பெண் பிணத்தின் மீதும் கவர்ச்சி
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் வீரர்களின் படங்களுக்குப் பதில், அதில் வேடிக்கை பார்க்கும் பெண்களின் அதுவும் தங்களின் சவுகரியத்திற்காக குறைந்த உடை உடுத்திய பெண்களின் படங்களை பெரியதாக பிரசுரித்து, தங்களின் ‘தொழிலை’ சர்வேதச தரத்துடன் செய்து வருகிறார்கள்.
இப்படி ஆண்களை புறக்கணித்து, அதற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ஆண்களுக்காகத் தான்.
நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை பிரசுரித்து அந்த நடிகைகளின் மீது, தன் வாசக ஆண்களுக்கு ‘ஆசை’ யை தூண்ட முயற்சிக்கிற இவர்களிடம்; நடிகைகளையும் பெண்களாக பாருங்கள் என்றால்;
இவர்கள் விளையாட்டு வீராங்கனைகளை மட்டுமல்ல, விளையாட்டை வேடிக்கை பார்க்கும் பெண்களையும் நடிகைகளாகவே பார்க்கிறார்கள்.
பொதுவாக ஆண்கள் ஒரு பெண்ணுக்கு முக்கியத்துவம் தருவது பெண்ணின் திறமையை விடவும் அவரின் உருவத்திற்குத் தான்.
ஏதோ ஒரு வகையில் தன்னை ஈர்க்கும் அளவிற்கு உருவம் கொண்ட பெண்களிடமே ஆண்கள் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். முக்கியத்துவம் தருகிறார்கள்.
இந்தியாவிற்கு சர்வதேச அளவில் முதலில் தங்கம் வாங்கித் தந்தவர் பி.டி. உஷா. பத்திரிகையாளர்கள், தங்க மங்கையான உஷாவுக்கு தராத முக்கியத்துவத்தை சானிய மிர்சாவிற்கு தந்தார்கள் என்றால், அதற்குக் காரணம் விளையாட்டல்ல.
செய்திகளில் உண்மை என்பதை விடவும் செய்திகளில் கவர்ச்சி என்பது தான் அவர்களுக்கு முக்கியம்.
கொலையுண்டு இறந்தப் பெண்ணை யார் கொலை செய்திருப்பார்கள் என்று துப்பறிவதை விடவும், அவசர அவசராக அதை கள்ளக் காதலாக அறிவித்து, ‘அழகி’ என்று இவர்களால் கூச்சமில்லாமல் வர்ணிக்க முடிகிறது.
பெண் பிணத்தின் மீதும் கவர்ச்சி.
June 27 அன்று facebook ல் எழுதியது
பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?
மாமா’ வேலை பார்ப்பதில் நம்ம நாலாவது தூண்களுக்கு எதுவும் சளைத்ததில்லை. உலக கோப்பையை பேசாமல் தூக்கி கொடுத்துடலாம்.
தொழில் தொழில் எல்லாம் பணம் பண்ணும் தொழில் வேறு என்ன ?
உங்களது இடுகையில் பத்திரிகைகள் பற்றி குறிப்பிட்டிருப்பதை ஏற்றுகொள்கிறேன்.
ஆனால் தங்களை கவர்ச்சி தாரகைகலாகவே காட்டி திரியும் நவ நாகரீக பெண்மணிகளை என்னவென்று சொல்வது?
ஒரு பெண் அணிந்திருக்கும் ஆடையில் கிழிசல் இருந்து அதன் வழி அப்பெண் உடலை பார்க்கும் ஆண்களை குற்றம் சொல்லலாம்.
ஆனால் இருக்கும் துப்பட்டாவையே வீட்டில் வைத்துவிட்டு மார்பை காட்டி திரியும் பெண்களை பற்றி என்ன சொல்வது?
சானியா மிர்சா விசயத்தில் கூட ஆண்கள் நல்ல கால்சட்டை அணிந்துகொண்டு விளையாடுகையில் குட்டைப்பாவாடை அணிந்து (என் உடலை இப்படி காட்டி)தான் விளையாடுவேன் என அவர் அடம் பிடிக்கையில் அதை படம் பிடிக்கும் பத்திரிகையாளர்களை பற்றி என்ன சொல்வது?
முள் இருக்கும் பாதை ஆதலால் செருப்பு போட்டுகொண்டு செல் என சொன்னால் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் ,எனது சுதந்திரத்தில் தலையிடாதே என வெறும் காலுடன் சென்றால்,,,,,,,,,,,?
நான் பத்திரிக்கைகளின் மாமா வேலையை ஆதரிக்கவில்லை ஆனால் அவர்களும் சட்டியில் இருப்பதைத்தான் எடுத்து பரிமாறுகிறார்கள் என சொல்கின்றேன்.
தொழில், வருமானம் ,புகழ் நிமித்தம் திரை உலகில் கவர்ச்சியாகவே நடிக்கும் நடிகைகள் இருந்தாலும் சாதாரண சமுகத்தில் வாழும் சராசரி மக்களும் தங்களை அவ்வாறே கருதிக்கொள்வதை யார் அவர்களுக்கு புரியவைப்பது?
காமராஜர் திரைப்படம் வெற்றிகரமானதாக ஓடாத,அம்பேத்கார் திரைப்படம் வெளியிடப்பட முடியாத சமுதாயத்தில் உடல் கவர்ச்சி மூலமே பெயரையும் புகழையும் அடைகிறார்கள் என்றால் ஆபாசத்திற்கு வருமானம் மற்றும் புகழை அள்ளித்தரும் நமது மக்களை தவிர மற்றவர்களை குற்றம் சொல்லி என்ன செய்ய ?
என்ன செய்வது இது தந்தை வழி சமுதாயமாக மாறிவிட்டதே….எங்கும், எதையும் ஆணை குறீவைத்தே சந்தை பொருட்கள் குவிக்கப்படும் போது அவனது விருப்பங்கள் தானே முன்னிலைப்படுத்தப்படும். விளம்பரங்களுக்கு பெரும்பாலும் பெண்களை மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை பாப்புலரானவர்களையே பயன் படுத்துகிறார்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா…..அது ஒவியர் க்ருஷ்ணாவின் காலம். அவர் ஒரு பீடி விளம்பரத்துக்கு பாலுமகேந்திராவினை வரைந்து இருப்பார். நல்ல வேளை அவர் கோபப்படாமல் நான் அதிகம் பயன்படுத்தும் ‘காண்டத்து’க்கு என் படத்தை பயன் படுத்தாமல் பீடிக்கு பயன் படுத்துகிறார்களே என்று கிண்டலடித்து விட்டுவிட்டார்.
ஆகவே, சந்தையின் மையம் ஆண்….அவனைக்கவரவே எல்லாம்.
ஊடகங்களை விடுங்கள்.
நடிகைகள் அல்லாத பெண்களே கூட கவர்ச்சி பதுமைகளாக வலம் வந்துகொண்டிருப்பதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
உடலை பாதுகாக்க உடை என்பது போய் உடலை கவர்ச்சியாக காட்டுவதற்கே உடை என மாறி உள்ள இன்றைய நடைமுறை குறித்து என்ன சொல்கிறீர்கள்?வள்ளுவனையோ கம்பனையோ காமராஜரையோ அம்பேதகாரையோ பாட புத்தகத்தில் கூட படிக்க விருப்பமில்லாதவர்களையும் அவர்களை பற்றி படமெடுக்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் பற்றி சிந்திக்க கூட ஊக்கம் தர மறுப்பவர்கள் மத்தியில் கவர்ச்சியை மட்டுமே நம்பி அதற்காக கோடிகணக்கில் முதலீடுதர தயாராக இருக்குமளவுக்கு அவர்களது நமபிக்கையை வளர்ப்பவர்கள் யார்?
சரி,பத்திரிகைகள் சே கு வாரா பற்றியோ காமராஜர் அம்பேத்கார் பற்றியோ அச்சடித்து இலவசமாக வழங்குகிறார்கள் என்றால் கூட அதற்காக எத்தனை பேர் வரிசையில் நிற்பார்கள் என தங்களால் சொல்ல முடியுமா?
ஆனால் ஒன்றுக்குமற்ற உதவாக்கரை குப்பைகள் நிறைந்த விழா சிறப்பு மலர்களுக்கு முன்பதிவு செய்ய எத்தனை லட்சம் பேர் காத்திருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா?
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களது பேட்டிகளை பார்த்தால் காசு கொடுக்கிறோம் என்று சொன்னால் கூட ஒரு பயல் வரமாட்டான் ஆனால் நடிகையின் பேட்டியை பார்க்க குடும்பமே காசு கட்டிவிட்டு காத்திருக்கும்.
இன்று ஆரோக்கியம் என்பதற்கும் அழகு என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் அலைந்துகொண்டிருப்பவர்கள் அதிகம்.இதை மையமாக வைத்து காசு பார்த்துகொண்டிருப்பவர்கள் அழகு நிலையம் முதல் போலி மருத்துவமனை நடத்துபவர்கள்வரை பலர்.
பத்திரிகைகள் அந்தந்த கால கட்டத்திற்கு தகுந்தாற்போல அப்போதைய ரசிகர்களின் விருப்பமறிந்து எழுதி கல்லா கட்டுவார்கள்.
தேசப்பற்று,மொழிப்பற்று,தனியார் மயமாக்கல்,மக்கள் புரட்சி என எதைப்பற்றி என்றாலும் அதற்கான காலம் அறிந்துதான் வெளி இடுவார்கள்.
ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த ஆபாசத்தை மட்டும் எல்லா காலங்களிலும் எல்லா விசயங்களிலும் கலந்து வெளியிட முடிகிறதென்றால் அவர்களுக்கு மக்களின் மேலுள்ள நம்பிக்கையை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்