‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -2

நேர்காணல்: வே. மதிமாறன்

msv.jpg

* அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா? 

டி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. அவருகூட சேலம் பக்கத்துல ஆத்துர்ல ராமாயணம் நாடகத்தில நடிச்சேன்.

அதுல எனக்கு, சீதை சுயவரத்திலே வில்லு ஒடிக்க வர ராஜாக்கல்ல ஒரு ராஜாவா வேசம். நான் வில்லை ஒடிக்க முடியாம கீழே போட்ட உடனேயே அந்த வில்லு பக்கத்துல இருந்த சுட்ச்சு பாக்ஸ்ல பட்டு உடைஞ்சு போச்சு.

அவ்வளவுதான் ஜனங்க எல்லாம் மேடைக்கு வந்து ‘மரியாதையா இவனுக்கு சீதையை கல்யாணம் பண்ணி வை’ன்னு தகராறு பண்றாங்க. உள்ள போக முடியாது. உள்ள போனா பாலைய்யா அண்ண(ன்) என்னை கொன்னே போட்ருவாரு. வெளியே தகறாறு. வேற வழியில்லாம உள்ள போனேன்.

அவ்வளவுதான் பாலைய்யா என்ன பின்னு, பின்னுன்னு பின்னி என் முகத்த தரையில வைச்சு தேய்ச்சாரு. ஆள விட்டா போதும்ன்னு அங்க இருந்து தப்பி சேலத்துக்கு வந்தேன்.

அப்போ எங்க தாத்தா சேலம் ஜெயிலுக்கு மாற்றலாகி வந்திருந்தாரு. அவரைப் பார்த்துட்டு, மார்டன் தியேட்டஸ்ல இருந்த கே.வி. மகாதேவன்கிட்ட கோரஸ் பாட வாய்ப்புக்கேட்டுப் போனேன்.

அவரு ‘உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஜுபிடர் பிக்சர்ஸ்லேயே போய் சேரு’ ன்னு சொல்லி ரயில் செலவுக்கு இரண்டு ரூபா பணம், புதுவேட்டி, சட்டையும் எடுத்துக் கொடுத்து அனுப்புனாரு. நேரா கோவையில் இருந்த ஜுபிடர்ல போய் சேர்ந்தேன்.

அங்க எஸ்.என். சுப்பையா நாயுடு இசையமைப்பாளரா இருந்தாரு. அவருக்கிட்டே உதவியாளரா சேர்ந்தேன். கூட ஜீ.கே. வெங்கடேஷ் எல்லாம் இருந்தாங்க. சுப்பையா நாயுடு இல்லாதப்ப ஆர்மோனியப் பெட்டி எடுத்து நான் மெட்டு போடுவேன். அத ஒரு நாள் அவரு பாத்துட்டு, ‘என்னடா பண்றே’ ன்னு? அதட்டுனார்.

balu.jpg 

அதுக்கு ஜீ.கே. வெங்கடேஷ், ‘இவ்வளவு நேரம் உங்களுக்கு வராத மெட்டை அவன் போட்டுட்டான்’ அப்படின்னாரு. அந்த மெட்டை சுப்பையா அண்ணன்கிட்ட வாசிச்சி காம்பிச்சேன்.

அவரு, ‘இதை நீ போடடதா சொல்லாத நான் போட்டதா வாத்திய கோஷ்டி கிட்ட சொல்லு’ ன்னாரு.

அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டு. அதுக்கப்புறம் எனக்கு ஒவ்வொரு படத்திலேயும் இரண்டு பாட்டு, ஆனா அது அவர் பேர்ல வரும். எல்லாம் ஹிட்டு. திடீர்ன்னு சுப்பையா நாயுடு உட்பட எங்க எல்லாத்துக்கும் ஜுபிடர்ல கணக்கு முடிச்சு அனுப்பிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. வாழ்க்கை இருண்டு போச்சு.

ஒருநாள் சுப்பைய நாயுடு திடீர்ன்னு தெய்வம்போல வந்து, என்னை ஜுபிடர் முதலாளிகிட்ட, ‘இதுவரைக்கும் ஹிட்டான பாட்டெல்லாம் இவன் போட்ட மெடடுதான்’ ன்னு சொல்லிட்டாரு. அதுக்கு பிறகு எனக்கு நல்ல வாழ்க்கை.

1948ல சென்னைக்கு வந்து சுப்பராமன்கிட்ட சேர்ந்தேன். பிறகு இசையமைப்பாளரா உயர்ந்தேன்.


* உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன்.

notes.jpg

ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஒர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில் ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே? அதை நீங்கள் திட்டமிட்டு செய்தீர்களா?

-தொடரும்

4 thoughts on “‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’

  1. பாத்தீங்களா.. .அவரு இசையமைப்பாளர் ஆகி நமக்கெல்லாம் அருமையான இசையைத் தரனும்னு இருந்திருக்கு. அதான்…நடிக்க விடாம பாலையா மூலமா அடிக்க வெச்சித் தொரத்தியிருக்கிறது. எது எப்படியோ….மெல்லிசை மன்னரையும் தமிழ்த்திரையிசையையும் பிரிக்கவே முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்த பெருமையும் அவருக்கு உண்டு.

  2. //ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஒர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில் ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே//

    அப்படியா?

    பேட்டி சுவாரஸ்யம். பதிவுக்கென்றே பேட்டியா?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading