கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

வுண்டமணியை வில்லனோ, நாயகனோ மிக மோசமாக திட்டினால், கோபத்தில் கவுண்டமணி தன் பக்கத்தில் இருக்கும் செந்திலை ஓங்கி அறைவார்.

“அவுரு திட்டுனதுக்கு, என்னை எதுக்குண்ணே அடிக்கிறீங்க?” என்று பரிதாபமாக புலம்புவார் செந்தில்.

அதுபோல், பிரதமர் மன்மோகன்சிங் நிதி உதவி இல்லை என்று சொல்லிவிட்டாராம், அந்தக் கோபத்தில் முதல்வர் ஜெயலலிதா தனக்கு ஓட்டுப் போட்ட மக்களை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பால், போக்குவரத்து, மின்சாரம் இந்த மூன்றையும் தனி தனியாக விலை ஏற்றி இருந்தால்,

‘இப்படி அடிக்கடி விலை ஏத்துனா நாங்க என்னதான் பண்றது?’

என்று மக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக பேசுவார்கள் என்பதினால், ஒட்டுமொத்தமாக உயர்த்தப்பட்டிருக்கிறது, ‘இரண்டுநாள் புலம்புவாங்க அப்புறம் பழகிடுவாங்க’ என்கிற கணக்குத்தான்.

இப்படி மூன்றையும் ஒன்றாக விலை உயர்த்தியதில், லாபம் அடைந்தவர்கள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டுக் கேட்ட, கம்யுனிஸ்ட் கட்சியிகளும், தமிழ்த்தேசியவாதிகளும்தான். குறிப்பாக கம்யுனிஸ்டுகள் consolidated அடையாளப் போராட்டத்தை நடத்திட்டு போயிடுவாங்க.

பின்ன என்னங்க அம்மா ஆட்சியில ஒரு போராட்டத்தை நடத்திட்டு வீட்டுக்குப் போய் வாசல்ல செருப்பை கழட்டி விடறதுக்குள்ள, அடுத்த ‘நல’ த்திட்டதை அறிவிச்சிடுறாங்க. இந்த வாட்டிதாங்க கொஞ்சம் ஓய்வா இருக்கு.

மிக குறிப்பா தா. பாண்டியனை பெரிய நெருக்கடியில இருந்து அம்மா பாதுகாத்து இருக்காங்க. பாவம் வயசான காலத்துல அவருக்கு எவ்வளவு சங்கடம், அடிக்கடி ‘அம்மா திமுக அரசு க்கு எதிராக அறிக்கை குடுக்கறது. விலையேற்றத்தை விட, அவருக்கு பெரிய மனஉளைச்சலா இருக்கும்.  ஒரு வயதானவரை மனஉளைச்சலில் இருந்து பாதுகாத்த, இந்த அரசை அந்த வகையில பாராட்டலாம்.

நாம இப்படி கிண்டல எழுதுறதைகூட உண்மை என்று நினைத்து,

‘எதிர்க்கட்சிகளின் மீதும் கனிவோடு அக்கறைகொண்டு, மூன்றுக்கும் ஒன்றாக (Three-in-one) விலையேற்றிய புரட்சித்தலைவி அம்மாவின் ஜனநாயகத் தன்மைக்கு பாராட்டுவிழா’ என்று யாராவது கிளம்பிட போறங்க, அதுவேற பயமாக இருக்கு.

**

அதிமுக அரசின் இந்த விலையேற்ற விளையாட்டைவிடவும், பண்பாட்டு ரீதியான திட்டங்கள்தான் மிகுந்த ஆபத்தானதாக இருக்கிறது.

சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு, தமிழ்புத்தாண்டை திருவள்ளுவர் தினத்திலிருந்து மீண்டும் சமஸ்கிருத சித்திரைக்கு ‘இந்துபுத்தாண்டாக’ மாற்றியது. பரமக்குடி தூப்பாக்கிச் சூடு, சித்தரா பவுர்ணமியை சிறப்பாக அறிவிப்பது. நூலகத்தை இடமாற்றுவது, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்திலும் மூவரின் தூக்கிற்கும் மூன்று கோணங்களில் காய் நகர்த்தி கடைசியில் தூக்கையும் அணு உலையையும் ஆதரிப்பது இவைகள்தான் ஒரு நூற்றாண்டுக்கு தமிழ் சமூகத்தை நாசம் செய்துவிடும்.

கம்யுனிஸ்டுகளும், தமிழ்த்தேசியவாதிகளும் எந்த பிரச்சினையை முன்னிறுத்தி, அதிமுகவிற்கு ஓட்டுக் கேட்டார்களோ, அதே பிரச்சினை அதைவிட அதிகமாகியிருக்கிறது.

தேர்தலின்போது, ‘இதைவிட மோசமாகத்தான் இருக்கும்’ என்று சொன்னவர்களை இழிவான வார்த்தைகளால் விமர்சித்த இவர்கள், கொஞ்சமும் நேர்மையற்று.

தங்கள் நிலைபாட்டுக்கு எந்த விளக்கமும் தராமல், அதிமுக அரசை தீவிரமாகவோ, மேம்போக்காகவோ கண்டிக்கிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், அலோசனை சொல்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதாகூட, விலையேற்றத்திற்கான காரணத்தை நியாயப்படுத்தி இரண்டு முறை விளக்கம் அளித்திருக்கிறார். குறைந்த பட்சம் அதுபோன்ற ஒரு பண்புகூட இவர்களிடம் இல்லை.

விலையேற்றத்திற்கும், ‘ஆதிக்க பண்பாட்டு’ ரீதியான திட்டங்களுக்கும் குற்றவாளி அதிமுக அரசு மட்டுமல்ல, அதற்கு ஓட்டுக் கேட்டவர்களும்தான். (ஓட்டுப் போட்ட மக்கள் அல்ல.)

ஆகவே, அதற்குரிய விளக்கத்தை அளித்தப் பிறகே, இவர்கள் அதிமுக அரசை கண்டிப்பது குறைந்தபட்ச அறிவு நாணயம் உள்ள செயல்.

இல்லையேல்….

இவர்களைவிட அண்ணாதிமுகவே மேல்.

தொடர்புடையவை:

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

7 thoughts on “கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

  1. போலி கம்யுனிஸ்டு என்று கூறியிருக்கலாம்…. அல்லது சி.பி.ஐ சி.பி.எம் என்று கூறியிருக்கலாம்….. சமச்சீர் கல்விக்காக கடைசிவரை களத்தில் நின்றதில் புரட்சிகர கம்யுனிஸ்டுகளுக்கு பெரும் பங்கிருக்கிறது

  2. தோழர். che

    //சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டுக் கேட்ட, கம்யுனிஸ்ட் கட்சியிகளும்…// என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading