நான்தான் அப்பவே சொன்னனே..

தி.மு.க. வா – டி.டி.வி. தினகரனா?’
*
உண்மைதான். பா.ஜ.க. , டி.டி.வி. தினகரனுக்கு எதிராக இருக்கிறது. அந்த எதிர்ப்பு அவர் மதவாத எதிர்ப்பாளர் என்பதினால் அல்ல. பா.ஜ.க. தனக்கான ஆதரவு கோஷ்டியை அ.தி.மு.க.வில் உருவாக்கியதில் உருவான எதிர்ப்பு அது.

சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால், இனி அவரை முன்னுறுத்தி கட்சியையும் ஆட்சியையும் பிடிப்பது ‘கவுரமாக’ இருக்காது என்பதால், பா.ஜ.க. மிக நேரடியாகச் சசிகலாவிற்கு நெருக்கமானவர்களையே அவருக்கு எதிராக உருவாக்கி ஆள் பிடித்தது.
இதனால்தான், பா.ஜ.க. விற்கு எதிராகச் செல்ல வேண்டும் என்ற நோக்கமற்ற டி.டி.வி. தினகரன் இயல்பாகவே எதிர்நிலைக்கு தள்ளப்ட்டார்.

அதனால்தான் 18 எம்.எல்.ஏ. களையும், சந்திரமுகி படத்தில் வடிவேலு ரஜினியிடம் இருந்து தன் மனைவியைப் பாதுகாப்பதுபோல் குறுக்கே கை விரித்து அணைகட்டி, பா.ஜ.க. அரசு நம்மை ஆட்சி அமைக்க அழைக்கும் என்று பேராசையோடு காத்திருந்தார்.

தன்னுடைய ஆதரவாளர்களயெல்லாம் இழந்து நிற்கிற தினகரனை, ராஜ தந்திரம் நிறைந்த பெரிய அரசியல் மேதையைப் போல் சித்தரிப்பதில் ‘திமுக எதிர்ப்பு’ மனோபாவமே அதிகம் வினையாற்றுகிறது.

நெடுஞ்செழியனை போன்ற ‘கலைஞர் எதிர்ப்பு திராவிட இயக்க அறிவாளிகள்’ எப்படி எம்.ஜி.ஆரை, ஜெயலலிதாவை வெறிக் கொண்டு ஆதரித்தார்களோ, அதுபோல் தினகரனை தி.மு.க. விற்கு மாற்றாகத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
ஊடகங்களும் தினகரனுக்குத் தருகிற முக்கியத்துவம் அவருக்கானதல்ல. தி.மு.க. வை புறக்கணிக்கிற முக்கியத்துவம். பா.ஜ.க. ஆதரவு ஊடகங்களும் தி.மு.க. வை விடத் தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் தருவதின் ரகசியமும் அதுவே.

அதனால்தான், ஊழலுக்காகச் சுப்ரிம் கோர்ட்டால் அக்யுஸ்ட் நம்பர் 1 என்று உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவை ஆதரித்துக் கொண்டே,
‘நிரபராதிகள்’ என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் தி.மு.க. வை, ஆ. ராசா வை, கனிமொழி யை ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று வெட்கமில்லாமல் விமர்சிக்கிற பார்ப்பன அறிவாளிகளைப் போல்,

அக்யுஸ்ட் நம்பர் 2 என்று தண்டிக்கப்பட்ட சசிகலா தலைமையின் கீழ் ஜாமினில் இருக்கும் தினகரனை ஆதரித்துக் கொண்டே,
ஸ்பெக்ட்ரம் சதியை தகர்த்துக் கம்பீரமாக நிற்கிற ஆ. ராசா வை இன்னும் ஊழல் குற்றசாட்டுடன் வெட்கமில்லாமல் விமர்சிக்கிறார்கள் ‘கலைஞர் எதிர்ப்பு திராவிட இயக்க அறிவாளிகள்’

இது மட்டுமல்லாமல் ஜாதி ரீதியாகத் தினகரனுக்குக் கிடைக்கிற ஆதரவு மிகப் பிரம்மாண்டமானது. அ.தி.மு.க. ஆதரவாளர்கள் மட்டுமல்ல அ.தி.மு.க. எதிர்ப்புப் பிரமுகர்கள், ஊடக வியலாளர்களும்;
காங், பா.ஜ.க. கம்யுனிஸ்ட் ஏன் தி.மு.க. விலும் கூட தினகரனுக்கான ஜாதிய ஆதரவு பொங்கி வழிகிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ‘தினகரன் ஜெயிக்க வேண்டும்’ என்று தி.மு.க.வில் உள்ள சிலரே விரும்புகிற அளவிற்கும் வளர்ந்திருக்கிறது.

ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் உடன்பிறப்புகளே, தினகரனின் வளர்ச்சி, பா.ஜ.க.விற்கு எதிரானதல்ல, தி.மு.க. விற்கு எதிரானது.

23 டிசம்பர் . முடிவுக்கு முதல்நாள் எழுதியது.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading