பத்திரிகைகளின் ஜாதி உணர்வு-பெரியார்-மாட்டுக்கறி-தீண்டாமை-அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி
தோழர் நாகூர் இஸ்மாயில் தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்ட இந்த உரையாடலை அவர் முன்னுரையோடு அப்படியே வெளியிடுகிறேன்:
திரு வே.மதிமாறன் அவர்களுடன் 2 சூலை 2010 சுமார் 3 லிருந்து 4 வரை தொலைபேசியில் உரையாடிய போது மனதில் பதிவு செய்தது.
27 சூன் சனிக்கிழமை அன்றே சந்தித்து பேசுவதாக இருந்தது தவிர்க்க இயலாத சில காரணிகளால் மேலே குறிப்பிட்ட தேதியில் தான் பேச இயன்றது.
தோழர் அவர்களிடம் நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
நாகூர் இஸ்மாயில்:
நீங்கள் உங்கள் வலைப்பதிவில் கேடக்கப்படுகிற எந்த பின்னூட்டத்திற்கும் பதில் எழுதுவதில்லை என்று ஒரு பேச்சு இருக்கிறதே?
வே. மதிமாறன்:
எனக்கு வரும் பெரும்பாலான பின்னூட்டத்தில் கேள்விகளுக்கான பதில் அந்த குறிப்பிட்ட பதில்களிலும், கட்டுரைகளிலுமே இருக்கிறது. நான் பதில் சொல்வதாக இருந்தால் அந்த பதிவில் உள்ளதை தான் திரும்ப எழுத வேண்டியது வரும்.
இரண்டாவது, பின்னூட்டங்கள் முடிவில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. அதுவும் தவிர, பதிலில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் அறிவு நாணயம் கேள்வி கேட்பவர்களிடத்தில் மிகப் பெரும்பாலும் இல்லை. தனிமனித காழ்ப்புணர்ச்சியோடும் தரக்குறைவாகவும் பின்னூட்டங்கள் இடம்பெறுகிறது.
நாகூர் இஸ்மாயில்:
தொலைகாட்சிக்கு பகுத்தறிவு சம்மந்தமான நிகழ்ச்சிகள் இயக்கி வெளியிடும் யோசனைகள் உங்களிடம் உள்ளதா?
வே. மதிமாறன்:
இருக்கிறது. நல்ல செய்திகளோடு, சுவாரஸ்யமாக, வர்த்தக ரீதியாக வெற்றி பெறுகிற சிறந்த நிகழ்ச்சிகளை செய்து தர முடியும். ஆனால் அதற்கேற்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அமைய வேண்டும்.
நாகூர் இஸ்மாயில்:
நீங்கள் ஏன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதில்லை?
வே. மதிமாறன்:
வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதுபவர்கள் ஊர் உலகத்தில் நடக்கும் குற்றங்களை எதிர்த்து எழுதினாலும் எந்த பத்திரிக்கையில் எழுதுகிறார்களோ அந்த பத்திரிக்கையின் மோசடிகளை குறித்து வெளியில் விமர்சிப்பதே இல்லை.
உதாரணமாக, நித்தியானந்தா சாமியாரின் அயோக்கியத்தனங்களை பற்றி எழுதுவதாக இருந்தால் குமுதத்தை பற்றி எழுதாமல் இருக்க முடியாது. ஆனால் குமுதத்தில் தொடர்ச்சியாகவோ, எப்போதாவதோ எழுத வேண்டும் என்றால் நித்தியானந்தாவை பற்றி எழுதும் போது குமுதத்தை பற்றி எழுத முடியாது.
வெகுஜனப் பத்திரிக்கை நடத்துபவர்கள் அவர்களது பத்திரிக்கையில் எழுத வேண்டுமானால், எங்கும் எதிலும் அவர்களுக்கு எதிராக எழுதக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆனந்த விகடனில் எழுதும் போது அதன் இந்து, பார்ப்பனிய கண்ணோட்டத்தைப் பற்றி அதிலேயே எழுதக்கூடாது என்றால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வேறு எங்கேயும் அதன் அயோக்கியத்தனத்தை எழுதக் கூடாது; அப்படி எழுதுகிறவர்களை அவர்கள் பத்திரிகைகளில் எழுத அனுமதிக்க மாட்டார்கள்.
குறிப்பாக பார்ப்பனியத்தை, பார்ப்பன இலக்கியத்தை, இலக்கியவாதிகளை, இந்து மதத்தை தீவிரமாக அம்பலப்படுத்துபவர்களை பார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பன மனோபாவத்தில் இயங்குகிற பார்ப்பனரல்லலாத பத்திரிகைகளும் திட்டமிட்டு புறக்கணிக்கத்தான் செய்கிறார்கள்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் காலத்தில் அவர்களிடமும் இப்படித்தான் நடந்துகொண்டர்கள். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள்.
பாரதியின் பார்ப்பன முகத்தை அம்பலப்படுத்தி எழுதிய காரணத்தால் என் புத்தகங்களின் அறிமுகத்தையோ, என் வலைப்பக்கத்தின் அறிமுகத்தையோகூட குமுதம், ஆனந்த விகடன் இதழ்கள் வெளியிடுவதில்லை. ஆனால், பெரியாரை கேவலமாக எழுதினால், அப்படி எழுதிகிறவர்களை சிறப்பு விருந்தினராக கவுரவிக்கிறார்கள் பார்ப்பன பத்திரிகைகள். அதற்கு உதாரணம்; ஜெயகாந்தன், ரவிக்குமார், ஜெயமோகன். இதுதான் தமிழ் பத்திரிகைகளின் யோக்கியதை.
இந்தக் காரணத்தால்தான் இலக்கிய, முற்போக்கான எழுத்தாளர்கள் பலர் வெளியில் எழுதும்போதுகூட ‘பார்ப்பான்’ என்கிற வார்த்தையை எழுதாமல் பார்ப்பன பத்திரிகைகளுக்கு ஏற்றார்போல் தன்னை தயார் படுத்திக்கொள்கிறார்கள்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்?
வே. மதிமாறன்:
எனக்கு பிடிச்ச தமிழ் எழுத்தளார்கள் யாரும் இல்ல.
சிலநேரங்களில் சிலர் எழுதுகிற எதாவது ஒன்று சரியாக இருக்கும். அதற்காக அவர்களின் ஒட்டுமொத்த எழுத்தும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. பல நேரங்களில் அவைகள் அபத்தமாகத்தான் இருக்கிறது.
எழுத்துக்கள் இரண்டு செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஒன்று தன்னுடைய எழுத்தை கருத்தை முன்னிறுத்தி எழுதுவது. இன்னொன்று தன்னை முன்னிறுத்தி எழுதுவது. இன்றைக்கு எழுத்தாளர்கள் எல்லோரும் தன்னை முன்னிறுத்தி தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்து அரசியல் டிரெண்டு என்னவோ அல்லது தனக்கு எது புகழ் சேர்க்குமோ அல்லது தன்னை எது மிகப் பெரிய அறிவாளியாக அடையாளம் காட்டுமோ அதை எழுதுவது.
என்னை பொறுத்தவரை தமிழில் ஒரே ஒரு எழுத்தாளர்தான் தன் கருத்தை, தன் கொள்கையை சொல்வதற்கான சாதனமாக தன் எழுத்தை மிக எளிமையாக, வலிமையான கருத்துக்களோடு தெளிவான முறையில் கையாண்டார்; அவர் தந்தை பெரியார்.
ஒரு எழுத்தாளன் தான் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருந்து எழுதினால், அவன் ஒரு சிந்தனையாளனாக உயர்கிறான் என்பதைதான் பெரியாரின் எழுத்துக்கள் நிரூபித்தது. பெரியார் தன்னை ஒரு எழுத்தாளனாக எண்ணயதில்லை. எழுதுவது பேசுவதை ஒரு தகுதியாக அவர் என்றும் கருதியதில்லை. அதனால்தான் அவர் மாபெரும் சிந்தனையாளனாக உயர்ந்து நின்றார்.
தான் எழுதுகிற விசயத்திற்கு உண்மையாக இருக்கிற எழுத்தாளன் சிந்தனையாளனாக வளர்ச்சி அடைகிறான். உண்மையாக இல்லாதவன் எழுத்தாளனாக தேக்கமடைகிறான்.
நாகூர் இஸ்மாயில்:
எழுத்தளான் சிந்தனையாளனாக வளர்ச்சி அடைகிறான் என்பதை இன்னும் விரிவாக விளக்க முடியுமா?
வே. மதிமாறன்:
உலகத்துல எங்கே சென்றாலும் இரண்டு விதமான உணவு முறைகள் இருக்கும். ஒன்று சைவம். இன்னொன்று அசைவம். இந்த உணவு முறை பழககம் சமூக பழக்கமாகவோ குறிப்பிட்ட மக்களின் வழக்கமாகவோ இருக்காது. ஒரு குடும்பத்தில் ஒருவர் சைவமாக இருப்பார். அதே குடும்பத்தை சார்ந்த இன்னொரு உறுப்பினர் அசைவமாக இருப்பார். ஆனால் இந்திய சமூகத்தில் மட்டும் மூன்று விதமான உணவு முறைகள் உள்ளது. அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
நாகூர் இஸ்மாயில்:
“தெரியலை..”
வே. மதிமாறன்:
ஒன்று சைவம், இரண்டாவது அசைவம். இன்னொன்று இருக்கிறது அசைவத்திலேயே இன்னொரு பிரிவு மாட்டு கறி சாப்பிடுபவர்கள்.
சைவம் சாப்பிடுபவன் உயர்ந்தவன். அவனை விட உயர்ந்தவன் யாரும் கிடையாது. ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவன் அவனுக்கு அடுத்த நிலை. மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் எல்லோரை விடவும் மட்டம் என்கிற நிலை இருக்கிறது.
சைவம் சாப்பிடுகிறவன் அசைவம் சாப்பிடுகிறவனை எப்படி அருவருப்பாக பார்க்கிறானோ, அதுபோலவே ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவன் மாட்டுக்கறி சாப்பிடுகிறவனை அருவருப்பாக பார்க்கிறான்; இந்த மோசடி உலகில் எங்காவது உண்டா?
இதன் காரணத்தால்தான் குறிப்பாக நகர் புறங்களில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் கூட ரகசியமாகத்தான் சாப்பிடவேண்டிதாக இருக்கிறது.
இந்த மோசமான முறை இந்தியாவில் மட்டும் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் அக்கறை காட்டுவதில்லை. இந்த முறை ஏன் இந்தியாவில் மட்டும இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படிக்க வேண்டும். எத்தன முன்னணி எழுத்தாளர்கள் அம்பேத்கரை படிச்சிருக்காங்க…. பெரும்பாலும் பல எழுத்தாளர்கள் இந்துமதம் பார்ப்பனியத்தின் நுட்பத்தை புரிந்து கொண்டு எழுதுவதில் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள் அல்லது அக்கறை அற்று இருக்கிறார்கள் அல்லது அதை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
நாகூர் இஸ்மாயில்: பெரியாரின் முதன்மையான கருத்து என்று எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?
வே. மதிமாறன்: காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறியபோது,‘ ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் இருவரைப்போலவே காங்கிரசும் தீவிரமான பக்தர்கள் நிரம்பிய கட்சியாக இருக்கிறது; கடவுள் இல்லை, இல்லேவே இல்லை; அதனால் நான் கட்சியை விட்டுபோகிறேன்’ என்று சொல்லி வெளியேறவில்லை.
ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் உட்பட்ட ஒட்டுமொத்தக் காங்கிரசும் சாதிவெறி கட்சியாக இருக்கிறது என்பதினால்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். சாதி ஒழிப்புற்காகத்தான் தனி இயக்கமும் கண்டார். இறைநம்பிக்கை கொண்ட நீதிக்கட்சி தலைவர்களை அவர் ஆதரித்ததும் அதன் பொருட்டே.
நீதிக்கட்சி தலைவர்களின் இறைநம்பிக்கையில் தலையிடமால் அவர்களின் சாதி உணர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் பெயருககு பின்னால் சாதி பெயரை போட்டுக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியதும் அதனால்தான்.
பெரியாரின் கருத்துக்களில் முதன்மையானது சாதி ஒழிப்பு தான். சாதி ஒழிப்பு வழியாகத்தான் பெரியார் கடவுள் மறுப்புக்குள் வருகிறார். அதன் பிறகு கடவுள் இல்லை என்பதை அறிவியல் ரீதியாக புரிந்து கொண்டு முழுமையான பகுத்தறிவாளராக திகழ்ந்தார்.
ஆக, பெரியாரின் அடிப்படை நோக்கம் சாதிஒழிப்புதான்.
நாகூர் இஸ்மாயில்: ஆனாலும் கடவுள் மதம் குறித்து பெரியார் கடுமையாக விமர்சித்தாரே?
வே. மதிமாறன்: சாதாரண பக்தனின் இறைநம்பிக்கையைவிட, ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனின் மத நம்பிக்கை ஆபத்தானது. கிராமத்தானின் இறை நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம். ஆனால், அது அடுத்த மதக்காரனை துன்புறுத்துகிற அளவிற்கு ஆபத்தானது இல்லை. அவன் கும்பிடுகின்ற எந்த கடவுளிடமாவது ‘நான் நல்லா இருக்கணும், ஊர்ல மழை பெய்யணும்’ என்று வேண்டிக் கொண்டு அவன் பாட்டுக்கு போய் விடுவான்.
ஆனால் அவனிடமிருப்பதில் மோசமானது, சாதீய உணர்வு தான். ஏனெனில் தன்னுடைய சுய சாதியை முன்னிறுத்த நினைப்பவன் மற்ற மனிதர்களை தனக்கு கீழாக நினைக்கிறான். இது மிகவும் கேவலமானது. ஆபத்தானது.
ஒரு அப்பாவி பக்தனுடைய கடவுள் நம்பிக்கையை அவனுடைய சாதி உணர்வு, ஆபத்தானதாக மாற்றிவிடுகிறது. தாழ்த்தப்பட்டவர்களை தங்களின் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும், அவர்களை தங்கள் கடவுள்களை வழிபட தடுப்பதும், அப்படி மீறி வழிப்பட்டால் அவர்களை கொலை செய்கிற அளவிற்குக்கூட சாதி உணர்வு அவனுடைய இறைநம்பிக்கையை பயங்கரமானதாக மாற்றிவிடுகிறது.
அதனால்தான் பெரியார் சாதிஒழிப்பின் நோக்கத்தில்தான் இறைமறுப்பையும் தீவிரப்படுத்தினார். பெரியாரின் 70 ஆண்டு கால கடின உழைப்பால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், முற்போக்கானவர்கள் மட்டுமல்ல; பிற்போக்கான சாதி சங்கத் தலைவர்கள்கூட தனது பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதில்லை. அப்படி போட்டுக் கொள்வதற்கு விரும்பம் இருந்தாலும், அதை பகிரங்கமாக வெளிபடுத்த வெட்கப்படும்படியான நிலையை ஏற்படுத்தினார்.
ஆனால் இன்று சாதி உணர்வு பழைய மாதிரி மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. ‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’ என்பது மாதிரியான போக்கு தீவிரமாக வளர்ந்து வருகிறது. முற்போக்கானவர்களாக காட்டிக்கொள்கிறவர்கள் சாதி சங்கத் தலைவர்களை ஆதரிக்கிறபோக்கும் வளர்ந்து வருகிறது. இது மிகுந்த ஆபத்தானது.
நாகூர் இஸ்மாயில்: அரசியில் ரீதியாக நீங்கள் செய்கிற இப்போதைய பணி…?
வே. மதிமாறன்: முக்கியமாக அம்பேத்கரின் கருத்துக்களை தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகிறேன். அதற்கு எனக்கு ஆதரவை விட நிறைய எதிர்ப்பும், புறக்கணிப்பும்தான் கிடைக்கிறது.
நாகூர் இஸ்மாயில்: “நீங்கள் அம்பேத்கரின் படம் போட்ட டி-ஷர்ட் கூட கொண்டு வந்தீர்களே?’
வே. மதிமாறன்: ஆமாம், கிராமங்களில் கார்ல் மார்க்ஸ், லெனின் போன்ற மாபெரும் புரட்சியாளர்களின் படத்தை, சிலையை கூட எளிதாக திறந்து வைத்து விடலாம். அவர்கள் யார் என்று தெரியாததால்… அல்லது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல என்பதினாலும் அதற்கு எதிர்ப்பு இருக்காது.
ஆனால் இந்தியாவின் மாபெரும் தலைவரான அண்ணல் அம்பேத்கரின் படங்களை, சிலைகளை திறந்து வைத்தால் உடைத்து விட்டு போய் விடுவார்கள். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதும் அத்தோடு தலித் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார் என்பதும் சிலையை உடைப்பவர்களின் கோபத்தின் முக்கிய காரணமாக இருக்கிறது.
பொதுவாக, நான் எந்த ஒரு தனி மனிதரின் உருவப் படத்தையும் டிஷர்ட்டில் போட்டுக் கொள்வதை விரும்பாதவன். அப்படி யாருடைய படம் போட்ட டி ஷர்ட்டை அணிந்ததும் இல்லை. அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட சட்டையைதான் விரும்பி அணிந்தேன். அதை யாரும் அணிவதில்லை என்ற காரணத்தினாலும்; அதை அணிவது சாதி எதிர்ப்பு அரசியிலின் பிரச்சார வடிவம் என்ற காரணத்தினாலும்தான்.
அதை அணிந்து கொண்டு வெளியி்ல் சென்றுவருவதே வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. என் இனிய தோழர்களோடு இணைந்து அம்பேத்கர் டி சர்ட கொண்டுவந்ததை என் வாழ்க்கையின் முக்கியமான விசயமாக கருதுகிறேன்.
நாகூர் இஸ்மாயில்: “தாழ்த்தப்பட்ட அந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள்?”
வே. மதிமாறன்: தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசுவது போல் அயோக்கியத்தனம் வேறொன்றுமில்லை. இது எப்படி என்றால் இந்துமத வெறியர்களின் கொடுமையை, இந்து மதத்தை விமர்சித்து இஸ்லாமியர்களிடம் பேசுவதை போல் உள்ளது. அப்படி பேசுவதால் பேசுகிறவர்களுக்கு வேண்டுமானால் நல்ல பயன், லாபம் இருக்குமே தவிர, சமூகத்திற்கோ, அந்த மக்களுக்கோ பயன் இல்லை.
எந்த தாழ்த்தப்பட்டவராவது, என்னை தொட்டால் தீட்டு என்றோ என்னை ஊருக்கு வெளியே வையுங்கள் என்றோ சொன்னதுண்டா? தீண்டாமையைப் பற்றி தாழ்த்தப்பட்டவர்களிடம் போய் பேசாமல் எவன் சாதியை கொண்டாடுகிறானோ, தீண்டாமையை கடைப்பிடிக்கிறானோ அவனிடம் போய் பேசுவது தான் முறையாகும்.
நன்றி:
http://nagoreismail786.blogspot.com/2010/07/13.html
சூலை 2 ஆம் தேதி மாலை 2 மணியளவில் என்னுடன் தோழர் இஸ்மாயில் தொலைபேசியில் உரையாடியதை அவருடைய தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதைதான் மீண்டும் வெளியிட்டேன்.
தொடர்புடையவைகள்:
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை
கலைஞன் பரப்பிய வெளி- சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி
‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி
சாருநிவேதிதா சாமியாராகி விட்டாரா?
கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?
முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு
கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை
‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி
பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)
பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்
தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !
‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு
ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்
காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு
அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!
கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’
`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை
சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்
இன்றைய பிற்படுதப் பட்டோர் அடைந்துள்ள முன்னேற்றத்திற்குப் பெரிதும் பாடு பட்டவர்கள், பிற் படுத்தப் பட்டத் தலைவர்கள் அல்ல. தங்கள் குழந்தைகளுக்கு இடமில்லாது போனாலும் பரவாயில்லையென்று போராடி உரிமை பெற்றுத் தந்த முற்போக்குச் சாதித் தலைவர்கள்.இன்று அந்த நிலை வர வேண்டும்.தாழ்த்தப் பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர்கள்,முற்போக்குச் சாதிகள் இவையனைத்திலுமுள்ள முற்போக்குச் சிந்தனை இளைய தலைமுறையினர் ஒன்று கூடிச் செயல் பட வழி வகுக்க வேண்டும்.ஒரே மேடையிலே, சாதி ஒழிப்புப் பட்டறைகளிலே தந்தை பெரியார்,அம்பேட்கர்,காமராசர்,அண்ணா இவர்கள் பற்றிப் பேச வேண்டும்.தனித்தனி விழாக்கள் எடுத்து நம்மை நாமே பிரித்துக்கொள்ளும் மடமை ஒழிய வேண்டும்.இந்த விழாக்கள் அடிப்படை மக்கள் முன்னேற்றத்திற்கானத் தன்னார்வத் தொண்டு நடவடிக்கைகளாகத் தமிழகத்தின் மிகவும் பின் தங்கிய கிராமத்திலிருந்து அந்த ஊரை முன்னேற்றும் தொண்டாகத் தொடங்கட்டும்.
vanakkam Thozhar,
Inaiyam mattum illamal sirupatthirikkaiyilum kelvi pathil ezhutha vendum appozhuthuthan vegujana makkalidam nammudaiya karutthukkal poie serum.
Nantri mattrum vazhtthukkal