்து கொள்கிறவர்கள், சிறிய வயதிலிருந்தே அதே ஆர்வத்தில் வளர்வதால், அவர்களின் கல்வி, பொருளாதாரம், பாதிக்கப்படுகிறது. ஜாதி உணர்வு பெருமையாக, உயர்வாக, வீரமாக அடையாளப்படுத்தப்படுகிறது.
எந்த வகையில் பார்த்தாலும் ஜல்லிக்கட்டு, உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறது.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஜல்லிக்கட்டு ஆதரவு அரசியலில் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட ஜாதி மக்களின் ஓட்டுகளைக் குறி வைத்தே ஆதரவு அரசியல் போட்டி நடக்கிறது.

தேர்தல் கட்சிகள் மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத மூடநம்பிக்கை, பழைமையான பழக்கம் இவற்றை ‘பண்பாடு’ என்ற பெயரில் ஊதி ஊதி பாதுகாப்பதிலும் புனிதப்படுத்துவதிலும் லாபம் இருக்கிறது. ஆனால்..

மார்க்சிய அறிஞராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தோழர்.தியாகு போன்றவர்கள் கூட ஜல்லிக்கட்டை ஆதரிப்பது வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.
4 January at 12:35at 22:10

நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க

Exit mobile version