Site icon வே. மதிமாறன்

ஜெயகாந்தன் VS கே. பாலசந்தர்

எழுத துவங்கிய ஜெயகாந்தன் தன்னுடைய கதாபாத்திரங்களாகத் தெருவில் சோறு விற்கும் பெண், வண்டி இழுக்கும் முதியவர், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் என்று எளிய மனிதர்களைச் சுற்றி, சுற்றியே கதையமைத்தார். அவர்தான் அதை முதலில் செய்தார். அந்தச் சிற்பபுக்குரியவர் அவர்.

ஆனால் அந்தத் தகுதி பிரபலமாவதற்குப் போதாது. நவீன இலக்கிய அந்தஸ்தும் கிடைக்காது என்பதால்; தி.ஜானகிராமன், லா.சா.ரா. முறையில் பார்ப்பனக் குடும்ப பின்னணி அல்லது பார்ப்பனர்களைப் பாத்திரங்களாக வைத்து கதை செய்தார். நவீன இலக்கியத்திற்கு இதுதான் அப்போதும் அடிப்படைத் தகுதி.
அவர் ஆனந்த விகடனில் அனுமதி வாங்கியதே இந்தப் பின் புலத்தில்தான்.

அவருடைய ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதை தான் விகடனில் முதலில் பிரசுரமானது. அது அதுவரை வந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பின்புலம்.

கல்லூரியில் படிக்கும் பெண், சூழல் காரணமாக ஒரு நபரோடு வன்முறையால் அல்ல, கட்டாயப் பாலிய உறவுக்கு, பயன்படுத்தப்படுகிறாள். அது தெரிந்து பதட்டமைந்த அவளின் தாயார், பிறகு நிதானித்து இது ஒரு விபத்து என்று அவளுக்குப் புரியவைத்து, மகளின் தலைக்கு முழுக்குப் போட்டு, அந்தப் பிரச்சினையிலிருந்து பெண்ணை வெளியே கொண்டு வருகிறாள்.

யார் அந்த ‘ஆண்’ என்றே தெரியாத போது, மகளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அறிவாளியான தாய், எந்த ஜாதியைச் சேர்ந்தவளாக இருந்தாலும், இப்படி ஒரு முடிவுதான் எடுத்திருப்பாள். ஜெயகாந்தனின் அந்த முடிவு தாயுள்ளதோடுதான் இருந்தது. முடிவுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஆனாலும் அவரின் ‘பிரபல’ பிரேவேசத்திற்கு ‘அக்னிப்பிரவேசம்’ தடையாகவே நின்றது.

அதனால்தான் அதே பாத்திரங்கள் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று நாவலுக்குள் பிரவேசித்தபோது, அது கமலின் ‘சகலகலா வல்லவன்’ பாணியில் எவன் ‘கெடுத்தானோ’ அவனுக்கு அவளைக் கட்டிவைப்பது என்று ‘அக்கினிப்பிரவேசம்’ சிறுகதைக்கு எதிராக மாறியது.

பார்ப்பன சமூகத்திலிருந்து அவருக்கு எழுந்த எதிர்ப்பை அல்லது புறக்கணிப்பை சரிகட்டிக்கொள்ள அவருக்கு இந்த முறை பெரியளவில் உதவியாக இருந்திருக்கும். இருந்தது.

ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ கதையால் அதிக அளவில் கோபப்பட்டவர் இயக்குநர் K. பாலசந்தர் என்று சாட்சி சொல்கிறது, அந்தக் காலக்கட்டத்தில் வந்த அவரின் ‘அவள் ஒரு தொடர்கதை’

அந்தப் படத்தில் ஒரு விதவைப் பெண்ணும் அவரின் மகளும் ஒரே ஆணுடன் உறவிலிருப்பாதாகக் காட்டி, ஏறக்குறைய அந்த விதவை பெண்ணையும் அவர் மகளையும் பார்வையாளர்களுக்கு ஒழுக்கக் கேடானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயற்சித்திருப்பார்.

இதுக்கும் ஜெயகாந்தனுக்கும் என்ன தொடர்பு?
அந்த விதவைப் பெண் ஜெயகாந்தனின் தீவிர வாசகர். படத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ புத்தகம் பல காட்சிகளில் வந்து போகும்.

கே. பாலசந்தர் ‘மகளிர் தினம்’: நல்லா வௌங்கும் நாடு

Exit mobile version