பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்காளித் தகராறு!

mahabharat

மத நல்லிணக்கம் பேசுகிறவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தான். நாஸ்திகர்கள் கூட இந்துக்களில் மட்டும் தான் இருக்கிறார்கள். நாஸ்திகம் பேசுகிற பல முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தீவிரமான மத நம்பிக்கையாளராகத்தான் இருக்கிறார்கள். இந்துக்களின் ஒற்றுமையை குலைத்து விட்டு அவுங்க மட்டும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறார்களே?

வி. சௌமியா, காஞ்சிபுரம்.

“இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம்” என்று சொல்கிறார்கள். நாஸ்திகர்களும் அப்படி சொல்கிறார்கள்.

அப்படி சொல்வது தவறு. அது முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்தியர்களாகவே கணக்கில் வைத்துக் கொள்ளாமல் சொல்லப்படுகிற வாக்கியம். ‘இந்துக்களின் இருபெரும் இதிகாசங்கள்’ என்று தான் அவைகளைச் சொல்ல வேண்டும். அது தான் சரி.

அந்த இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் பாரதப் போர் வருகிறதல்லவா, அது என்ன பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்குமா நடந்தது? பங்காளித் தகராறு. அப்பவே இப்படி இருக்க, அப்புறம் இப்ப வந்து நீங்க இந்து ஒற்றுமையின்மைக்காக இஸ்லாமியரை குறை சொல்றது அநியாயம்.

இந்து மத வெறியர்கள் வேண்டுமென்றே இஸ்லாமியர்களை குறி வைத்துக் தாக்குவதால், இஸ்லாமிய ஒற்றுமை என்பது கட்டாயத் தேவையாய் இருக்கிறது. இஸ்லாமியர்கள் நெருங்கிப் பழக வந்தாலும் அவர்களை சுத்தம் அற்றவர்களாக, மட்டமானவர்களாக பார்க்கிற பழக்கம் ஜாதி இந்துக்களிடையே இருக்கிறது. அந்த சுயமரியாதை உணர்வின் பொருட்டே இஸ்லாமியர்களோடு மட்டும் பழக வேண்டிய அவசியம் இஸ்லாமியர்களுக்கு நேருகிறது.

மற்றப்படி இஸ்லாமியர் என்பதற்காகவே ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு, மிகவும் திட்டமிட்டது. சன்னி, ஷியா முஸ்லிம்களிடையே நடக்கிற சண்டைகள் மதக்கலவரம் போல் தான் நடக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையின்மையினாலேயே ஈராக்கை அழித்து சதாமை தூக்கிலிட்டது அமெரிக்கா. இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா, மெதினா சவுதி அரேபியாவில் தான் இருக்கிறது. அந்த சவுதி அரேபியாதான் இஸ்லாமிய நாடுகளை அமெரிக்காவிற்குக் காட்டிக் கொடுக்கும் கருங்காலி வேலையைச் செய்கிறது.

மற்றப்படி நாஸ்திகர்களாக நடிப்பவர்கள் இந்துக்களிலும் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உணர்வை ஜாதி ரீதியாக வெளிப்படுத்துகிறார்கள். இந்து உணர்வு என்பது ஜாதி உணர்வுதானே. கடவுள் மறுப்பை, ஜாதி மறுப்பை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளாமையே. சில நேரங்களில் இந்தப் போலி நாஸ்திகர்களால் மதக் கலவரம் கூட வர வாய்ப்பிருக்கிறது.

*

வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘விழிப்புணர்வு’ – 2007 ஆகஸ்ட்   மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

*

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து… என்னுடைய பிற புத்தகங்களுக்கும்..

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையவை:

தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!

முஸ்லிம் பணம் குடுக்குறாங்களா.. எங்க?

இஸ்லாம் எதிர்ப்பு படமும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பும்

இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்

2 thoughts on “பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்காளித் தகராறு!

  1. இந்து உணர்வு என்பது ஜாதி உணர்வுதானே.

  2. “இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம்” என்று சொல்கிறார்கள். நாஸ்திகர்களும் அப்படி சொல்கிறார்கள்.
    அப்படி சொல்வது தவறு. அது முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்தியர்களாகவே கணக்கில் வைத்துக் கொள்ளாமல் சொல்லப்படுகிற வாக்கியம்.
    ‘இந்துக்களின் இருபெரும் இதிகாசங்கள்’ என்று தான் அவைகளைச் சொல்ல வேண்டும்.
    ராமாயணமும் மஹாபாரதமும் இந்தியாவிலேயே நடந்தன. அதனாலேயே இந்தியாவின் இதிகாசங்கள் எனப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு சீறாப்புராணமோ, கிறிஸ்துவர்களுக்கு ஏசு காவியமோ இருந்தாலும் அவை இந்தியாவில் நடந்தவை அல்ல. எங்களுக்குத் தெரியாமல் ஏதாவது கிறிஸ்துவ, இஸ்லாமிய மத இதிகாசங்கள் உங்களுக்குத் தெரிந்தவை இருந்தால் தெரியப்படுத்தலாமே? அவற்றையும் இந்திய இதிகாசங்களாக ஏற்றுக்கொள்ளத் தயார்.
    //இஸ்லாமியர்கள் நெருங்கிப் பழக வந்தாலும் அவர்களை சுத்தம் அற்றவர்களாக, மட்டமானவர்களாக பார்க்கிற பழக்கம் ஜாதி இந்துக்களிடையே இருக்கிறது.// அப்படி எல்லாம் எதுவும் இல்லவே இல்லை.
    எங்கள் அடுக்ககத்தில் இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் எங்களுக்கு நோன்புக்கஞ்சி தருவர். நாங்கள் அவர்களுக்கு தீபாவளி இனிப்புகள் தருகிறோம்.

    இந்து மதச்சடங்குகளில் முக்கியப்பங்கு வகிக்கும் வெற்றிலை வியாபாரத்தில் அதிகம் ஈடுபடுவது ராவுத்தர்கள்தாம். பல ஊர்களில் துணிதைப்பவர்கள் இஸ்லாமியர்கள். பாய் அண்ணே என்று களங்கமில்லாமல் விளித்து உடை தைத்துக் கொள்கிற இந்துப் பெண்கள் எத்தனை லட்சம்பேர்! சில ஊர்களில் பாரம்பரியமான துணி விற்பனையில் புகழ் பெற்ற இஸ்லாமியக்கடைகள் உண்டு. எத்தனையோ இந்துக்கள் அவர்களிடம் துணி வாங்கித்தான் தீபாவளி கொண்டாடுகிறோம். (நான் உட்பட) இது மாதிரி இந்து முஸ்லிம்கள் மனமொத்து வாழ்கிற உதாரணங்கள் எவ்வளவோ காட்ட முடியும். அதை விடுத்து விதிவிலக்காக நடக்கும் எதிர்மறையான விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். இந்துத்துவ வெறியர்கள் மட்டுமே இந்தியா அல்ல. ராமாயணமும் மஹாபாரதமும் மட்டுமே இந்திய இதிகாசங்கள் அல்ல என்று முழங்குகிற நீங்களே இந்துத்துவ வெறியர்கள்தான் இந்தியா என்பதுபோல் பேசுவது நல்ல நகை முரண். உண்மையில் அவர்களுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் தருவது நீங்கள்தான்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading