‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு
சொல்லத்தான் நினைக்கிறேன் -4
நேர்காணல்; வே. மதிமாறன்
* எளிமையான மெட்டு. அதிகமான வாத்தியக்கருவிகள் இல்லாமல் உருவான ‘சக்கபோடு போடு ராஜா… உ(ன்) காட்டுல மழை பெய்யுது…’ இந்தப் பாட்டுக்கு இணையாக அதனோடே, எகத்தாளமானப் பேச்சு ( ஆமா, மழைபெய்யுது…நீ வந்து கொடை புடி… ஏன்டாங்…) என்று வித்தியாசமா அமைஞ்சிருந்தது…
ஆமாம், வித்தியாசமாக செய்யணும்னுதான் அதை செஞ்சோம். டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தர் ரொம்ப பிரமாதமா கதையை விளக்கிச் சொன்னார்.
மனசாட்சியைப் பார்த்து பாடற மாதிரியான சூழல். அத நாங்க ஒரு டீமா பேசி உருவாக்கினோம்.
அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டாச்சி. ஏ.வி.எம்.மின் பாரதவிலாஸ் படத்தில் வர பாட்டு.
* இதைக் கண்டிப்பா உங்ககிட்ட கேட்டே ஆகணும். கவிஞர்கள் உங்க முதுகுல சவாரி செஞ்சி, உங்களைவிட அதிகமான புகழ் சேர்த்துகிட்டாங்களோன்னு தோணுது. கண்ணதாசனையும் சேர்த்தேச் சொல்றேன்….
இல்லை, தப்பு. பலமுறை கண்ணதாசன் எழுதுன பாட்டுக்கு மெட்டுப் போட்டிருக்கேன். மெட்டும், வார்த்தையும் இணைந்ததுதான் பாடல்.
* சரிதான், அத நான் மறுக்கல, வார்த்தையை உருவிட்டாக்கூட மெட்டு இனிமையோடு இருக்கும். மெட்டை உருவிவிட்டா வார்த்தை சுவாரஸ்ய மற்று இருக்கும். ரசிகர்கள் கூட, ‘நல்ல பாட்டு’ என்று சிலாகிக்கிற பாடல்களில் அவர்களுக்குப் பெரும்பாலும் பல்லிவியைத் தாண்டி அடுத்த வரி தெரியாது என்பதே உண்மை. வயலின், வீணை போன்றவற்றில் சினிமா பாடல்களை வாசிப்பது, செல்போனில் ரிங் டோனாக இருப்பது மெட்டின் மீதுள்ள மயக்கமே, ஆக மெட்டுதான் அவர்களை வசப்படுத்தியிருக்கிறது…
இல்லை, இதை நான் ஒத்துக்க முடியாது.
பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு. மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு. மீட்டருக்கு மேட்டரு. மேட்டருக்கு மீட்டரு.
* சரி அதை விடுங்கள், ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்ற தயக்கம் இல்லாமல், இசையமைப்பாளர் என்கிற ஒரே உணர்வோடு, சுதி சுத்தமாக, பாவத்தோடு, பாடுபவர்களை வரிசைப்படுத்துங்களேன்?
இது சரியான கேள்வி இல்லை. அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல் எதுவோ அதைதான் பயன்படுத்துவேன். குருவி தலையிலே பனங்காய் வைக்கமாட்டேன்.
‘இந்தப் பாட்டை இவர் பாடுனாதான் சரியா இருக்கும்’னா அவரை பாட வைப்பேன்.
நீங்க பாடுறீங்களா சொல்லுங்க, உங்க குரலுக்கு பொருத்தமானப் பாட்டை உருவாக்கி அதைப் பிரபலமாக்கி காட்றேன்.
* கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக்கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாக பயன்படுத்திக் கொள்ளவில்லையே?
–தொடரும்
பழைய பின்னூட்டங்கள்
greatest (05:16:04) :
மெல்லிசை மன்னர் மெல்லிசையில் மட்டுமல்ல,hippy இசையிலும் விளையாடியிருப்பார்…சிவ சம்போ,உனக்கென்ன மெலே நின்றாய்,ஏங்கேயும் ஏப்போதும்,னம்ம ஊரு சிங்காரி…இன்னும் எவ்வளவோ…
2 03 2008
gragavanblog (08:58:31) :
அருமையான கேள்விகள். வழக்கமாக எல்லாரும் கேட்கும் சவசவக் கேள்விகளைக் கேட்காமை நன்று. நன்று.