தோழர் கொளத்தூர் மணியை சிறையில் சந்தித்தேன்

 

 

dscf4699

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை சந்திக்க கடந்த ஒரு மாதமாக மூன்று முறைக்கும் மேலாக பயணத்திற்கு தேவையான ரயில் டிக்கெட் பதிவு செய்து கடைசி நேரத்தில் ரத்து செய்து இருக்கிறோம்.

கோவையைச் சேர்ந்த வழக்குறைஞர் பாலாவும் நானும் அவரை இந்தத் தேதியில் பார்க்க வருகிறோம் என்று முடிவு செய்து, திருபரங்குன்றம் நண்பர்கள்பெரியார் சிந்தனை இணைய அமைப்பாளர் செந்தில், கருத்துப்பட்டறை பதிப்பக உரிமையாளர் பரமனிடம் சொல்லியிருந்தேன். அவர்கள் சிறைக்கு போகும் போது தோழர் கொளத்தூர் மணியிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

நாங்கள் பார்க்க போவதாக முடிவு செய்திருந்த நாளில் அவரை திடீர் என்று வழக்கு விஷயமாக திண்டுக்கல் அழைத்துச் செல்வதாக காவல் துறை முடிவு செய்தவுடன் நாம் வருகிற தேதியை நினைவில் வைத்துக் கொண்டு, தோழர் கொளத்தூர் மணி தோழர் மதிமாறனிடம் சொல்லிவிடுங்கள் அவர் வீணாக வந்து திரும்ப நேரிடப்போகிறதுஎன்று தோழர்களிடம் சொல்லியிருக்கிறார். மீண்டும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரும்போதும் அதுபோல் நேர்ந்தது. இந்த 22 ஆம் தேதி அவரை பார்ப்பது என்று முடிவு செய்தோம். தோழர் பாலா கோவையில் இருந்தே எனக்குரிய ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து, என்னுடைய ஈ மெயில் முகவரிக்கு 19 ஆம் தேதியே ரிட்டன் டிக்கெட்டோடு அனுப்பி வைத்துவிட்டார். (அவரின் செலவில்தான்)

நான் திருப்பரங்குன்றம் தோழர்கள் பரமன், செந்தில், தமுஎசவை சேர்ந்த தோழர் செந்தில் குமரன் கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பாலா, குமணன் ஆகிய ஆறுபேரும் 22 ஆம் தேதி காலை 12 மணியளவில் மதுரை சிறைக்கு சென்று, தோழர் செந்திலின் பெரும் முயற்சிக்கு பிறகு, தோழர் கொளத்தூர் மணியை சந்ததித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசினோம்.

வெளியில் இருப்பதைவிடவும் சிறையில் அவர் நலமாக இருப்பதாகவே எனக்கு தோன்றியது. சிறைக்குப் போவது குறித்தான அச்சம் அவரிடம் எப்போதும் இல்லாததால் அதன் காரணமான மன உளைச்சல் அவருக்கு இருக்க வாய்ப்பில்லாததாலும், உள்ளிருப்பதில் அவருக்கு அதிகமான ஓய்வு காரணமாகவும் அவரின் நலம் கூடி இருக்கலாம். 6 மாதமாவது ஜெயிலுக்கு போனால்தான் என் உடம்பு இனியும் இரண்டு வருஷத்திற்கு உழைக்க சவுகரியம் கொடுக்கும்” என்று தந்தை பெரியார் 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருத்துறைப்பூண்டியில் நடந்த மாநாட்டில் பேசியது தோழர் கொளத்தூர் மணியைப் பார்த்த போது என் நினைவுக்கு வந்தது.

தோழர் அன்று சிறையில் லெனின் பிறந்த நாளை கொண்டாடியதாக கூறினார். ஈழத்தமிழர்களின் நெருக்கடியான நிலையை, துயரத்தை கவலையோடு பகிர்ந்து கொண்டார். சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களை அனுமதிக்க மறுத்த ஒரு சிறை அதிகாரியோடு கடுமையான் விவாதத்தையும் அந்த விவாதத்தின்போது “நான் 1973ல் இருந்து Nsa போன்ற சட்டங்களினால் கைதாகி பல சிறைகளைப் பார்த்தவன். என்னுடைய இன்னொரு முகத்தை காட்டாமல் போகலாம் என்று பார்க்கிறேன். என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களின் மேல் அதிகாரி ஜாபர் சேட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று கொஞ்சம் கடுமை காட்டி பேசியிருக்கிறார். அதில் இருந்து அந்த அதிகாரி சட்டத்திற்கு புறம்பாக பார்வையாளர்களை அனுமதிக்க மறுப்பதை தவிர்த்திருக்கிறார்.

அதன் தாக்கம் மணி அய்யாவை பார்க்க வந்திருக்காங்க….என்று சிறைக்காவலர்கள் நம்மிடம் காட்டிய மரியாதையிலிருந்தும் உணரமுடிந்து. ஆனால் நாங்கள் பார்க்க போகும் போது இருந்த சிறை அதிகாரி வேறெருவர். இவர் கைதிகளை மிகவும் தன்மையாக நடத்திய விதத்தை நேரில் பார்க்க முடிந்தது.

தேர்தலில் பெரியார் திராவிடர் கழத்தின் நிலை குறித்து முதல் நாள் மத்தியம் (21 தேதி) என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதிய ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியதுகட்டுரையின் பிரதியை அவரிடம் கொடுத்தேன். அது குறித்து விளக்கியும் பேசினேன்.

(இதற்கு முன் போனமாதம் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் கோவை ராமகிருட்டிணனிடம் தொலைபேசியில், ‘தேர்தலில் காங்கிரசை எதிர்ப்பதற்காக அதிமுகவை ஆதரிப்பது என்கிற முடிவை பெரியார் திராவிடர் கழகம் எடுக்காமல் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற எந்தக் கொள்கைகளும் அற்றத் தமிழ்த் தேசிய அமைப்புகள் இதுபோன்ற ஒற்றைக் கோரிக்கையில் ஒரு முடிவை எடுக்கலாம். ஆனால் பெரியார் இயக்கம் அதை செய்யக்கூடாது.” என்று கேட்டுக் கொண்டேன். அண்ணன் ராமகிருட்டிணன் தேர்தல் முடிவுப் பற்றியான எங்கள் பொதுக் குழு கூட்டத்தில் பேசும்போது இதையும் கவனத்தில் கொள்கிறேன். எங்கள் தோழர்களிடம் கலந்து பேசுகிறேன்என்று சொன்னார்.)

கடைசியாக சிறையில் இருந்து கிளம்பும் முன் தோழர் கொளத்தூர் மணியிடம் டாக்டர் அம்பேத்கர் டிசர்ட் தாயாரிப்பும் அதை ஒரு பெரியார் இயக்கம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டும். அதை பெரியார் திராவிடர் கழகம் செய்ய வேண்டும் என்று பேசினேன். கண்டிப்பாக சிறையில் இருந்து வந்தபிறகு அதை எங்கள் கழகத்தின் சார்பாக செயவோம்.என்று கூறினார். இதற்கு முன் 25-2-2009அன்று திருப்பரங்குன்றத்தில் அவரை சந்தித்தபோதும் இதை பற்றி பேசினேன். ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் அன்று சிறப்பாக அண்ணலின் டிசர்ட் வெளியிட்டு விழாவை வைத்துவிடலாம். அண்ணல் படத்தை கொண்டு செல்வது நமது கடமை” என்றார் அதற்குள் அந்த வாரமே கைது செய்யப்பட்டார்.

ஆனாலும், என்னுடைய அம்பேத்கர் பற்றிய புத்தகமான நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லைஎன்ற வாசகத்தை முன்பக்கத்திலும் பின் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் படம் பெரிய அளவில் அச்சிட்டிருந்த டிசர்ட் டை அணிந்து கொண்டு கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஈழத்தில், தமிழர்களை கொல்லும் இந்திய அரசைக் கண்டித்து கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கும் படத்தை தோழர் பாலா காட்டினார். இரண்டுமே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிறையில் இருக்கும் அந்தத் தோழர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்றியும் வணக்கமும் டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்டுக்கு மட்டுமல்ல.

3 thoughts on “தோழர் கொளத்தூர் மணியை சிறையில் சந்தித்தேன்

  1. Nalla visayam dhan T-shirt….
    Nanga mika Avaludan irukkerom t-shirt kku…
    mika viravil kondu varungal….

  2. டி-சட்டை அணிந்து தோழர்கள் போராடிய படத்தையும் கொடுத்திருக்கலாமே. மிக ஆவலாக எதிர்நோக்குகிறேன்.

  3. அனைத்து சமுதாயப் பேரியக்கம் ஏன்? சாதி வெறியர்களை பாதுகாக்க ! சாதியை பாதுகாக்க ! வீடு,பஸ்,மரம், வெட்டிகளை கொளுத்துபவர்களை தண்டிக்காமல் விட்டுவிட ,அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி கெளரவபடுத்த ! பெற்ற பிள்ளகளை வளர்ப்பு பிராணிகளாக நினைத்து கௌரவ படுகொலை செய்ய ….!!!

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading