சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்

CIMG1764

பெரியவர் ஆறுமுகசாமியுடன் சசி, வெங்கட், நிதி, முத்துக்குமார்

சிதம்பரத்தை சேர்ந்த நண்பர் அருள், ஜப்பானில் வேலை செய்கிறார். அவரின் தங்கை திருமணம் 14-6-2009 அன்று கடலூரில் காலை  நடைபெற்றது. மாலை சிதம்பரத்தில் மணமக்கள் வரவேற்பும் நடைபெற்றது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொளள வேண்டும் என்று நண்பர் அருள் ஜப்பானில் இருந்தே பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சென்னைக்கு நேரில் வந்தும் அழைத்தார். போதகுறைக்கு சென்னையிலிருந்து செல்வதற்கு ஏசி வசதிகொண்ட கார் வசதியும் செய்து கொடுத்தார். அதன்பிறகும் போகாமல் இருப்போமா?

நண்பர்கள் சசி, வெங்கட், முத்துக்குமார், கலாநிதி, ஸ்ரீதர் (வந்தவாசி) சனி இரவே 12.00 மணியளவில் (13-6-2009) கடலூர் போய் சேர்ந்துவிட்டோம். 14-6-2009 காலை கடலூரில் திருமணத்தில் கலந்து கொண்டோம். பெங்களுரில் இருந்து நண்பர் கை. அறிவழகனும் வந்திருந்தார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அருள் தொகுத்த ‘சங்க இலக்கியம் தமிழர்களின் அடையாளம் என்கிற நூல் (ரூ.30 பெருமானமுள்ள) இலவசமாக கொடுக்கப்பட்டது.

‘மாலை சிதம்பரம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் நீங்கள் பிச்சாவரத்தை சுற்றி பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்‘ என்று அருள் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். உடன் சிதம்பரத்தைச் சேர்ந்த நண்பர் அன்புமணியும் வந்தார்.

‘சிதம்பரம் கோயிலுக்கு கண்டிப்பாக போக வேண்டும். பெரியவர் ஆறுமுகசாமியை பார்க்க வேண்டும்’ என்ற வெங்கட்டின் விருப்பம், எல்லலோரின் விருப்பமாக மாறியது. பிச்சாவாரம் முடித்து சிதம்பரம் சென்றோம். (நான் ஏற்கனவே அந்தக் கோயிலுக்கு போயிருக்கிறேன். அரசுடமை ஆன பிறகு இப்போதுதான்.)

கடுமையான வயிற்றுவலியின் காரணமாக ஸ்ரீதர் வண்டியிலேயே சாய்ந்துவிட்டான். மற்ற ஆறு பேரும் மாலை சிதம்பரம் கோயிலுக்குள் சென்றோம்.  வாட்ட சாட்டமாக அடியாட்களைப் போல் இருந்த தீட்சதர்களைப் பார்த்துபோது பரிதாபத்திற்குரிய உருவம் கொண்ட பெரியவர் ஆறுமுகசாமி ஞபாகத்திற்கு வந்தார்.  முறுக்கேறிய உடலமைப்போடு நவீன ஆயுதங்களோடு லெபனான் பள்ளத்தாக்கையும் அந்த எளிய மக்களையும் தாக்கிய இத்தாலி இராணுவ ரவுடிகளும்,  அவர்களை எதிர்த்து வீரோத்தோடு போர் புரிந்த தள்ளாதக் கிழவன் உமர் முக்தரையும் நினைத்துக்கொண்டேன்.

தீட்சிதப் பார்ப்பனர்களிடம் பெரியவர் ஆறுமுகசாமி பற்றி விசாரித்தால்…. என்ற யோசனை வந்தது.

வருகிறவர் போகிறவர்களை மடக்கி, ‘சார் மதுரையா.. வாங்க சார் கோவையா.. இங்க வாங்க சார்’  என்று காய்கறி வாங்கப்போனவரை மடக்கி ஆம்னி பஸ்ஸில் மதுரைக்கு அனுப்பி வைக்கும் புரொக்கர் போல்,  ‘பணம் கட்டினால் வீட்டுக்குத் தபாலில் பிரசாதம் அனுப்பிவைப்போம்’ என்று பக்தியை மார்க்கெட் பண்ணிக்கொண்டிருந்த ஒரு தீட்சிதரிடம்  – நான், வெங்கட், அன்புமணி சென்றோம்.

வெங்கட் அவரிடம், ‘பெரியவர் ஆறுமுகசாமி எங்கிருக்கறார்?’ எனறு கேட்டதற்கு,  ‘அப்படி யாரும் இங்க இல்ல’ என்றார் தீட்சிதர். விடாமல் வெங்கட்,  ‘இல்ல டிவியில எல்லாம் காட்டுனாங்களே அவரு…’ என அப்பாவிப்போல் கேட்க,

கடுமையான தீட்சிதர், ‘அவன் ஒரு பிச்சக்கார நாய்… எங்கேயாவது தெருவுல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான்.’ என்று அன்பே சிவமாக பேசிவிட்டு,  ‘நீங்க பணம் கூடுங்க வீட்டுக்கு பிரசாதம் வரும்’ என்றார்.

‘யாரு பிச்சைக்கார நாய்?’ நினைத்துக்கொண்டேன்.

பிறகு நண்பர்கள் மன்னை முத்துக்குமார், நிதி இருவரும் சென்று அதே திட்சீதரிடம் பெரியவர் ஆறுமுகசாமியை பற்றி விசாரித்தனர். அவர்களிடமும் இப்படியே, காதலாகி… கசிந்துருகி…. பதில் அளித்திருக்கிறார்.

பக்தர்கள் சிதம்பரம் கோயிலுக்கு சென்று நடராஜனை தரிசிக்கிறார்கள். பகுத்தறிவாளர்கள் சிதம்பரம் கோயிலுக்கு சென்று ஆறுமுகசாமியை சந்திக்கிறார்கள் என்று ஆகியிருக்கிறது இப்போது.

ஒரு வழியாக பெரியவர் ஆறுமுகசாமியை கண்டுபிடித்தோம். அவர் நடராஜனுக்கு மேற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார். சந்திக்க வருகிறவர்களிடம் உற்சாகமாக பேசினார். அவருடன் நின்று நாங்கள் படம் எடுத்துக்கொண்டோம். கர்ப்பகிரகத்தில் இருந்து கடுமையான குரல்  எச்சரித்தது,  ‘இங்கே போட்டோ எடுக்கக்கூடாது.’

கர்ப்பகிரகத்தில் இருந்து எச்சரித்தது நடராஜன் அல்ல. தீட்சிதர்தான். ஆனால் எங்களுக்கு அருகிலேயே ஒரு இளம் பெண் கோயிலை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார் ஒரு தீட்சிதர்.

இவ்வளவு விரோதமும் அடியாட்களைப்போல் உருவமும் கொண்ட தீட்சிதர்களை, ஐந்தாண்டுகளுக்கு முன் தனிநபராக சென்று அவர்களோடு மோதிய பெரியவர் ஆறுமுகசாமியின் வீரம் போற்றுதலுக்குரியது. இவருக்கு முன் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு  அப்படிமோதிய வள்ளலாரை தீட்சிதர்கள் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள். அதில் கோபிததுக் கொண்டு இனி சிதம்பரமே வருவதில்லை என்று போன வள்ளலார் வடலூரில் ஒரு சிற்றம்பல மேடையை ஏற்படுத்தினார். ஆனால் ஆறுமுகசாமியோ, தீடசிதப் பார்ப்பனர்கள் அடித்து வீதியில் வீசிய போதும் துணிந்து எதிர்த்து நின்றார்.

CIMG1763

பெரியவர் ஆறுமுகசாமியுடன் வெங்கட், நிதி, நான், அன்புமணி

பக்தர்களின் உரிமைக்காக போராடிய பெரியவர் ஆறுமுகசாமியின் சுயமரியாதைக்கும் அவரின் வீரத்திற்கும் துணை நின்ற, எனது இனிய நண்பர் வழக்கறிஞர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களுக்கும், மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்க பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் வழக்கறிஞர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களுக்கும்  நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் காலத்திலேயே இவ்வளவு சிரமங்கள் பட வைக்கிற பார்ப்பனர்கள் 1925ல் என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? அதுவும் திருப்பதி உட்பட ஒட்டுமொத்த தென்னிந்திய கோயில்களையும் அரசுடமை என்றால்….. பார்ப்பனர்கள் மட்டுமா சைவ மட ஆதினங்களும் எதிராக நின்றார்கள்.

அந்த எதிர்ப்பை எல்லாம் சமாளித்து, பெரும்பாடுபட்டு, அவமானப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பலபோராட்டங்களுக்கு பின் இந்தியாவிலேயே முதல் முறையாக 1925ல் இந்துமத பரிபாலன சட்டம் என்கிற பெயரில் இநதுக் கோயில்களை அரசுடமை ஆக்கும் சட்டத்தை, இந்து அறநிலையத்துறையை கொண்டு வந்த நீதிக்கட்சியின் முதல்வர் பனகல் அரசரை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறோம்.

சிதம்பரம் கோயிலில் அடைந்த வெற்றி, தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி என்பதை விட,  பனகல் அரசருக்கு கிடைத்த வெற்றி என்பது கூடுதல் பொறுத்தம் உள்ளதாக இருக்கும்.

காங்கிரசில் இருந்த பெரியார், பனகல் அரசரின் இந்துமத பரிபாலன  சட்ட மசோதாவால் பெரிதும் கவரப்பட்டார். கோயில்களின் சொத்துக்களை மருத்துவமனை போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துகிற நீதிக்கட்சி அரசின் முயற்சி பெரியாரை பெரிதும் கவர்ந்தது. பனகல் அரசர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். 1925 ல் அந்த மசோதா சட்டமான அதே ஆண்டுதான் காங்கிரசில் இருந்து வெளியேறினார் பெரியார்.

சிதம்பரம் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததின் பொறுட்டு இந்து அறநிலையத்துறையை உருவாக்கிய, தந்தை பெரியாரின் மரியாதைக்குரிய நீதிக்கட்சியின் முதல்வர் ராமராய நிங்கர் என்கிற பனகல் அரசரை, மிகுந்த மரியாதையுடன் நினைவு கூறுவோம்.

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

23 thoughts on “சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்

  1. மிகச்சிறப்பான எழுத்து வடிவம்,
    என்னவோ நானே உங்களுடன் பணித்தது போல உணர்வு.அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.சிதம்பரத்தில் முதன் முதலில் மனித உரிமைபாதுகாப்புமையம் நடத்திய போராட்டம் முதல் முடிந்த அளவுக்கு சில தவிர பல போராட்டங்களை கலந்து கொண்டதுதான்.

    மேலும் பெரியவரிடம் பேசிய போது கூட சொன்னார்”நான் மட்டும் போகணும்னு இல்லை ஒடுக்கப்பட்ட மக்கள்,தாழ்த்தப்பட்டவங்கன்னு எல்லாத்துக்கும் கோயிலில பாடற உரிமை கிடைக்கணும்”. அவர் கிழவரா அல்லது ஊரில் ஒரு பிரச்சினை என்றால் காது கொடுத்து கேட்காத இளசுகள் கிழடுகளா என்ற சந்தேகம் தான் வந்தது.

    இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ம.உ.பா,மையம், ம க இ க அமைப்புக்கள் தொடர்ந்து தற்போது வரை மீடியாக்களால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அந்தப்போராட்டம் மிக நெடியது, துரோகங்களும், வஞ்சகமும் நிறைந்து, கடைசியாய் ரத்தசகதியில் ஆண்டவனை நாத்திகர்கள்,நக்சலைட்டுகள் காப்பாற்றினர்,கோயிலுக்கு வெளியே ம க இ க மற்றும் மக்கள் மீது நடத்தப்பட்ட தடியடி வழக்கு இன்னும் வாபஸ் பெறப்படவில்லை என்பது இன்னொரு உண்மை. ஆனால் பார்ப்பன ரவுடிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன.

    கலகம்

  2. நாங்கள் சென்றிருந்தபோது தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லி வற்புறுத்தினோம். கடைசி வரை செய்யவே இல்லை. புகார் கொடுத்து விட்டு திரும்பினோம். நீங்க பயங்கரமா சுடேத்திட்டிங்க போல.

  3. முன்றவது இருக்கும் நிதி நான் தான்..

    வாட்ட சாட்டமாக அடியாட்களைப் போல் இருந்த தீட்சதர்களைப் பார்த்துபோது பரிதாபத்திற்குரிய உருவம் கொண்ட பெரியவர் ஆறுமுகசாமி ஞபாகத்திற்கு வந்தார்///

    சினிமாவில் வரும் வில்லன் போல் இருந்தனர் நமக்கு இவங்கே மேல் ஒரு கண்ணு எப்படி இப்படி ஊடம்ப வழக்கரங்கனு

    தீட்சிதப் பார்ப்பனர்களிடம் பெரியவர் ஆறுமுகசாமி பற்றி விசாரித்தால்…. என்ற யோசனை வந்தது.///

    அவர் இருக்கும் இடம் எங்கு என்று யாரும் கூறவில்லை…

    பிறகு நண்பர்கள் மன்னை முத்துக்குமார், நிதி இருவரும் சென்று அதே திட்சீதரிடம் பெரியவர் ஆறுமுகசாமியை பற்றி விசாரித்தனர். அவர்களிடமும் இப்படியே, காதலாகி… கசிந்துருகி…. பதில் அளித்திருக்கிறார்.//

    மிகவும் கேவலமாக ,, அவமானப்படுத்தும் விதமான பேச்சு அது

    ரொம்ப பயங்கரமான ஆளுங்க அவங்க……

  4. புகைப்படம் எடுத்த விதம் காமெடியாக உள்ளது. அட்லீஸ்ட் நீங்கள் குனிந்து அல்லது அமர்ந்து படம் எடுத்திருக்கலாம். ஏதோ இயற்கை காட்சிக்கு முன் நிற்பது போல காமெடி செய்கிறீர்கள்…

  5. @@செந்தழல் ரவி

    Ithai padiyungal..

    அவருடன் நின்று நாங்கள் படம் எடுத்துக்கொண்டோம். கர்ப்பகிரகத்தில் இருந்து கடுமையான குரல் எச்சரித்தது, ‘இங்கே போட்டோ எடுக்கக்கூடாது.’

    கர்ப்பகிரகத்தில் இருந்து எச்சரித்தது நடராஜன் அல்ல. தீட்சிதர்தான். ஆனால் எங்களுக்கு அருகிலேயே ஒரு இளம் பெண் கோயிலை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார் ஒரு தீட்சிதர்.

  6. நல்ல பதிவு தோழரே……..

    நான் பலமுறை கோயிலுக்கு உள்ளே சென்றவன் எங்கிற முறையில் கோயிலின் அழகும், கட்டுமான வேலைகளும் என்னை கவர்ந்திருக்கின்றன. காலணிகளை கழட்டிவிட்டு உள்ளே போக சொல்லும்போது மட்டும் கடுப்பாகும், இருந்தும் இவ்வளவு அருமையான கட்டடகலையில் நாம் காலணிக்கொண்டு அவமரியாதை செய்யவேண்டாமே என எண்ணிக்கொள்வோம்.

    குறிப்பாக ஆயிரங்கால் மண்டபம் போன்று இருக்கும் அந்த உயர்ந்த இடத்தில் அமர்ந்து நண்பர்களுடனும், தோழியுடனும் அரட்டை அடித்த காலங்களும் இப்போது பசுமையாக வருடுகின்றன. அதை என் சிறுகதை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். மறக்கமுடியாத நாட்கள் அவை.

    அப்போதெல்லாம் தெரியாது இவன்களின் தில்லுமுல்லு இந்த அளவிற்கு இருக்கும் என்பது. அப்போதும் அதே பெரியவர் அங்கேதானே இருந்திருப்பார் அவரை இப்போது பார்க்கவேண்டும் என்கிற ஆவல் மேலிடுகிறது.

    அப்புறம் பிச்சாவரமா அப்படி இன்னும் அந்த இடம் இருக்கிறதா? அதைதான் எப்போதோ அடிச்சி உலையில போட்டுட்டானுவளே..
    அங்கிருந்த மான், மயில்,முயல்,குரங்கு,மரங்கள்,செடிகள்,
    எல்லாவற்றையும் விட காளையும் யானையும் சேர்ந்ததுப்போல் வைக்கப்பட்டிருந்த பெரிய சிலை (இரண்டு ஆண்டுகளுக்குமுன் பார்த்தபோது அதை உடைத்து நொறுக்கி போட்டிருந்தார்கள் மனது வலித்தது-வாழ்க சுற்றுலாத்துறை)

    எல்லாம் ஒரு பெரும்மூச்சில் முடிந்துவிடுகிறது.
    நினைவலைகளை கிளறியதற்கு நன்றி.

  7. நல்ல ஒரு பயணக் குறிப்பு.இழையை படித்த நண்பர்கள் இனி சிதம்பரம் சென்றால் ஐயா ஆறுமுக சாமியை கண்டிப்பாக தீட்ச்சிதர்களிடம் தான் விசாரிப்பார்கள்.
    ஆனால் இதை அவர்கள் விளையாட்டுக்காக செய்தாலும்,தீட்ச்சித நாய்களின் பதில்களும்,அவர்களின் கோர முகமும்,
    ஐயா ஆறுமுகசாமியை ஒரு கதாநாயகனாகவே நம் நெஞ்சில் நிற்க வைக்கும்.இந்த தீட்சித ஒநாய்களிடமா இவர் இத்தனை ஆண்டு காலமும் போராடியிருந்திருக்கிறார் என்று.

    வாழ்க ஐயா ஆறுமுக சாமி!தொடர்க மொழி தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள்!!

    உங்கள் தோழன்,
    வேந்தன்..

  8. //புகைப்படம் எடுத்த விதம் காமெடியாக உள்ளது. அட்லீஸ்ட் நீங்கள் குனிந்து அல்லது அமர்ந்து படம் எடுத்திருக்கலாம். ஏதோ இயற்கை காட்சிக்கு முன் நிற்பது போல காமெடி செய்கிறீர்கள்…//

    அங்கு குனியவோ,அமரவோ முடியாது.ஏனெனில் .அவர் அமர்ந்திருந்த அந்த இடம் சற்று உயரமானது.குட்டி சுவரல்ல!!

    நீங்கள் அங்கே சென்று பார்த்து போட்டோ எடுத்து கொள்ளுங்கள்.அப்போது நீங்களும் காமெடி செய்வீர்கள்.

    – வெங்கட்

  9. //செந்தழல் ரவி//

    //புகைப்படம் எடுத்த விதம் காமெடியாக உள்ளது. அட்லீஸ்ட் நீங்கள் குனிந்து அல்லது அமர்ந்து படம் எடுத்திருக்கலாம். ஏதோ இயற்கை காட்சிக்கு முன் நிற்பது போல காமெடி செய்கிறீர்கள்…//

    யாரு இந்த காமெடியன் செந்தழல் ரவி? கேமார மேதையா?
    எழுதியிருக்கிற பிரச்சினையை பத்தி ஒன்றும் சொல்ல…. வந்துட்டாரு ஷாட்டு வைக்க.

    சிதம்பரம் கோயில் போய் ஆறுமுகசாமிக்கிட்ட நின்னு போட்டோ செஸன் செய்து வித்தியாசமான கோணங்களில் அவரை படம் எடுங்க. உங்கள நல்லா கவனிச்சு வடிவேல் மாதிரி காமெடியானாக்கிடுவான், அங்க இருக்கிற வில்லன்களான தீட்சிதர்கள்.

  10. மிகச்சிறப்பான பயணக் குறிப்பு. இந்த கட்டுரையை படித்து முடித்ததும் நானும் உங்களுடன் வந்தது போன்ற ஒரு உணர்வு இருந்தது.

    வாழ்க ஐயா ஆறுமுக சாமி

  11. மிகச்சிறப்பான பயணக் குறிப்பு.இந்த கட்டுரையை படித்து முடித்ததும் நானும் உங்களுடன் வந்தது போன்ற ஒரு உணர்வு இருந்தது.

    வாழ்க ஐயா ஆறுமுக சாமி

  12. வணக்கம் மதிமாறன்

    வெகு அரிதாகவே இந்தமாதிரி எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது.

    17 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலுக்குப் போய், சட்டையைக் கழற்றச் சொன்னதால், நடராஜனை சட்டையோடு பார்க்கிற வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பிவிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன, உங்கள் கட்டுரையைப் படித்தபோது.

    ஆறுமுகச் சாமிகள் நிறைய உருவாக வேண்டும்.

    ஆண்டவனை சட்டையோடு தரிசிக்கிற உரிமையையும் பெற்றுத் தரவேண்டும்…

    வினோ

  13. நல்ல ஒரு பயணக் குறிப்பு.இழையை படித்த நண்பர்கள் இனி சிதம்பரம் சென்றால் ஐயா ஆறுமுக சாமியை கண்டிப்பாக தீட்ச்சிதர்களிடம் தான் விசாரிப்பார்கள்.
    ஆனால் இதை அவர்கள் விளையாட்டுக்காக செய்தாலும்,தீட்ச்சித நாய்களின் பதில்களும்,அவர்களின் கோர முகமும்,
    ஐயா ஆறுமுகசாமியை ஒரு கதாநாயகனாகவே நம் நெஞ்சில் நிற்க வைக்கும்.இந்த தீட்சித ஒநாய்களிடமா இவர் இத்தனை ஆண்டு காலமும் போராடியிருந்திருக்கிறார் என்று.

    வாழ்க ஐயா ஆறுமுக சாமி!தொடர்க மொழி தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள்!!

    யாழினியன்

  14. பெரியவர் ஆறுமுகசாமியின் படத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் இவரையா அடித்து இம்சித்தார்கள் என்று வியந்ததுண்டு. உடல் வலிமையால் இவரை நோகச் செய்த தீட்சிதர்களை விடவும் எடுத்துக் கொண்ட நோக்கத்தைக் கைவிடாத பெரியவர் ஆறுமுகசாமி எனக்கு மிகப் பெரிய வீரராகத் தெரிகிறார்.

    தெரிந்தோ தெரியாமலோ, யாருக்கும் தெரியாமல் ஒரு கலகத்தைச் செய்தவன் என்பதை நினைக்கிற போது என்னையும் அறியாமல் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது. பதினாலு அல்லது பதினைந்து வயதில் சிதம்பரத்தில் சில நாள் தங்கியிருந்து படித்துவந்தேன். அப்போது கோயிலில் செருப்பு வைக்குமிடத்தில் கொடுக்கக் காசு எடுத்துச் செல்லவில்லை. எனது செருப்புகளை ஒரு பாலிதின் உறையில் சுற்றி புத்தகப் பைக்குள் வைத்துக் கொண்டு சன்னிதி வரை சென்று வந்தேன். திரும்பி வரும்போது பையில என்னடா வச்சிருக்கே என்று ஒரு தீட்சிதர் பையைப் பிடுங்கி சோதித்தும் பார்த்தார். எனது தோலின் நிறத்தைப் பார்த்து நானும் அவர்களவா என்று கருதி “சரி சரி, போய்த் தொலை. மறுபடியும் இப்படி வந்து நிக்காதே.” என்று மயிலிறகால் அடித்தது போல் கண்டித்து வெளியே அனுப்பினார்.

  15. செய்தி. மிக அருமை மதிமாறன்! மிகவும் ரசித்தேன். ஓமர் முக்தார் லெபனானைச் சேர்ந்தவர் அல்ல, லிபியாவைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

    மோகனரூபன்

  16. உங்களின் பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது தோழர் ….
    அவரைப் போல ஆறுமுகச் சாமிகள் நிறைய உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்…..

    தொடர்ந்து போராடுவோம் திண்டமைக்கு எதிராக………

    நன்றி

  17. ஆறுமுகச்சாமிக்கு அடுத்து யார்????????

  18. I congratulate you with true experience you gained in meeting with Arumuga samy. Now he is alright with staying in room at a drs Hospital. His faith with God and tamil is superb. Today also he is suffering for food .

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading